ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2014

நம் குழந்தைகளுக்கு எப்படி அருள் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்?

1. நம் குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்
நாம் இரக்கம், ஈகை, அன்பு கொண்டு வாழும் பொழுது, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது, அதற்கு மாறாக, அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், வேதனைப்படுகின்றோம்.
இதனால் வேதனையின் உணர்ச்சியாகி,
“அவன் இப்படி இருக்கிறானே சரியாகப் படிக்கவில்லையே,
அவனின் எதிர்காலம் என்னாவது” என்று எண்ணி
இதனைச் சமைத்து, நமது உடலையும் கெடுத்து,
அவனிடத்திலும் கோபப்பட்டு, வேதனைப்படுகின்றோம்.

அவ்வாறு வேதனைப்பட்டு, அவனிடம் “ஏன்டா இப்படி இருந்தால் என்னாவது” என்று சொல்லும் பொழுது, இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும். இதனால் அவன் இன்னும் அதிகமாக படிப்பிலும், செயலிலும் மந்தமாவான்.

“அவன் படிக்கவில்லையே, இப்படிச் செய்கிறான்” என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது? வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய், நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்துவிடுகின்றது.

பிறகு “அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும். அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற உணர்வு கொண்டு, நாம் அடிக்கடி இப்படி எண்ணினோம் என்றால், நாம் எண்ணும் அந்த உணர்வுகள், அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.

தந்தையான நாம் மகனைப் பார்த்து, “டேய் இங்கே வாடா” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்,

அதற்கு மகன், “அன்று என்னைத் திட்டினாய், இன்று என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்” என்பான். இதைத் தடுத்து நிறுத்த, நாம் என்ன செய்ய வேண்டும்?
2. வாலி, சுக்ரீவன்
“துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நான் பெற வேண்டும், என் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள், ஜீவ அணுக்கள் பெற வேண்டும்” என்று எண்ணி, நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை, முதலில் அடக்க வேண்டும்.

பின், தன் மகன், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும், அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் அருள்ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்” என்று
இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டு,
பின் இதன் நிலை கொண்டு
நல் அறிவுரையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

இராமாயணத்தில் என்ன சொல்கிறார்கள்? வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.

சுக்ரீவன், எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். மனிதரில் அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானவர். எல்லாத் தீமைகளையும், நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத்தான், சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர வேண்டும்” என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்ன ஆகின்றது?
மகனால் வேதனைப்பட்ட உணர்வுகள்,
இங்கே நமக்கு முன்னாடி
நமது ஆன்மாவில் இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்
நமக்குள் வலிமையானபின்,
வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை,
நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கி விட்டுவிடும்.

இப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது, அதனின் உணர்வுகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து கொண்டு, மேலே சென்று விடுகின்றது. இதன் மூலம், நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.
3. நம் குழந்தைகளைப் பக்குவப்படுத்தும் முறை
இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின், அவன் கல்வியில் ஞானம் பெறவேண்டும், அருள் ஞானிகளின் அருள்சக்தி பெறவேண்டும், அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி, இதனின் உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

பின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றி சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, சீதா, இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும், காந்தமும், கவர்ந்து கொள்கின்றது. ஆகவே இது பரப்பிரம்மம். எந்த சுவை இணைந்ததோ, அதன் மணம் வரும்பொழுது ஞானம்.

அப்பொழுது, தன் மகனைக் கண் கொண்டு பார்த்து “அவன் அருள்ஞானம் பெற வேண்டும்” என்று, சொல்லால் சொல்கின்றோம்.
அவன் இதைக் காதால் கேட்கின்றான்.
அவனின் கண் கவர்கின்றது.
உயிரால் நுகரப்படும் பொழுது,
நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி
அவனை ஆளச் செய்கின்றது. “ஆண்டாள்”.

நாம் இப்படிச் சமைத்து சொல்லக் கூடிய சொல்லை, சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப, உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

இப்படி, இதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால், நாம் வெளியூருக்கு எங்கும் சென்றால், அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால், அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை, அறியும் தன்மை வருகின்றது.

இப்படி நாம் சொன்னவுடனே, வாயுபுத்திரன் “ஆஞ்சநேயன்” இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி. ஆக, அவன் இராமனின் தூதுவன்.  நாம் எண்ணிய நல்ல எண்ணங்கள் வாயுவாகச் சென்று, அங்கே இயக்குகின்றது.
இதனால், மகன் சோர்விலிருந்து விடுபட்டு, சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறுகின்றான். கல்வியில் சிறந்த ஞானம் பெறுகின்றான். குடும்பத்தில் ஒற்றுமையும், பண்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். குழந்தைகளை இப்படி நாம் பக்குவப்படுத்தி வளர்க்க வேண்டும். எமது அருளாசிகள்.