ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2014

இறந்தபின் உயிரான்மா எங்கே செல்கின்றது? எங்கே செல்ல வேண்டும்?

1. செல்வச் செழிப்புடன் இருந்தாலும், வேதனையுடன் பிரியும் உயிராத்மாவின் நிலை
இன்று ஒவ்வொரு மனிதனும் பெரிய அளவில் தொழில்கள் செய்து வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும், தனது குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் பொழுது, அதை எண்ணி எண்ணி வேதனைப்பட்டு, அந்த வேதனையின் நிலைகளால் உடலில் நோயாகி, அதே உணர்வோடுதான் அந்த உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்து செல்கின்றது.

இவ்வாறு பிரிந்து செல்லும் உயிரான்மா, சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு உடலில் புகுந்து அந்த உடலையும் செயலற்றதாக்கி, அவ்வுடலில் என்னென்ன நிலைகளைச் செய்கின்றது? என்ற இயற்கையின் உண்மை நிலைகளை குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.
2. பிறரைக் குறை கூறியே வாழ்பவரின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மாவின் நிலை
அதே போல நம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தைச் சேமிக்க, கஞ்சத்தனமான நிலைகளில் பிறரைக் குறை கூறியும், வேதனைப்பட்டுக் கொண்டும் பொருள் சேர்த்து வைத்திருந்தவர்கள் அந்த உடல் மடிந்தபின்,
சேர்த்து வைத்த சொத்துக்களை
குழந்தைகள் செலவழித்துவிட்டு அல்லல்படுவதையும்
விளக்கிக் கூறுகின்றார்.

மேலும், யார் குறை கூறும் உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கூறிக் கொண்டுள்ளார்களோ அப்படிக் குறை கூறிய உணர்வுகள் அவ்வுடலிலேயே விளைந்து ஊழ்வினையாகி, அந்தக் குறையான உணர்வுகள் தனக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்து செல்கின்றது.

பிரிந்து சென்றபின், சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப
யார் மீது அதிகமாக குறை கூறியதோ
அந்த உடலுக்குள் சென்று,
அங்கேயும் இதே குறையான உணர்வுகளை விளையச் செய்து,
வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்துவிடுகின்றது.

ஆக, வேதனை என்ற நஞ்சின் தன்மையைக் கூட்டி, மனிதனாகப் பிறக்கும் நிலையை இழக்கச் செய்து, தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுக்குத்தக்க உடல் கிடைக்கும் வரை அந்த உயிரான்மா படும் வேதனைகளை உணர்த்துகின்றார் குருநாதர்.

இதே போன்று, மனித உணர்வுகளை இயக்கும் 1008 குணங்கள் கொண்ட ஆயிரம் விதமான குடும்பங்களைக் காண்பித்து, அவர்கள் செல்வங்களைச் சம்பாதித்தது எப்படிக் கரைந்து போனது? என்ற நிலைகளை விளக்குகின்றார்.
3. யாகங்களையும், மந்திரங்களையும் பதிவு செய்த ஆன்மாக்களின் நிலை
மேலும், பல தெய்வங்களை வணங்கி பல யாகங்களைச் செய்து அதன் வழியில் பொருள் ஈட்டி, அந்த உணர்வின் பதிவுகளைக் கூட்டிக் கொண்ட உயிரான்மா, அந்த உடலை விட்டு வெளியே வந்தபின்
எந்த தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களை ஓதியதோ
அதன் நிலைகளிலேயே
இந்த ஆன்மா சிக்கிச் சுழன்று கொண்டிருப்பதையும் காட்டுகின்றார்.

அந்த உயிரான்மா இன்னொரு உடலுக்குள் செல்ல முடியாதபடி அதிகமாக வேதனைப் பட்டுக்கொண்டு. எவ்வாறு அல்லல்படுகின்றது என்ற நிலைகளையும் காட்டுகின்றார் குருநாதர்.

இதே போல் மந்திரங்களை அதனதன் அடிப்படையில் பதிவு செய்து கொண்டபின், அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் அந்தந்த மதங்கள் காட்டிய வழிப்படி மந்திரங்களை ஜெபிக்கும் பொழுது, இந்த உயிரான்மாக்கள் அங்கே சென்று அவர்களுடைய ஈர்ப்பில் ஆவிகளாகச் சிக்கி, சில நல்ல செயல்களைச் செய்வதையும் காட்டுகின்றார்.

அவ்வாறு நடப்பதை, இது ஆண்டவனின் சக்தி ஆண்டவனின் அற்புத செயல் என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதையும் காட்டுகின்றார் குருநாதர்.
4. குடிப்பழக்கம் உள்ளோரின் உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களின் நிலை
இதே போன்று, செல்வச் செழிப்பும் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சிலர் குறைகளைக் கண்டு தாங்க முடியாதபடி. அதன் நிலைகளில் மது வகைகளை உபயோகிக்கின்றனர்.

மதுவைக் குடித்துக் கொண்டு, அதையே வளர்த்துக் கொண்டு எந்தச் சிந்தனையும் அற்று உடலை விட்டுப் பிர்ந்து செல்லும் அத்தகைய உயிராத்மாக்கள்,
மந்திரக்காரன் கைகளில் சிக்கி
அவன் இட்ட கட்டளைக்கு
தீய வழிகளில் எப்படிப் பயன்படுகின்றது?
என்பதனையும் காட்டுகின்றார்.
5. முள்ளம்பன்றியாக உடல் பெறும் மனித உயிரான்மாக்கள்
பிறிதொரு உயிரான்மாவைக் கைவல்யப்படுத்தி மந்திரமும் மாயமும் தனக்குள் எடுத்து பல அற்புதச் செயல்கள் செய்யும் உயிரான்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின் எங்கே செல்கின்றது?

அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் சென்று, முன்பு தான் எடுத்துக் கொண்ட மந்திர ஒலிகளால் எந்தெந்த அற்புத செயல்கள் செய்ததோ அதே போன்று இந்த உடலுக்குள்ளும் செய்கின்றது.

இவ்வாறு பல அற்புதங்கள் செய்து, தான் புகுந்த உடலில் அதன் வழி கொண்டு தான் முன்பு எவ்வளவு சுக போகங்களை அனுபவித்ததோ (மதுவோ, மாமிசமோ, இதைப் போன்ற நிலைகள்) அதனின் வழிகளில் ஏகபோகமாக வளர்ந்து பல அற்புதங்களைச் செய்தாலும், சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு ஒப்ப இந்த உயிரான்மா முள்ளம் பன்றியாகத்தான் பிறக்க முடியும் என்பதனையும் தெளிவுற விளக்குகின்றார் குருநாதர்.

அவ்வாறு முள்ளம் பன்றியாகப் பிறந்த நிலையில் தனக்கு பாதுகாப்பாக முட்கள் இருந்தாலும், ஒரு பொந்தினுள் அது செல்லும் பொழுது அதனின் முட்கள் குத்தி எவ்வளவு வேதனைப்படுகின்றது என்ற நிலைகளையும் காட்டுகின்றார்.

அதாவது, ஒருவர் மந்திர ஒலிகளைக் கொண்டு எத்தனை பேருக்கு எத்தனை வேதனைகளை உருவாக்கினார்களோ, அதன் நிலைகளில் அந்த உணர்வின் ஒலி அலைகள் முள்ளம்பன்றியாக எப்படிப் பிறக்கச் செய்கின்றது என்ற நிலைகளை உணர்த்துகின்றார்.
6. மனித உடலில் எதைச் சதமாக்க வேண்டும்?
நாம் நமக்கு வேண்டியவர்களாக இருந்தால்
அவர்கள் துன்பப்படும் பொழுது வேதனைப்படுகின்றோம்.

அதே சமயம், வேண்டாதவர்களாக இருந்தால்
துன்பப்படும்போது ரசிக்கின்றோம்.

அவ்வாறு, அவர்கள் துன்பப்படும் அந்த உணர்வை நாம் நுகர்ந்து ரசிக்கும் பொழுது, நமக்குள் அந்த உணர்வு மகிழ்ச்சியை ஊட்டி அவர்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பத்தை மேற்கொண்டார்களோ அந்த உணர்வுகளை நமக்குள்ளும் தோற்றுவித்து, எவ்வாறு செயல்படுகின்றது என்பதனையும் காட்டுகின்றார்.

இந்த நிலைகளையெல்லாம், எமக்கு ஈஸ்வராய குருதேவர் விளக்கிக் கூறி காட்சியைக் காட்டி. இம்மனித உடலிலே
நாம் எதைச் சதமாக வைத்துள்ளோம்?
எதைச் சதமாக்க வேண்டும்?
என்ற உணர்வினை எனக்கு ஊட்டுகின்றார்.

அகஸ்திய மாமகரிஷி காட்டுப் பகுதியில் வாழ்ந்து வளர்ந்தாலும், சந்தர்ப்பவசத்தால் தாய் தந்தையருடைய அருளால் அவரிடத்தில் ஆழமாகப் பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை (வேதனையை) வென்றிடும் உணர்வைப் பெற்றார்.

அகஸ்தியர் அந்த உணர்வின் அலையைத் தனக்குள் ஏற்று, அதனின் நிலைகள் கொண்டு ஒளியின் சிகரமாக அதைத் தனக்குள் வளர்த்து, மெய் ஒளியின் உணர்வாக என்றும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு என்றும் பெருவீடு பெருநிலையான ஒளி சரீரம் பெற்றார் என்ற நிலைகளை குருநாதர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு, அகஸ்தியர் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனபின், அதனின்று வெளிப்படும் சக்திகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் வந்தடைகின்றது.

இதைப் போல, காலத்தால் வெளியிட்ட அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் சக்தி வாய்ந்ததாக உள்ளது.

அந்த உணர்வை உடலுக்குள் சேர்த்துக் கொண்டவர்கள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை வளர்த்து, இந்த மனித வாழ்க்கையில் வந்த துன்பங்களை எண்ணாது, அந்த மெய்ஞானியின் உணர்வைப் பெறவேண்டும் என்ற உணர்வுடன் விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக அவர்கள் உள்ளார்கள் என்ற நிலையினைக் காட்டுகின்றார் குருநாதர்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து, உணர்ந்தறிந்து அதனின் உணர்வின் அலையாக உனக்குள் நிலைத்திடச் செய்.

உன் உணர்வை விண்ணை நோக்கி ஏகி விண்ணின் ஆற்றல்மிக்க தன்மையை நீ எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று குருநாதர் உணர்த்துகின்றார்.
7. நமது உயிரான்மா அடைய வேண்டிய எல்லை - சப்தரிஷி மண்டலம்தான்
ஆகவே, இதை உங்களுக்குள் பதிவு செய்யும் விதமாக, நமது குருநாதர் எமக்குள் பதிவு செய்ததை இன்று உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

உங்கள் செவிப்புலனறிவால் கேட்டுணரும் இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள் இயங்கும் நிலைகள் கொண்டு உங்கள் புலனின் ஈர்ப்புக்குள் இந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு, ஊழ்வினையாகப் பதிவு செய்யும் நிலைக்குத்தான் யாம் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் பற்றுடன் பற்றும் பொழுது, உங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி, ஒளியாக மாற்றிடும் திறன் நீங்கள் பெற்று, ஒளியான உணர்வுகள் விளைந்து,
உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும்  
சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
அழியா ஒளி சரீரம் பெற்று,
பிறவியில்லா நிலை அடைந்திட முடியும்.

என்றும் பதினாறு என்று ஆகி, ஏகாந்த நிலையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திடும் நிலை பெற முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம். மனிதனின் எல்லை, அழியா ஒளி சரீரம் பெறுவதுதான். எமது அருளாசிகள்.