ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2014

இறந்தவர்கள் பிறவியில்லா நிலை (பேரின்ப நிலை) அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா?

1. பனிப்பாறை நிறைந்த இடத்திற்கு எம்மை அனுப்பினார் குருநாதர்
நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர், எம்மைத் தெளிவாக்க இமயமலைக்கு அனுப்புகின்றார். பனிப்பாறைகள் நிறைந்த இடம். நான் சைனா (CHINA) பார்டர் பக்கம் போகவேண்டும் என்று கட்டளையிட்டார். நான் அதன்படி போய்க் கொண்டிருக்கின்றேன்.

அப்படிப் போகும் பொழுது அந்த உறைபனிகள் எம்மைப் பாதிக்காமல் இருப்பதற்காக, துருவ நட்சத்திரத்தைத் தியானிக்கும்படி செய்தார்.

அதை சதா என் உடலில் எடுக்கும் பொழுது,
அந்த உணர்வலைகள் எமக்குள்
ஒருவிதமான வெப்பத்தை உண்டு பண்ணியது.
ஆகவே, குளிர் எம்மைப் பாதிக்கவில்லை.

ஏனென்றால், வெறும் கோவணத் துணியுடன் தான் எம்மை அங்கே செல்லும்படி செய்தார் குருநாதர். அந்த அருள் உணர்வுகளை உனக்குள் செலுத்தும் பொழுது, அந்த வெப்பத்தின் தணல் கூடி, குளிர் பாதிக்காமல் நீ எப்படி பதனமாகச் செல்கின்றாய் என்று அவர் உபதேசித்த அதன் வழியில் செல்கின்றேன்.

ஆனால், ஒரு மலைக்கு ஒரு மலை போகும் பொழுது எனக்கு ஒரு பாதையாகத்தான் தெரிகின்றது. நான் நடந்து சென்று போய்க் கொண்டிருந்த சிறிது நேரத்தில் பார்த்தால், “திடு., திடு., திடு.,” என்று பெரிய ஒலி ஓசைகள் கேட்கின்றது.

நான் நடந்து வந்த பாதை எதுவோ, அந்தப் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரிய பள்ளமாகத் தெரிகின்றது. பார்த்தால் இதற்கும் அதற்கும் தொடர்பு இல்லாது, நான் மறுபடியும் எப்படி இதன் வழியில் திரும்பப் போகின்றேன் என்ற அந்த சந்தேக உணர்வுகள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் நான் நடந்து வந்த நேரத்தில் இப்படி உடைந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும்? என்ற இந்த உடலின் இச்சை வருகின்றது. (இது குருவினுடைய பரிசீலனை)

நாளைக்கு, திரும்பப் போகவில்லை என்றால் மனைவி, பிள்ளைகள் என்ன செய்யும்? என்று இந்த மனதில் இத்தனை எண்ணங்களை நான் (ஞானகுரு) எண்ணும் பொழுது, அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?
2. உன் உயிர் போய்விட்டால் எதை நீ காக்கப் போகின்றாய்? கேட்கிறார் குருநாதர்
அந்த மாதிரி ஆகிவிட்டால், என் மனைவி குழந்தைகளை எல்லாம் எப்பொழுது நான் பார்ப்பேன்? என்னுடைய கடைசிப் பையன் தண்டபானி எப்பொழுதும் என் பேரைச் சொல்லிக் கொண்டிருப்பான். அவனை எப்பொழுது பார்ப்பேன்? என்றெல்லாம் என் நினைவுகள் சென்றது.

அப்படி நினைத்தவுடனே, இங்கே என் உடல் “கிர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. குரு சொன்ன வழியில் அருள் ஒளி பெற்றால் அந்த உறைபனி குளிர் பாதிக்காது, உடலின் வலு பெறுகின்றது. இங்கே வரும் தீமைகளிலிருந்து விடுபட முடிகின்றது.

அங்கே வீட்டின் நினைவு உனக்குள் வரப்படும் பொழுது உடல் இல்லையென்றால் நீ எதைக் காக்கப் போகின்றாய்? என்று குருவினுடைய எதிரொலி வருகின்றது.

உன்னுடைய நினைவு அங்கே சென்றது. உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால், இந்த உடல் வேண்டும். இந்த உடல் வேண்டுமென்றால் நான் சொன்னதை நீ நுகர்தல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை உன் உடலில் விளைந்தால் தான், அந்த வலு கொண்டு உன்னைக் காத்துக் கொண்டபின்தான் உன் குடும்பத்தையும், குழந்தைகளையும் காக்க முடியும்.

ஆகவே, நீ உலகைக் காக்க வேண்டுமென்றால் முதலில் உன் உடலைக் காக்க வேண்டும். உன் உடலைக் காக்க நான் சொல்லும் அருள் ஒளியை உனக்குள் கூட்டு. அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் பெருக்கு.

உறைபனியின் குளிரால், உன் உடல் இரையும் அந்த நிலைகளை நீக்கு. இருள் என்ற நிலைகளைக் கரைத்துவிடு.

உனக்குள் பற்றென்ற நிலை வரும் பொழுது, உன் குழந்தையை எண்ணி அவன் என்ன செய்வான்? என்ற வேதனையான விஷம் உனக்குள் புகாது அருள் ஒளி பெற்று, இந்த உணர்வினைக் கலந்துவிடு. அந்தத் தீமைகளைக் கரை.

ஆக, உடலில் இரைச்சலாகி சிறிது நேரத்தில் உயிர் போய்விடும் என்ற நிலையில் நீ எங்கே போகப் போகின்றாய்? என்று கேள்வியைக் கேட்கின்றார் குருநாதர்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்!

இப்பொழுது, சிறிது நேரத்தில் நடுங்கி உன் உயிர் போய்விட்டதென்றால், ஒரு நொடிக்குள் உன் ஆசையெல்லாம் என்ன ஆகப் போகின்றது?

இந்த உயிர் போய்விட்டதென்றால், பொன்னடி பொருளை எல்லாம் நீ என்ன செய்யப் போகின்றாய்?

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ
மனமே இனியாகிலும் மயங்காதே

நான் சொன்ன அருளை உனக்குள் பெருக்கு. அந்த உணர்வின் வலுவை உனக்குள் ஏற்று, அருள் ஒளி என்ற நிலையில் உனக்குள் உருவாக்கு.

அவர்கள் அருள் ஆனந்தம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழவேண்டும் என்ற உணர்வை உனக்குள் கூட்டு. அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் என்று அதனுடன் உன்னுடன் இணைத்துக் கொள். அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணு. இந்த உடலுக்குள் மகிழ்ச்சியாகும்.

அவர்கள் என்ன செய்வார்கள்? என்று சோர்வடையப்படும் பொழுது, உன்னையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. சோர்வடைந்து வேதனையானபின்
உணவு உட்கொள்ள முடியுமா?
உன் செயல்களைச் சீராகச் செயல்படுத்தமுடியுமா?
குழந்தைகளை உன்னால் காக்க முடியுமா?

தொழில் இல்லையென்றால் நீ எதைச் செய்யப் போகின்றாய்?
உடலில் வலு இல்லை என்றால் நீ எதைச் செய்யப் போகின்றாய்?
ஆகவே, நீ அருள் ஒளி பெறும் உணர்வினைப் பெறு.
3. இறந்தவர்கள் பிறவியில்லா நிலை (பேரின்ப நிலை) அடைய வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை
செல்வம் வைத்துள்ளோர் எத்தனையோ பேரை அப்பொழுது காட்டுகின்றார். கோடி கோடி செல்வம் வைத்திருப்போரின் நிலைகளும் இந்த உடலை விட்டுச் சென்றபின்,
அவர்கள் எதை எடுத்துச் செல்கின்றனர்?
எந்த வாழ்க்கை வாழுகின்றனர்?

அவர் உடலை விட்டுப் பிரிந்தபின், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அழுகின்றனர் இவ்வளவு செல்வத்தைச் சம்பாதித்தீர்கள். எங்களையெல்லாம் காத்தீர்கள். இப்பொழுது போய்விட்டீர்களே என்றுதான் அலறுகின்றனர்.

ஆக, இங்கே துன்பப்பட்டோம், செல்வத்தைத் தேடினோம். பின், இன்பம் வரவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

இந்த உடலை விட்டுச் சென்றபின், “எனக்குச் சுகத்தைக் கொடுத்தாய், செல்வத்தைத் தேடினாய், என்னை விட்டுச் சென்றுவிட்டாய்என்று எண்ணுகின்றனர்.

எத்தனையோ துன்பத்தைப் பட்டு இந்தச் செல்வத்தைத் தேடினாய். ஆகவே,
இந்த உடலை விட்டுச் சென்றபின்
நீ பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்,
பேரின்பம் என்ற நிலையை நீ பெறவேண்டும்
என்று தான் எண்ண வேண்டும்.
4. சிவலோகம், இந்திரலோகம், பரலோகம், சொர்க்கலோகம்
இமயத்தைக் காட்டி, அங்கே உயிரான ஈசனிடம் நாம் நுகரும் உணர்வுகள அனைத்தையும் சிவலோகமாக மாற்றுகின்றது. இந்த உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் பரலோகமாக இருக்கின்றது.

அதை நுகரப்படும் பொழுது சிவலோகமாக மாறுகின்றது. உடலை மாற்றும் அந்த உணர்வாகவே மாற்றுகின்றது நமது உயிர்.

ஆக, நுகரும் அனைத்தும் இந்த உடலுக்குள் செல்லப்படும் இந்திரலோகமாக மாறுகின்றது. உணர்வின் கருவாக மாறுகின்றது. சிவலோகத்தில் உடலை உருவாக்கும் உணர்வின் தன்மை இந்திரலோகமாக மாறுகின்றது.

அருள் ஒளி பெற்று, என்றும் சொர்க்கம் என்ற நிலையில் ஏகாந்த நிலை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை உனக்குள் சேர்த்து, இருளை அகற்றிப் பொருள் காணும் உணர்வினை உன் குழந்தைகளுக்கு ஊட்டு.

அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்று எண்ணு. அந்த ஏகாந்த நிலையை நீ பெறு. உன்னுடைய இந்த நினைவாற்றல் உன் குழந்தையை நலமாக்கச் செய்யும்.

மாறாக, உன் குழந்தையை எண்ணி வேதனை கொண்டால் உன் உடலே அவன், ஆக இந்த வேதனை உணர்வுகள் அவனுக்குள் வரும் பொழுது, அவனும் சிந்தனை அற்ற நிலைகள் அடைகின்றான்.

நண்பன் என்ற நிலையில் ஒருவருக்கொருவர் எண்ணும் பொழுது விக்கல் ஏற்படுகின்றது. நன்மை பயக்கின்றது. குழந்தை என்ற பாசத்தில் வரப்படும் பொழுது, துயரென்ற உணர்வை உன் குழந்தையின் பால் எண்ணும் பொழுது அந்த உணர்வே அவனையும் இயக்கும்.

ஆகவே, அவன் அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வை நீ ஊட்டு. அந்த அருள் ஒளி உனக்குள் கூடுகின்றது. ஆக, இங்கே சிவலோகத்தில் ஒளி என்ற உணர்வைப் பெறும் இந்த சிவமாக மாற்றுகின்றது. அந்த உணர்வின் தன்மை இங்கே உடலுக்குள் இந்திரலோகமாக மாறுகின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நீ எடுத்தால் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்குகின்றாய். ஆக, இந்திரலோகத்துக்குள் சொர்க்கலோகம் என்ற நிலை உருவானால், இந்த உடலில் என்றும் ஏகாந்த நிலையை அடைகின்றாய்.

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் உனக்கு சதமாமோ?

இந்த நிலையில்லா உலகத்தில் நீ எதை சதம் என்று எண்ணுகின்றாய்? என்று குருநாதர் எம்மைக் கேட்டு அங்கே துயரப்படும் பொழுதெல்லாம் இத்தகைய உணர்வை எமக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நிலையானதா? இந்த உடலும் நிலையானதா?

உடல் இருக்கும் பொழுது நாம் எதைப் பற்றுதல் வேண்டும்?

என்றும் ஏகாந்த நிலைகள் பெற்ற அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும், என் மனைவி பெறவேண்டும், எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும், இரு உயிரும் ஒன்றிட வேண்டும். எங்கள் பார்வையில் இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். மனைவிக்கு எது வேண்டும்? அருள் ஒளி பெறவேண்டும். மகிழ்ச்சி பெறும் சக்தி பெறவேண்டும். மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் நிலை பெறவேண்டும்.

இப்படி, அருள் ஞானம் பெறவேண்டும் என்று அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலைதான் வரவேண்டும் என்று உணர்த்துகின்றார் குருநாதர்.
5. எமலோகம் எது?
ஆனால், வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது, நீ எமலோகத்துக்கு அல்லவா போகின்றாய். ஆக அந்த உணர்வின் தன்மை பெற்று உன் குழந்தைகளைப் பற்றி எண்ணுகின்றாய்.

அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று வேதனை என்ற உணர்வைத்தான் அங்கே உருவாக்க முடியுமே தவிர, நீ எமலோகத்துக்குச் செல்கின்றாய்.

ஆகவே, இன்று இந்த உடலிலிருந்து உன் உயிர் சென்று விட்டால் உடல் இல்லை. உடல் இல்லையென்றால் நீ எதை நினைக்கப் போகின்றாய்?

தவிர, வேதனை என்ற உணர்வை நுகர்ந்து அதை நீ நினைத்தால் அங்கே வேதனைப்படும் உணர்வே வருகின்றது. சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது.

உடலுக்குள் விளைய வைத்த உணர்வு கொண்டு
உன் பையனை நீ எண்ணினால்,
அவன் உடலிலேதான் புக முடியும்.
வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது
அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது, இந்த விஷம் என்ற உணர்வுகள் வளரத் தொடங்குகின்றது.

ஆக, உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால், நீ அவனுள் செல்கின்றாய்.

உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு,
அவனையும் காக்க முடியாத நிலையில்
நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும்.
இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின், நீ எந்த வேதனைப்பட்டாயோ, வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது. ஆக, எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி,
கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட
பாம்பாகவோ, தேளாகவோ, புலியாகவோ
நீ பிறக்கப் போகின்றாயா?

ஆகவே, உனது எண்ணம் எதுவாக இருக்க வேண்டும்? உனக்கு எது தேவை? என்ற நிலையில் அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
7. துன்பத்திலும் இன்பம் எவ்வாறு காணவேண்டும்? என்று உணர்த்தினார் குருநாதர்
“துன்பத்திலும் இன்பம் எவ்வாறு காண வேண்டும் என்று அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு,
துன்பம் என்ற நிலைகள் மறைந்து,
பேரின்பம் என்ற நிலை பெற்ற
அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. ஆக, சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

எனவே, அந்த உணர்வின் தன்மை ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம், அதாவது அழியா ஒளி சரீரம் நீ பெறுவாய். அருள் ஒளி பெறுவாய். அருள் ஆனந்தம் பெறுவாய். அனவரும் அதைப் பெறவேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

ஆகவே, பரலோகத்திலிருந்து
இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி,
இந்திரலோகமாக இருந்து
சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

வேதனை, வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய். மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா? அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா?

பேரொளி பெற்று பேரானந்தம் பெற்று, ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து, அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே அந்த ஏகாந்த நிலை பெறுகிறாயா? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே, நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெறவேண்டும், உன் குடும்பம் நலம் பெறவேண்டும், உலகம் நலம் பெறவேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால், நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

அந்த அருள் ஒளி பெறுவாய்,
பேரின்பம் பெறுவாய், பெருவாழ்வு வாழ்வாய்.
பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும்
பெருவாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய் என்று, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

ஆகவே, குரு அருள் நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்று, பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து, இந்த சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்ற வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் பெற்று, பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.