ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2013

மழை நீர் நன்றாகப் பெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

1. மழை ஏன் சரியாகப் பெய்வதில்லை?
இன்றைய விஞ்ஞான அறிவால், பல விஞ்ஞானக் கருவிகளை இயக்குவதன் மூலம், அமில நிலைகள் ஆவியாக மாறுவதால், மேகங்கள் கரைந்து சரியான காலங்களில் மழை பெய்வதும் குறைகின்றது. சரியான காலங்களில் மழை பெய்யாததால், விவசாயம் செய்ய முடியாது உணவு பற்றாக்குறையும் ஏற்படுகின்றது.

முந்தைய காலங்களில், மழை பெய்தால் தாவர இனங்களுக்கு அது ஊட்டச் சத்தாக அமைந்தது. குழந்தைகள் மழையில் நனைந்தால், உடலில் இருக்கக் கூடிய விஷக் கிருமிகள் மடிந்து, உடலில் சத்தான அணுக்கள் உருவாகியது. 

இன்றைய காலங்களில் நாம் மழையில் நனைந்தால், டைபாய்டு சுரம், வைரஸ் சுரம், விஷ சுரம் போன்ற நிலைகள் மழை பெய்த காலத்திலேயே வந்து விடுகின்றது.

முந்தைய நிலைகளில், மனிதர் அவருக்குள் உயர்ந்த எண்ணம் கொண்டு விவசாயம் பெருக வேண்டும், நாடு செழிக்க வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டனர்.

இன்றைய நிலைகளில், ஒருவருக்கு விவசாயம் நன்றாக விளைந்தால் அடுத்தவர்களின் நிலைகள், அவருக்கு இப்படி விளைச்சல் உள்ளதே என்ற உணர்வு கொண்டு, விவசாயத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்துகின்றனர். வெறி கொண்ட உணர்வு கொண்டு செயல்படும் நிலையிலும் உள்ளனர்.

இன்று சனிக்கோளின் உணர்வுகள், அது எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து கொண்டு பூமியை அணுகிய நிலைகளில், அது நமக்குள் பட்டவுடன் எதிர் நிலையாகி, தென்றல் காற்றாக மாறுகின்றது.

இன்று நமக்கு தண்ணீர் வறட்சியாகும் பொழுது தண்ணீரைத் தேடி அலைவது போல், முதலில் வெப்பத்தால் ஆன அணுக்கள் வெப்பமாகும் பொழுது, சனிக் கோள் உமிழ்த்திய நிலைகள் வந்தவுடன் சுழற்சியாகும். முதலில் சனிக் கோளின் உணர்வு ஒவ்வொரு அணுக்களிலும் பட்டு, உயிர் அணு போன்று அது மாறும்.(உதாரணமாக நாம் அடுப்பில் ஒரு பொருளை வேக வைத்தால் எப்படியோ அப்படி).

இவ்வாறு பூமியில் காற்று அலைகள் அதிகமாகும். அது ஒவ்வொன்றும் அசைந்து ஒன்றுடன் ஒன்று இசைந்து, இதனின் நிலைகள் மாறி, ஆடி மாதம் பெரும் காற்று வீசும். அதே சமயம் மேகங்களாக கூடி வரும். மனிதனுக்குள் தான் மழைக்காக வேண்டி காய்ந்த நிலைகளில் வெப்பத்தின் தன்மை பூமிக்குள்ளாகி, நீரெல்லாம் ஆவியாக மாறி விண்ணைச் சென்றடையும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் லேசர் என்ற நிலைகளாலும், ரேடியோ அலைகளாலும், எலக்ட்ரானிக் துணை கொண்டு ஒளிபரப்பப்படும் TV அலைகளாலும், எதிர் நிலையான நிலைகள் கொண்டு, நஞ்சின் தன்மை ஏற்பட்டு, மேகங்கள் நீராக வடிவது குறைகின்றது.

ஒரு பக்கம் இந்த உணர்வலைகள் பட்டு,
மழையில்லாமல் வறட்சியாகவும்,
மறுபக்கம் மழை கொட்டு கொட்டு என்று கொட்டி,
பெரும் சேதத்தை விளைவித்து
யாருக்கும் பயனற்றதாக்கி நாட்டைக் கெடுக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான அறிவாக இருந்தாலும், இன்று மனிதன் வேகமாக இயங்கும் சூழ்நிலை உள்ளது. 
ஒரு வேலையாக வெளியில் செல்லும் பொழுது
ஒரு துளி மழை விழுந்தால்,
சனியன் பிடித்த மழை இந்த நேரத்திலா வரவேண்டும், என்ற உணர்வைத் தான் வெளிப்படுத்தும் நிலையில் உள்ளோம். 

இவ்வாறு மழை பெய்தால், ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாது, “சனியன் தொலைந்து போஎன்று நாம் ஒலிபரப்பு செய்வதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது. 

இது சிறுகச் சிறுக விளைந்து, மழை பொழியும் மேகத்திற்குள் பட்டவுடன்,  மழையும் பெய்யாது, நமது உடலுக்குள்  உள்ள  நல்ல குணத்தையும் மறைக்கின்றது.

நாம் எண்ணுகின்ற தீய உணர்வின் சத்து நமது உடலுக்குள் விளைந்து, அது உயிராத்மாவாகி விடுகின்றது. எதை நாம் அழித்திட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ, அதுவே அழிக்கும் சக்தியாக மாறிவிடுகின்றது.

அதுவே நமக்குள் நோயாகி இந்த மனித உடலை அழிக்கின்றது. இன்னொரு மனித உடலுக்குள் போனாலும், அந்த உடலையும் அழித்திடும் உணர்வாக அது விளைகின்றது.

ஆகவே மனிதனான நாம் இப்பொழுது மழை பெய்யும் பொழுது தொலைந்து போ என்று எண்ணும் பொழுது அது உடலில் விளைந்த உணர்வுக்குள் கலந்து தொலைந்து போகச் செய்யும் உணர்வாக உடலில் இருந்து வெளிப்படுகின்றது. அவ்வாறு வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
 
2. மழை நீர் நன்றாகப் பெய்ய நாம் செய்ய வேண்டியது என்ன?
அன்று மெய்ஞானிகள், ஆடிப்பெருக்கு அன்று நாம் செய்யவேண்டியது என்ன என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். 
இங்கு நல்ல மழை நீர் பெய்ய வேண்டும், 
நாடு செழிக்க வேண்டும்,
நற்பயிர் விளைய வேண்டும்.
அதை உணவாக உட்கொள்ளும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறவேண்டும்.

இந்த மகிழ்ச்சியான உணர்வு, மக்கள் மத்தியில் அறிந்திடும் உணர்வின் ஒளியாக மாறவேண்டும். இது பெருக வேண்டும்,  என்ற எண்ணங்களை எண்ண வேண்டும்.

நாம் இந்த உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது, நஞ்சு கொண்ட நிலையை நீக்கி, இந்த உணர்வின் தன்மை விண்ணை எட்டி, நல்ல மழை நீராகப் பெய்யும் நிலை ஏற்படுகின்றது. 

இவ்வாறு இத்தகைய உணர்வின் தன்மையை, நமக்குள் வினையாக்க வேண்டும். அந்த வினைக்கு நாயகனாக, உடலாக்க வேண்டும். அந்த எண்ணத்தின் தன்மையை சுவாசித்து, அதன் நிலைகளிலேயே செயலின் தன்மை இருக்கவேண்டும் என்று மெய்ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்.

அதன் நிலைகொண்டு, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்கி, ஒவ்வொரு மக்களும் நலம் பெறவேண்டும், பயிர் வகைகள் பெருக வேண்டும். எல்லோருமே பசி போக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தை மனப் பெருக்காக எண்ண வேண்டும்.

நம்முடைய எண்ணங்களில் உலகம் நலம் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படரவேண்டும். நல் உணர்வு பெற்ற, மக்களின்  உணர்வுக்குள், நல்ல உணர்வுகள் நிலைத்து நிற்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால், இந்த நாடும், உலகமும், உலக மக்களும் நல்ல நிலை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தினை நினைத்து, அந்த ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்த வேண்டும்.

அந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்கி,
இந்த சூரியனின் காந்த சக்தியில் கலந்து, 
நாம் எண்ணிய உணர்வுகள், 
மேகங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து,
நல்ல மழை நீராகப் பெய்து,  ஏரி குளங்கள் நிரம்பி
தாவர இனங்கள் செழித்துப் பெருகவேண்டும்  என்று,  ஆடிப் பெருக்கை இப்படி வணங்கச் சொன்னார்கள் அன்று.