ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2013

நம்நாடு தான் உலகைக் காக்கப் போகின்றது

1. நம்மிடம் உள்ள தீமைகளை, முதலில் நீக்கிப் பழகவேண்டும்
நாம் யாரிடமாவது நன்றாகப் பழகிவிட்டால், அவரை ஏமாற்றி அவரிடமிருந்து பணம் பெறுவதற்குத்தான் வழி காண்கிறோம். அல்லது ஏமாற்றி ஏதாவது ஒரு பொருளைப் பெறுவதற்குத்தான் கற்றிருக்கிறோம். ஆக, போதுமென்ற மனம் நமக்கு இல்லை. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர். அதன் வழிதான் நமக்குள் செயலாக்கும்.

இதனால் எதிர்காலம் எப்படியாகின்றது என்கின்ற பொழுது, விஷத்தன்மைகள் தான் அதிகமாகப் பரவுகின்றது. ஆக, மக்களாகிய நாம் எப்படி இருக்கின்றோமோ அது போன்றுதான் நாடும் அரசும் இருக்கும்.

ஏனென்றால், மக்களில் இருந்து தேர்ந்தெடுத்துதான் ஆட்சி புரிகின்றவர்கள் வருகின்றார்கள். ஆகவே, நாடு நலமாக இருக்க வேண்டுமென்றால், நல்ல ஒழுக்கங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.

ஏனென்றால், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒற்றுமை மக்களிடம் இருந்தால் கண்டிப்பாக நல்லது நடக்கும். ஆகவே, நம்மிடம் உள்ள தீமைகளை முதலில் நீக்கிப்பழக வேண்டும்.
2. கடைசி நிலையில் இருக்கின்றோம்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று இன்று நாம் பாடுகின்றோம்தென் நாட்டில் தோன்றிய அகஸ்தியர்தான், இந்த பூமியைத் திசை திருப்பி, பூமியை ஒரு நிலைப்படுத்தியுள்ளார்.

ஆனால், இன்று விஞ்ஞான அறிவால் பூமி திசை மாறும் நிலைக்கு வந்தாகிவிட்டது. ஒரு பக்கம் அணுகுண்டுகளும், மற்றவைகளும் வெடிக்கப்படும் பொழுது, ஒரு பக்கம், மேகங்கள் கூட்டம் அதிகமாகின்றது. அப்பொழுது பூமியின் எடை அதிகமானால் பூமி திரும்பக்கூடிய நிலை வருகின்றது.

அதே சமயம், ஓசான் திரை கிழிந்து கதிரியக்கத்தன்மை பூமியில் பரவுகின்றது. ஆகவே கடல் நீர் பெருகுகின்றது. கடல் நீர் பெருகும் பொழுது நிலங்கள் குறைகின்றது.

ஆனால், மக்கள் பெருக்கம் அதிகமாகின்றது.
மழை பெய்வது குறைகின்றது.
இந்த நிலைகளில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கடைசி நிலையில் இருக்கின்றோம்.
ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும்?

ராமாயணத்தில், இராமர் என்ன செய்தார் என்று காண்பிக்கின்றார்கள். இராமர் பூஜைக்கு காலதாமதமாகிவிட்டது என்று, மணலில் சிவலிங்கம் அமைத்து, இராமேஸ்வரத்தில் வணங்குகின்றார்கள். இது எண்ணத்தால் உருவானநிலை, என்று காண்பிக்கின்றார்கள்.

கோடிக்கரையில் நாம் இருக்கின்றோம். ஆகவே, நாம் இந்த உடலைவிட்டுச் சென்றுவிட்டால் பெற வேண்டியது எது? பிறவியில்லா நிலையை பெறுவதே, ஆகவே, பிறவியில்லா நிலை பெறுவது எங்ஙனம் என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.
3. அகஸ்தியரைப் போன்று மேகத்தைக் கவர்ந்து, மழை நீராகப் பெய்யச் செய்யவேண்டும்
நமது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் பார்க்கும் குடும்பம் எல்லாம், சந்தோஷமாக இருக்க வேண்டும். எங்கள் தெருவில் உள்ள குடும்பத்தினர் அனைவரும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்பொழுது, நீங்கள் குடியிருக்கும் தெருவில், குடியிருக்கும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்த உணர்வுகள் பெறுவார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் பொறுமையும், பொறுப்பும் பெறும்பொழுது, காற்று மண்டலம் தூய்மையடைகின்றது. காற்று மண்டலம் தூய்மையடைந்த இடத்தில், விவசாயம் நன்றாக இருக்கும்.

உதாரணமாக, மக்கள் சங்கடமான நிலைகளில் இருக்கும் பொழுது அந்த ஊர்களில் மழை பெய்யாது. காரணம்,
சங்கடமான உணர்வின் தன்மை
மேகங்களில் கலக்கப்படும் பொழுது,
மழை மேகங்கள் கலைந்து விடுகின்றன.

பக்கத்து ஊரில் மழை பெய்யும். ஆனால், இங்கே மழை பெய்யாது. இதைப்போன்று,
நாம் எடுத்துக்கொண்ட உணர்வுக்குத்தக்க
மழை மேகங்கள் கூடும்
அல்லது விலகும்.

வேதனையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது, மழை பொய்த்து தரித்திரமே வளரும். இவைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும்,
நமது ஊர் நன்றாக இருக்க வேண்டும்.
நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை,
முழுமையாகப் பாய்ச்சிப்பழக வேண்டும்.

நாட்டில் வாழ்வது யார்? நாம் தானே, நாட்டில் ஜாதி, மதம், இன பேதங்களை வளர்த்து, நாம் சண்டையிடும் பொழுது, இதனின் உணர்வுகள் மேகங்களை கலைக்கச்செய்து, மழையில்லாமல் செய்துவிடுகின்றது.

ஒருமுறை குருநாதர், அகஸ்தியர் தியானம் செய்த மலைப்பகுதிக்கு எம்மை போகச்சொன்னார். அகஸ்தியர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் சக்தி பெற்றது. அவருடைய பாதம் பட்ட இடமெல்லாம், மேகத்தைக் கவர்ந்து நீராக மாற்றும் தன்மை வாய்ந்தது.
குருநாதர் போகச்சொன்ன இடத்தில், மலை உச்சியில் தண்ணீர் இருந்தது. ஆனால், மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை. ஆக, மலை உச்சியில் தண்ணீர் இருக்கிறதென்றால் காரணம் என்ன?

குருநாதர் எம்மை ஒரு இடத்தில் அமரச்சொல்லி, “சங்கடமாக, வெறுப்பாக, மற்றவர்களை மோசமாக நினைத்துக்கொண்டே இருஎன்று கூறினார்.

யாமும் குருநாதர் சொல்லியவாறு எண்ணிக்கொண்டிருந்தோம். அது சமயம் மேகங்கள் வருகின்றன. ஆனால், வந்த மேகங்கள் பிரிந்து சென்றன. ஈரப்பசையே அற்றுப்போகின்றது.

இப்படி மனிதர்க்கு உண்டான உணர்வுகள், மழை மேகங்களை எப்படி விலக்குகின்றது? என்பதை, குருநாதர் எமக்கு அங்கே தெளிவாக உணர்த்தினார்.
4. உலகைக் காக்கும் ஆற்றலை நாம் எப்படிப் பெறுவது?
இவைகளையெல்லாம் யாம் அறிவதற்காக, காடு மலை என்று பல பகுதிகளுக்கு அலைந்தோம். ஆனால், யாம் பெற்ற பேருண்மைகளை உங்களிடத்தில் எளிதாகப் பதிய வைக்கின்றோம்.

நமது தியான வழி அன்பர்கள் எந்தெந்த ஊர்களில் இருக்கிறீர்களோ, அந்தந்த ஊரில் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

நீங்கள் உங்களிடத்தில் அருள்ஞான உணர்வுகளைப் பெருக்கி, எந்தெந்த ஊரில் இருக்கின்றீர்களோ அந்த ஊர் மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி பெறவேண்டும். ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்று எண்ணி ஏங்கி தியானியுங்கள். இதன் தொடர்கொண்டு,
அவ்வூரில் மழை சீராக இருக்கும்,
விவசாயம் செழித்து வளரும்.

நமது ஊரும், நாடும் நன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், அரவணைத்து வாழும் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இதில் அந்த நாடு, இந்த நாடு என்று பிரித்து விடக்கூடாது. நாட்டு மக்கள் அனைவரும், ஒற்றுமை உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாகப் பெருகும் பொழுது, உலகத்தைக் காக்கும் தன்மையை நாம் நிச்சயம் பெறமுடியும். எதிர்காலத்தில், தமிழ்நாடுதான் உலகைக் காக்கப் போகின்றது.