ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2013

அருள் உணர்வுகளை, எளிதாக நமக்குள் பெருக்கும் வழி

1. அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கருவாக்கும் நிலை
நீங்கள் ஏதேனும் வேலையாக, வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள், அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால், அது சமயம்,
அகஸ்திய மாமகரிஷிகளையும்,
அவர் துருவ மகரிஷியான நிலையையும்,
துருவ நட்சத்திரமான நிலையையும்,
இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.
அதனின் உணர்வுகளை நாங்கள் பெறவேண்டும்
என்று எண்ணியபின், உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.
                                  
இந்த முறையில், உங்களில் நீங்கள் பதிவு செய்யும் ஞானவித்துக்கள், உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று, நீங்கள் உங்களில் எண்ணிப் பதிவு செய்ததைப் பெறக்கூடிய தகுதியான நிலைகளை, அந்த உணர்வின் அணுக்களை, உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.

முதலில் கரு முட்டையாகின்றது. பின், அதனின் உணர்வின் தன்மையை எண்ண, எண்ண, அவைகள் அணுக்களாக வளர்ச்சியடைகின்றது.

உதாரணமாக, ஒரு கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து, அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின், அந்த அணுவின் தன்மை, வெப்பத்தின் துடிப்பு கொண்டு, கருவின் துணை கொண்டு, குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளிவந்தபின், தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ, அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக, உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று, யாம் இப்பொழுது உங்களுக்குள், உபதேசத்தால் நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும், உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது. அதனின் உணர்வுகளை நீங்கள் மீண்டும், மீண்டும், உங்களில் நினைவுபடுத்தும் பொழுது, உங்களிடத்தில் அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

நீங்கள், இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது,  அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது போன்றதாகி விடுகின்றது.

கோழி, தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும், 
தன் குஞ்சின் நினைவு கொண்டு,
தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து,
அடைகாக்கும்.

அதைப் போன்று, நீங்கள் எந்த தொழிலுக்குப் போவதாக இருந்தாலும்,  மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து, அடிக்கடி இந்த நிலைகளை எடுத்து பழகிக் கொள்ளுங்கள்.
2. கருவாகிவிட்டால், உயிர் தன்னிச்சையாக உணவு கொடுத்து, அருள் ஞானத்தை நமக்குள் வளர்க்கும்
அப்படிச் செய்யும் பொழுது, நீங்கள் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள், உங்களுக்குள் அடிக்கடி நினைவுபடுத்தி அந்த சக்தியை நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் திறனும், அடைகாப்பது போன்று மகரிஷிகளின் அருள் சக்தியும், விளைகின்றது.

கோழி தான் இரை தேடும் பொழுது, தன் குஞ்சுகளைக் கூவி அழைத்து, தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் போன்று, நமக்குள் அருள் சக்தியின் உணர்வுகள் அணுக் கருவாகிவிட்டால், இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது,
நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி,
காற்றில் கலந்துள்ள, அருள்மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக்
கண்கள் வழியும்,
காதுகள் வழியும்,
உடல் வழியும்,
நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும்
நமக்குள் சுவாசித்து, 
நமது உடலுக்குள் பரவச் செய்து, அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.

நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால், அது நமக்குள் வளர்ச்சி பெற்று, பின், நம்முடைய நினைவாற்றல், மாமகரிஷி அகஸ்தியன் சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு, வெறுப்புகளை நுகர்கின்றோமோ, அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு, நாம் ஒன்றுமே செய்யவேண்டாம். ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி, அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள், நமது இரத்த நாளங்களில் கருவாக உருப் பெற்றுவிடுகின்றது. இப்படி பதிவாகி,  பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால், அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.

அப்படி நுகரும் சக்தி பெற்றபின், அந்த உணர்வுகளை நமது உயிர்,  உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும்பொழுது, அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு, வீரியம் ஊட்டுகின்றது.

வேதனைப்படுவோருடைய நிலைகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால்,
முதலில் சில காலம் தெரியாது.
இந்த அச்சுறுத்தும் உணர்வுகள்
நமக்குள் முதலில் நுகர்ந்து,
அடைகாப்பது போன்று, அந்த அணுக்கருக்கள் வளர்ந்துவிட்டால்.
குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது,
தாய் கோழி கூற்று பரப்பி,
தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
நமது உயிர், உணர்வின் ஒலி அலைகளை எழுப்பி,
நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின், அந்த உணர்வின் தன்மை கொண்டு,
கண்களுக்கும், செவிகளுக்கும், மூக்கிற்கும்,
உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி
அதன்வழி சுவாசிக்கச் செய்து,
அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து,
நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து,
நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு, ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

இப்பொழுது, நாம் அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமக்குள் பெறவேண்டும், என்ற உணர்வினை, நமது இரத்த நாளங்களில் அணுக்கருவாக உருவாக்கி, காலையில், நாம் தொழிலுக்கு செல்லும் பொழுதோ, தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ, இந்த உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால், அதை அடைகாத்தது போன்றதாகின்றது.
3. சிறிது நாள் பழக்கப்படுத்திவிட்டால், நம்மையறியாமலே அருள் உணர்வின் எண்ணங்கள் வரும்
அவ்வாறு அடைகாத்து, அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது, நம்மையறியாமலே நமக்குள் அந்த எண்ணங்கள் வரும்.

இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துவிட்டால்.
நாம் எண்ணுவதற்கு முன்பே,
அந்த உணர்வைக் கூட்டி,
நமக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,
அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ண, எண்ண, அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து, (திரும்பத் திரும்ப நுகர்ந்த உணர்வுகள்) அந்த கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால், நாம் நுகரும் உணர்வுகளெல்லாம், நம்முள் குஞ்சுகள் ஆனாலும், அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் பொழுது, இவைகளெல்லாம் கருக்களாகின்றன. பின், நினைவாக்கப்படும் பொழுது, அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.

இப்படி நமது வாழ்க்கையில்,
ஒவ்வொரு நொடியிலும்,
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 
ஒவ்வொரு குணத்திலும்,
ஒவ்வொரு உணர்விலும், 
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட, அந்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை, அவர்கள்  எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த அரும் பெரும் சக்திகளை, நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.  அதற்குத்தான் இதை உபதேசிப்பது, அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்குஎமது அருள் ஆசிகள்.