ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2023

“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்

இன்றைய சூழ்நிலையில்…
1.எந்தச் சாமியாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…
2.எந்தச் சாமியும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…!

நான் தான் கடவுள்…! என்று ஒருவன் பறைசாற்றுகின்றான் என்றால் அவன் ஆசை எதைத் தெரிந்து கொண்டானோ அந்த உணர்வின் ஆசை எல்லோருக்கும் வருகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று… செத்தைகளையும் குப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்து போடச் சொன்னார். ஈயக் கட்டியை வாங்கி வரச் சொன்னார். எல்லாவற்றையும் வைத்து எரிக்கச் சொல்லி தங்கமாக உருவாக்கினார்.

இப்படி முதலில் அவர் செய்து காட்டினார்… பின் அவருக்குத் தெரியாமல் நானும் (ஞானகுரு) செய்து பார்த்தேன்… தங்கம் வந்துவிட்டது.

அதை எனக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து விற்கப்படும் பொழுது ஆஹா…! என்று சொல்லி
1.நீ எவ்வளவு வேண்டும் என்றாலும் செய்து கொண்டு வா… விற்றுத் தருகிறேன் என்கிறார்
2.இதிலே இன்னும் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் “ஜம்…” என்று இருக்கும் என்கிறார்.
3.உங்களுக்கு எந்தக் கோவில் வேண்டும் என்றாலும் கட்டித் தருகின்றோம்
4.நீ தவறு செய்ய வேண்டாம்… நான் தவறு செய்து கொள்கின்றேன்
5.உனக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்… தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

இப்படி நிறையப் பேர் என்னிடம் வந்தார்கள்.

ஒரு வாத்தியார் அவர் செய்யும் வேலையை விட்டுவிட்டு என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தார். ஒரு சிறு வேலை…! ஒரே நிமிடம் தான்…! தங்கம் எப்படிச் செய்வது…? என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் தெரியுமா…!

அத்தனையும் உங்களுக்கு நான் செய்து தருகின்றேன். என்னை ஒரு வேலைக்காரனாக மட்டும் வைத்துக் கொண்டால் போதும். தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள் என்று என்னைத் துரத்திக் கொண்டே வந்தார்.

ஆனால் ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் வருவதில்லை.
1.நான் தங்கம் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னால் எனக்குப் பின்னாடி கூட்டம் இங்கே நிறைய கூடிவிடும்
2.ஆனால் மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யார் வருகின்றார்கள்…?
3.ஒன்று இரண்டு பேர் தான்…! பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்கள் தான் தொக்கி வருகின்றார்கள்

இல்லையென்றால் அதுவும் வரமாட்டார்கள்…!

1.நாளைக்கு எதுவும் நடந்து விட்டுப் போகின்றது
2.இன்றைக்குச் சம்பாதித்தால் அது போதும்… சுகமாக இருக்கலாம்…! என்று தான் நினைக்கின்றார்கள்

ஆனால் கோடிக்கணக்கில் சம்பாரித்து எண்ணிலடங்காத சொத்து வைத்திருப்பவருடைய கதி எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

என்னை இவன் மோசம் செய்தான் அவன் அப்படிச் செய்தான் என்று இவன் எண்ணினால் இறந்த பின் அந்த உடலுக்குள் பேயாகத்தான் போக முடியும்…!. “இன்று கோடீஸ்வரனாக இருந்தாலும்… அடுத்து பேயாகத் தான் ஆக முடியும்…!”

எத்தனையோ பேரை இன்று நாம் பார்க்கின்றோம் அல்லவா…!

ஏனென்றால் நமது ஞானிகள் காட்டியது உண்மையின் இயக்கம்
1.உயிரோடு ஒன்றி ஒளியாக மாறுதல் வேண்டும்
2.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ அந்த வேகா நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஒரு மனிதன் தீயிலே குதித்து இறந்து விட்டால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் கருகுவதில்லை. எரிந்த உணர்வு கொண்டு உயிராத்மா வெளியிலே செல்கின்றது.

ஆனால் நண்பனாக இருப்பவன் இதைக் கேள்விப்பட்டு “அட… நேற்று வரை நன்றாக இருந்தானே… இப்பொழுது தீயை வைத்து இறந்து விட்டானே ஆ…!” என்று சொன்னால் போதும்.

1.இல்லைப்பா…! உனக்குள் நான் வந்து விட்டேன் என்று அந்த ஆன்மா இங்கே வந்து விடும்.
2.சிறிது நேரத்தில் பார்த்தால் ஐய்யய்யோ… எரிகின்றதே… எரிகின்றதே…! என்று சொல்ல ஆரம்பிப்பான்.

காரணம் என்ன…? என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது.

நான் சும்மாதான் இருந்தேன் திடீரென்று என் உடலில் எரிகின்றது எங்கேயோ தீயிலே குதிக்கின்ற மாதிரி இருக்கின்றது யாரோ என்னமோ செய்து விட்டார்கள் என்று ஜோசியக்காரிடம் செல்வான்.

அவன் இங்கே அங்கே என்று சுற்றச் சொல்லி அந்தச் சாமிக்கு இதைச் செய்ய வேண்டும்… இதற்கு இதைச் செய்ய வேண்டும் என்று காசுகளை அவன் வாங்கிக் கொண்டே இருப்பான் காசைச் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.கடைசியில் “என்னால் தாங்க முடியவில்லை…” என்று இவனும் தீயிலே குதித்துச் சாவான்
2.இறந்த பிற்பாடி எத்தனை நிலை ஆகிறது என்று பார்க்கலாம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.