ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2023

இந்த வாழ்க்கையில் நாம் முடிவு செய்ய வேண்டிய முக்கியமானது

ஒரு அணுவின் தன்மையைப் பற்றி விஞ்ஞானி நிரூபிக்கின்றான். உணர்வுக்கு தக்க அணுக்கள் நம் உடலுக்குள் எத்தகைய வளர்ச்சிகள் பெறுகின்றது…?

ஒரு கேன்சர் நோய் என்று வந்தால் அந்த விஷமான அணுக்கள் மிகக் கொடிய தன்மையாக எப்படி இருக்கின்றது. என்று அவன் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கின்றான்

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் இந்திரீகங்களாக மாறி அணுத்தன்மை அடைந்து இந்த உடலில் ஒட்டி அது எப்படி ஜீவிக்கின்றது…? அதைப் பெருக்கப்படும் பொழுது உயிருடன் சேர்த்து மாற்று உடலை எப்படி அமைக்குகின்றது என்பதை விஞ்ஞானம் கூறுகின்றது.

ஆனால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அணுவின் ஆற்றலை… அதனின் இயக்கத்தை அறிந்து கொண்ட மெய் ஞானி அகஸ்தியன்..

அவன் ஒவ்வொரு தாவர இனத்தையும் நுகர்ந்து பார்த்து
1.அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகிறது…?
2.உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படிப் பெறுகிறது…?
3.அந்த உடல்கள் மடிந்த பின் இதிலே விளைந்த உணர்வலைகளைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கின்றது…?
4.மறையாத நிலையில் அது எப்படி இருக்கின்றது…?
5.சூரியன் கவர்ந்து வைத்திருப்பதை மீண்டும் எடுத்தவர்கள் உடல்களிலே அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்கின்றது…? என்று தெளிவாகக் காட்டி உள்ளான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகும் பொழுது தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்லி… கணவன் மனைவி இரண்டு பேருமே ஒன்றாக இணைந்து… இந்த இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் பெற்ற நிலையை நாம் பெற வேண்டும்…
2.பெற முடியும்…! என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக வேண்டியது எது…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது குருநாதர் ஏற்கனவே பல முறை சொல்லி உள்ளார். இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல. அருள் ஒளியை நாம் சொந்தமாக வேண்டும்.

உயிர் ஒளியாக இருக்கின்றது நம் உணர்வை ஒளியாக மாற்றி அந்தச் சொந்தத்தை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். அழியாத செல்வமும் பேரின்பமும் அதிலே தான் வருகின்றது.

வாழ்க்கையில் குறைகள் வராதபடி குறைகள் எது வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்று இருளை அகற்றி நமக்குள் ஒளியான உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால்
1.இன்று நமக்குள் எதை விடாப்பிடியாக வளர்த்துக் கொண்டுள்ளோமோ
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக அதை உயிர் அமைத்து விடும்…!

இனி எத்தகைய நிலைகள் வந்தாலும் அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து… அதை வளர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உடலை விட்டுச் சென்றால் “ஏகாந்த நிலை கொண்ட அந்தச் சப்தரிஷி மண்டலத்தோடு இணைய முடியும்…!”

இந்தப் பிரபஞ்சம்… நம் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் வரக்கூடிய நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலையும்.. இப்போது மனிதனாக இருக்கும் போது எந்த நிலையோ அதை எல்லாம் அறியலாம்… சந்தோஷமாக இருக்கும்.
1.அந்தச் சந்தோஷத்தை விரும்புகின்றீர்களா…?
2.அல்லது ஒருவரைத் திட்டிச் சண்டையிட்டு அதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா…?
3.அல்லது செல்வத்தைச் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்…! என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… நாளை என்ன செய்யப் போகின்றானோ…? என்று அதை அந்த வேதனையை வளர்க்கப் போகின்றீர்களா…?

நன்றாக யோசனை செய்து கொள்ளுங்கள்…!