ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2023

“உயிருடன் ஒன்றும் உணர்வை…” ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்வதன் உண்மை நிலைகள்

நாம் நுகரும் (சுவாசம்) போது உயிரிலே பட்ட பின் எண்ணங்களாகின்றது... அந்தந்த உணர்வுகள் நம் உடலை இயக்குகின்றது. உணர்வின் உணர்வுகள் அதன் பொறி கொண்டு நம்மை இயக்கும் சக்தி பெறுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளிக்கதிர்கள்
2.இன்று மனிதனாக இருக்கும் பொழுது எண்ணங்கள் எதுவோ
3.அதுவே உணர்வின் அறிவாக நம்மை இயக்கும்.

விஞ்ஞானம் இன்று இதை எல்லாம் நிரூபிக்கின்றது. கருவுக்குள் இருக்கும் உயிரிலே
1.உள்ளே ஒரு சிறு அதிர்வைக் கொடுத்தால் அது துடிக்கும் தன்மை பெறுகின்றது.
2.அந்தக் கருவுற்ற சிசுவிற்குள் ஈர்க்கப்படும் உணர்வுகள் வேதனை உருவாகும் தன்மை பெறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் வேதனை வேதனை வேதனை வேதனை என்ற உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தறிந்தால் உடலை விட்டுச் சென்றாலும் உயிருடன் ஒன்றி வேதனைப்பட்டுக் கொண்டே தான் இருக்க முடியும்… அது மீளாத் துயர் கொண்டது.

ஒரு நெருப்பை வைத்து உடலை மாய்த்து விடலாம் என்று எண்ணினால் நெருப்பின் உணர்வுகள் அங்கே எரிந்து கொண்டே இருக்கும். உயிரிலே (உயிருடன் ஒன்றியது) எரிச்சலின் நிலைகள் தாங்காது இருக்கும்.
1.இந்த உயிர் இன்னொரு உடலுக்குள் சென்றால் அதே எரியும் உணர்ச்சியின் தன்மையை ஊட்டும்
2.மீளாத் துயருடன் எரியுதே… எரியுதே…! என்று இருப்பதையும் காணலாம்.

ஒரு பக்தி கொண்ட ஆன்மா நெறி கொண்டு இருப்பினும்… இந்தத் தெய்வம் காக்கும்…! என்று அர்ச்சனை அபிஷேகங்கள் ஆராதனை செய்திருந்தாலும் குடும்பத்தில் எல்லை கடந்த சிக்கல்கள் வரும் போது அது தாங்காது நெருப்பை வைத்து எரித்துக் கொள்கிறது.

ஆனால் பக்தி கொண்டு ஆண்டவன் என்றும் தெய்வம் என்றும் எண்ணியதோ அதனை நினைத்து அந்த எரிச்சலுடன் உடல் கருகினால் மனித உடல் பெற்ற உணர்வின் அறிவு இழக்கப்படுகின்றது. “உயிருடன் (ஒன்றி) எரிந்திடும் உணர்வையே அங்கே பெறுகின்றது…”

அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்லவில்லை என்றாலும் அதே எரிச்சலின் உணர்வின் துடிப்பு கொண்டே வாழும். “அதிலிருந்து மீள முடியாது…”

உதாரணமாக ஒருவர் குடும்பத்தில் பற்றில்லாதபடி வெறுப்பின் நிமித்தம் தற்கொலை செய்யும் நோக்குடன் தீயை வைத்து எரித்துக் கொண்டாலும் இதே உணர்வுகள் எரிக்கப்பட்டு அந்த உணர்வுகளைத் தன்னுடன் சேர்த்து விடும்.
1.அதே சமயம் அவருடன் பழகி அவர் மேல் பற்று கொண்டவர்கள்
2.இப்படி ஆகிவிட்டதே… நல்ல நிலையில் இருந்ததே… என்ன ஆயிற்றோ…? என்று எண்ணி ஏங்கினால்
3.அந்த உடலுக்குள் ஆன்மா வந்து விட்டால் அதே எரிச்சலின் துணை கொண்டு “எரியுதே… எரியுதே…” என்று தான் இருக்க வேண்டி இருக்கும்.

தெய்வத்தின் பெயரால் தெய்வம் காக்கும் என்றும் துயரான நிலைகள் ஏற்பட்டால் ஓர் உடலுக்குள் சென்றால் பக்தி கொண்டு அருளாடுவதும் ஐய்யய்யோ எரியுதே… எரியுதே…! நீரை ஊற்று…! என்று சில பேர் சொல்வதைப் பார்க்கலாம்.

பக்தி கொண்ட ஆன்மாக்கள் உடலில் தீ வைத்து எரித்து கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்
1.அதே உணர்வின் வேகம் கொண்டு அடுத்த உடலுக்குள் புகுந்து விட்டால்
2.எரியுதே… நீரை ஊற்று… மஞ்சள் நீரை ஊற்று…! என்று இவ்வாறெல்லாம் கூறும்.

இது எல்லாம் மனித உடலுக்குள் பெற்ற நிலைகள்…! தன் உயிராக இருப்பினும் விளைந்த வேதனையின் உணர்வுகள் உயிரால் உணர்த்தப்படும் போது அந்த அறிவாகவே உடலை இயக்கும்.

அடுத்த உடலுக்குள் சென்ற பின் அது அடங்கும். அந்த அணுவின் தன்மையை உண்டு அதையே உணவாக உட்கொள்ளும் நிலை பெற்று அதற்குத்தக்க உடலாக அடுத்து அது உருவாக்கும்… “எரி பூச்சியாக மாறும்…”

எரி பூச்சி மனிதன் மேல் பட்டால் சூடு போட்டது போல் ஆகிவிடும். அதாவது
1மனிதனாக இருக்கும் நிலையில் தீ வைத்துக் கருகி விட்டால் (எரி பூச்சியாக ஆன பின்)
2.அதே உணர்வின் தன்மை அந்த உணர்வின் அணுப் பிளம்புகள் ஒரு உடலில் மீது பட்டால்
3.மேலே ஊர்ந்து சென்றால் கோடிட்டது போல் இருக்கும்… ஆனால் அதைக் கருக்கிவிடும்.

காரணம்… உயிரின் இயக்கங்களில் அதனுடன் ஒன்றிய உணர்வுகள் எதுவோ அதன் வழி… வழி செய்கின்றது. ஆகவே மனிதனாக இருக்கும் நாம் “எந்தச் செல்வத்தைத் தேட வேண்டும்…?” என்று சற்று சிந்தியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியில் நம் வாழ்க்கையை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.நம்மைத் திசை மாற்றச் செய்யும் எதிர்நிலை கொண்ட உணர்வுகளை
2.நாம் எதிர் நீச்சல் ஆடும் நிலைகளுக்கு வருதல் வேண்டும்.

அருள் ஒளி பெற்று இருளை அகற்றும் உணர்வை நமக்குள் வளர்த்து
1.தீமை என்ற நிலைகள் வந்தால் உடனே எதிர்த்துத் தாக்கும் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.நம்முள் அந்தத் தீமைகள் புகாது தடுக்கும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.