ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2023

ஆனந்த வாழ்க்கை வாழச் செய்யும் “குருவின் அருள் ஞான சக்தி…”

ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழுகின்றது. இயற்கையின் நியதி இது.

அதைப் போன்று ஒரு நண்பரின் துணை கொண்டு தான் நாமும் வாழுகின்றோம். ஆனால் சந்தர்ப்பத்திலே அதிலே வெறுப்பு என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.இதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டுகின்றது
2.எதிரியிடமிருந்து மீள வேண்டும் என்று வருகின்றது.
3.எதிரி என்ற உணர்வுகள் இல்லை என்றால் “தன்னைக் காக்கும் நிலை” என்பதே மறந்துவிடும்.

ஆகவே எந்த நிலை ஆனாலும் நமது வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வரும் பொழுது… அடுத்து சிந்தித்து நாம் அதிலிருந்து மீளும் உணர்வுகளை எடுத்தால்… அந்த வெறுப்பு நமக்குள் வராதபடி தடுக்க முடியும்

1.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் அணு என்ற இயக்கமும் இல்லை
2.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் கோள் அதுவும் உருவாகாது.
3.நஞ்சின் தாக்குதலினால் தான் சுழற்சியின் தன்மை ஆகி அதனால் வெப்பமும் ஈர்க்கும் காந்தமும் அது உருவாகின்றது.

கோள் என்று வரும் பொழுது தான் சுழற்சியில் அது வளர்ச்சி பெற முடியும். சுழற்சியின் வேகம் கூடும் பொழுது தான் சூரியனாகி… நஞ்சை வெல்கின்றது. ஒளியின் தன்மையாகப் பிரகாசிக்கின்றது. நஞ்சு இயக்கினாலும் அந்த நஞ்சை வெல்லக்கூடிய சக்தி சூரியன் பெறுகின்றது.
1.நஞ்சை வென்றாலும் அதனின் தொடர் கொண்டு
2.அந்த இயக்கத்தின் வரிசையில் வாழுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் வரும் உணர்வின் தன்மையும்…! “விருப்பும் வெறுப்பும்” அது எத்தகைய நிலையில் வந்தாலும் அதை நமக்கு நன்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நெருப்பு என்று வரும் பொழுது அதை ஒளியாக… வெளிச்சமாகப் பயன்படுத்தி அதனால் மற்ற பொருளைத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அதே சமயத்தில் அந்த நெருப்பை அதிகரித்து கடினமான பொருள்களையும் நாம் உருக்குகின்றோம்.

உணவுப் பதார்த்தங்கள் அனைத்துமே அந்த நெருப்பை வைத்து நாம் சமைக்கின்றோம். அந்தப் பக்குவங்கள் கொண்டு வரும் பொழுது உணவு சுவையாக மாறுகின்றது. அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வெறுப்போ துன்பமோ இவைகள் வரும் பொழுது அதனை நாம் அடக்கி
2.நன்மை பயக்கும் நிலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய சக்தி பெற்றது தான் நம் ஆறாவது அறிவு. தீமை என்று வந்தாலும் அதைச் சுவைமிக்க நிலையாக மாற்றிக் கொள்ளும் நிலையில் அவ்வாறு சுவை மிக்கதாக மாற்றிக் கொண்ட “அருள் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி… ஆனந்த நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்...!”

1.நெருப்பை வைத்து உணவைச் சமைத்து நாம் ஆனந்தமாக எப்படி உட்கொள்கின்றோமோ
2.அதே சமயத்தில் இருளை நீக்கி அந்த நெருப்பு ஒளியாகக் காட்டும் போது பொருள்கள் தெரிகிறது என்று எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
3.சாதாரணமாக உருக்க முடியாத பொருள்களை நெருப்பை வைத்து உருக்க நாம் முற்படும் பொழுது அது உருகி விட்டால் அதைக் கண்டு நாம் எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
4.எதனை உருக்க எதனின் தன்மை வேண்டும்…? என்ற நிலையில் கடுமையாக இருந்தால் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று நாம் எப்படி அறிந்து கொள்கின்றோமோ இது போன்று…
5.கடுமையான பகைமைகள் வந்தாலும் அது நம்மைத் தாக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அந்தப் பகைமைகளை நீக்கி நாம் ஆனந்தப்படுதல் வேண்டும்.
6.நாம் எடுக்கும் உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆனந்தம் என்ற நிலை வருதல் வேண்டும்.

ஆகவே… நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.