ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2023

தன்னைத் தான் நம்பி… தனக்குள் உள்ள இறை சக்தியைப் பூஜித்தால் தான் வளர்ச்சி

1.”ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து தான்” ஆத்ம உயிர் வலுப் பெற வேண்டும்.
2.ஆத்ம உயிர் வலுப் பெற “ஜீவ சக்தி” வேண்டும்.

“நீரின் சக்தியைக் கொண்டு” ஆவியாகும் காற்றும்… நெருப்பும்… கொண்ட தொடர் வளர்ச்சி இப்பூமியைச் சுழல வைப்பதைப் போல் எச்சக்தி வளரவும்… “இஜ்ஜீவ சக்தி தேவை…!”

இஜ்ஜீவ சக்தி ஆவியாகிச் சமைக்கப்படும் சத்து நிலை தான் சரீரக் கூறின் எலும்புகளின் வளர்ச்சியைக் கொண்டு பிம்பத்தின் வார்ப்பு ஆரோக்கிய நிலை பெறுகின்றது. அதன் வலுச் சக்தியைச் சரீரத்தைச் சுற்றியுள்ள ஆத்ம வலுவேற்றிக் கொள்கின்றது.

இந்தச் சரீரக் கூடு சமைக்கும் சத்தெடுத்து வளரும் ஆத்மாவிற்கு இந்த உலகப் பந்தத்தில் சுழலில் விஷமாகக் கலந்துள்ள இன்றைய எண்ண குரோத நிலையிலிருந்து நம் ஆத்மா வலுப் பெறும் மார்க்கம் என்ன…?

எப்படி விஷமான நாக சர்ப்பத்தின் உடலில் மாணிக்கக்கல் வளர்கிறதோ… அதைப் போன்று
1.இவ்விஷ உலகப் பிடியிலிருந்து உயர் ஞான அலைத் தொடருக்கு நாம் சென்று
2.அந்த அலைச் சக்தியையே நம் உணர்வின் எண்ணச் சுவாசம் வளர்க்கும் நிலை கொண்டு
3.அவ்வளர்ப்பின் சக்தி வலுவை இவ்வுயிர் ஆத்மா பெறப் பெற
4.ஆத்மா வலுப் பெற்ற ஞான வளர்ச்சி நிலைக்குப் பிறகு
5.தன் வலுவைத் தானே வளர்க்கக்கூடிய “ஆத்ம சித்து” நிலையின் செயல் முறையும் அடையலாம்.

எண்ணத்தின் வீரியத்தில் ஜெப முறையின் பக்தி மார்க்க ஆவேச அலைத் தொடரில் அதே அலைத் தொடர் கொண்ட ஆத்ம குடியிருப்புக்கு இந்தச் சரீரத்தில் குடியிருக்க இடம் தந்து அவ்வலை ஞானத்தை இச்சரீரத்தின் உதவி கொண்டு அவற்றின் ஞானத்தால் பெயரும் புகழும் அடைந்தாலும் “இந்த உலகச் சுழற்சிக்குள் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்…”

1.எக்கவி பாடினாலும்…
2.எவ்விஞ்ஞானத்தை அறிந்தாலும்…
3.தன்னைத் தான் உணர்ந்து
4.தனக்குள் உள்ள இறை சக்தியைத் தான் வளர்த்து
5.ஒவ்வொரு நொடிப் பொழுதும் உயர் ஞான ஈர்ப்பலையின் தொடர் அமிலத்தை வளர்க்கவல்ல
6.சுவாச ஈர்ப்பு மின் காந்த வளர்ச்சி ஓட்ட வளர்ப்பினால் மட்டும் தான் உயிர் ஆத்மா வலுக்கூடும்
7.எவ்ஈர்ப்பலைக்கும் சென்று இந்த உடலை விட்டு எந்த நிமிடத்திலும் உடலிலிருந்து இயக்கவும்
8.உடல் அற்ற நிலையிலும் வலுக் கொண்ட ஆத்மா எவற்றிலும் சிக்காவண்ணம்
9.செயல்படுத்தும் சித்து நிலையும்… இதன் வளர்ச்சித் தொடர் யாவையுமே பெற முடியும்.

ஆனால் சில அலைத் தொடர்பின் பக்தி முறை ஜெப வழியில்… கூடு விட்டுக் கூடு பாயும்… உடலை அடக்கி ஆத்மாவைப் பிற உடலுக்குச் செலுத்தி செயல்படுத்திய பல மாந்திரீகத் தொடர்பு கொண்டவர்கள்… அதன் தொடர்பால் வேறு ஒரு ஈர்ப்பலையில் சிக்குண்டு… “தான் பெற்ற சித்துகளின் சக்தியையே அழித்துக் கொண்டனர்…”

உயர் ஞானத் தொடர்பின் அலைத் தொடரில்…
1.“தன்னைத் தான் நம்பி… தனக்குள் உள்ள இறை சக்திக்குப் பூஜிப்பு நடத்தி வளர்த்தால் அன்றி
2.வளர் சக்தி பெறுவது… மற்றெந்த நிலையிலும் கடினம்.

“தன் ஆத்ம உயிரைக் கொண்டு…” ஆத்மாவின் சக்தி தான் இந்த உடல்… இந்த உடலை இயக்குவதே இவ்வாத்மா தான் என்பதை முதலில் உணர வேண்டும்.
1.தன் உயிராத்மா வளர… வலுப் பெற…
2.ஜீவ சக்தி தரவல்ல இச்சரீர கோளத்தின் உண்மை உணர்ந்து
3.உயிர்த் துடிப்பின் செயலுக்கு வலுத் தந்த
4.தாய்மைச் சக்தியின் தொடர்பைப் பூஜித்தே
5.ஒவ்வொரு ஆத்மாவும் இதன் உண்மையின் வழித் தொடரைப் பெறுங்கள்.