ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2023

“நீடித்த நாள் வாழ்வது என்பது…” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்

உலகிற்கே இன்று ஒளியின் சுடராக இருக்கும் “அகஸ்தியன்…” துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த அருள் சக்தி கருவில் வளரக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று… குடும்பத்தில் பத்து மாதத்திலும் கூட்டு தியானங்கள் இருந்து செயல்படுத்தினால்
1.“அந்தக் குழந்தை மகரிஷியாகின்றான்…!”
2.இப்படி உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் விஷத்தன்மைகளிலிருந்து நம்மை நம் குழந்தை காக்கும்
3.இந்த முறைப்படி வகுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அந்தக் குழந்தைகள் நுகராது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து… பச்சிலை மணங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்து
5.நமக்கும் சரி இனி அடுத்து வரும் சந்ததிகளுக்கும் சரி அவர்கள் எல்லாம் மகரிஷிகளாகப் பயன்படுவார்கள்.

திருஞானசம்பந்தர் தாய் கருவில் அவர் இருக்கப்படும் பொழுது சில அற்புத சக்திகளைப் பெற்றார்.

சீர்காழி என்ற ஊரில் அவரின் தாய் பக்தியின் நிலைகள் இருந்தாலும் “சிவன் ஆலகால விஷத்தைத் தனக்குள் அடக்கி மற்றவருடைய விஷத்தைப் போக்கினான்…” என்று கதாகாலட்சேபம் மூலமாக அதை நுகர நேருகிறது.

அந்தச் சக்தி என் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்றும் அந்தத் தாய் எண்ணியது. காரணம்
1.முதலில் குழந்தை இல்லாதது ஏங்கியது
2.குழந்தை உருவாக வேண்டும் என்று ஆர்வத்திலே அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தனக்குள் வளர்த்துக் கொண்டது
3.அதன் மூலமாக அந்த அற்புத சக்திகள் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குள் இணைந்தது.

இப்படி அந்தக் கருவிலே வளர்ந்தவர் தான் திருஞானசம்பந்தர்…!

அவர் பிறந்த பின் கடும் நோயால் அவதிப்படுவரையும் குழந்தைப் பருவத்திலே உற்றுப் பார்த்தால் அந்த நோய்கள் நீங்குகிறது. ஒரு விஷமான பாம்பு தீண்டினாலும் கூட திருஞானசம்பந்தர் பார்வை பட்டால் அந்த விஷங்கள் அகலுகிறது.

அத்தகைய சக்திகளை ஆரம்ப நிலையில் பெற்றவன்.
1.ஆனால் இத்தகைய ஆற்றல்களை அவன் பெற்றிருந்தாலும் அவன் நீடித்த நாள் வாழ்ந்தானா…? இல்லை.
2.35 வயதுக்குள் தான் திருஞானசம்பந்தர் உடலை விட்டுப் பிரிந்தது.

ஆனால் எங்கே சென்றது…?

1.விஷத்தை முறித்திடும் உணர்வுகளைத் தன் தாயின் வழியில் பெற்ற பின்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெற்று முழுமை அடைகின்றான்… ஒளியின் சரீரம் பெறுகின்றான்.

இதை ஏன் சொல்கிறோம்…? என்றால்
1.நாமும் இந்த உடலில் நீடித்த நாள் இருக்கப் போவதில்லை.
2.நீடித்த நாள் வாழ்வது என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்.

நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உடல் தான் கருகுகின்றது… ஆனால் உயிர் அழிவதில்லை. காரணம் அது வேகா நிலை பெற்றது.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையும் துருவ நட்சத்திரத்தை அழிக்க முடியாது. ஏனென்றால் அது விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெற்றால் நாமும் வேகா நிலை அடையலாம். அதற்குத் தான் இந்த உபதேசமே…!