ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2023

சரியான முகூர்த்த நேரம்

இயற்கையின் நியதிகள் வளர்ந்து கொண்டே வரப்படும் பொழுது “நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழியிலே தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பித்துக் கொண்டே வருகின்றேன்.

1.முழுமையாக உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் பத்து வருடம் நீங்கள் அமர்ந்து கேட்க வேண்டும்.
2.ஒரு நாய் எப்படி இறந்தது…? நாய் எப்படி மனிதனாக உருவாகின்றது என்றும்
3.அதே சமயத்தில் ஒரு மனிதன் இறந்தால் அடுத்த உடலுக்குள் அது எப்படி ஆவியாகச் செல்கின்றது…? அந்த உடலை எப்படி மாற்றியது…? என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் இதை எல்லாம் சாதாரணமாகக் கேட்கின்றீர்கள். என்னை குருநாதர் இரவு பகல் என்று பாராதபடி தூங்க விடாது செய்தார். சரியான சாப்பாடும் கிடையாது.

இப்படித்தான் இந்த உண்மைகளை எல்லாம் நேரடியாக உணர்த்திக் காட்டினார் தெரியும்படி செய்தார் ஏனென்றால்
1;.அனைத்தும் காற்றிலே இருக்கின்றது… அதை நீ எடுக்க வேண்டும்…! என்று சொல்வார்.
2.நீங்களும் இந்தக் காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுக்கச் செய்வதற்குத் தான் இத்தனையும் பதிவு செய்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படிச் செயல்படுத்தினாரோ அதே போல உங்களுக்கும் அவ்வப்போது பயிற்சியாகக் கொடுத்து அருள் உணர்வுகளைப் பதிவு செய்கிறேன்.

1.யாம் பதிவு செய்தைதை எல்லாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.நல்லது எது…? கெட்டது எது…? என்று நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்குத் தான் தீமையை நீக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன். எப்பொழுது கேட்டது என்று வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
1.அதைப் பிளந்து காட்டி இந்த உட்பொருளை அறியும்படி செய்யும்.
2.தீமையை நீக்கி உங்களைக் காத்துக் கொள்ள அது உதவும்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களிடம் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டே வருகிறேன். இயற்கையின் உண்மையின் உணர்வை அறியும்படி செய்வதற்குத் தான் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்… உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளை அதிகாலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக அதை இழுக்கின்றது
2.மனிதனாகப் பிறந்து தீமைகளை வென்ற இந்த உணர்வுகளை நுகரப்படும் அந்த நேரம் தான் “பிரம்ம முகூர்த்தம்…”

சகஜ வாழ்க்கையில் நாம் எதைப் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ… நுகர்ந்ததை எல்லாம் நமது உயிர் பிரம்மம் ஆக்குகின்றது… உடலுக்குள் உருவாக்குகின்றது.

உயிர் உருவாக்குவது போன்று துருவ நட்சத்திரம் ஒளியான உணர்வை உருவாக்கும் திறன் பெற்றது. அந்த ஒளியான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை இணைந்து வாழும்… ஒளியாக மாறும் நிலையாக அமைகின்றது. அதனால் தான் “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வது.

பிரம்ம முகூர்த்தத்திற்கு இத்தனை அர்த்தங்களும் உண்டு…!

ஏனென்றால் நாம் நுகர்வதை உயிர் எவ்வாறு பிரம்மமாக ஆக்குகின்றதோ அதே போன்று தீமைகளை நீக்கும் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம்.

துருவப் பகுதி வழி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் பூமி கவரும் அந்த நேரத்திலே நாம் நுகர்ந்து நம் உயிரோடு இணைத்தால் அது பிரம்ம முகூர்த்தம்.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த நேரத்தைத் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் எண்ணத்தைப் புருவ மத்தியில் வைத்த பின் தீமைகள் உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டால்
2.எத்தகைய விஷத்தையும் நாம் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.