ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2021

காணிக்கை செலுத்த வேண்டிய முறை

1.நமது உயிரான ஈசனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
2.நம் உடலான சிவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
3.நம் கண்ணான கண்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
4.பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக நம்மை உருவாக்கிய அந்த வினைகளை நாம் போற்றித் துதிக்க வேண்டும் என்றால்
5.நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.
 
நமக்குள் தெளிந்த மனதாக “கார்த்திகேயா...” என்ற அறிந்திடும் அறிவு கொண்ட இந்த அறிவின் துணை கொண்டு அதைச் சீராகப் பயன்படுத்தும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.
 
உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.பின் அந்த ஊழ்வினை என்ற வித்தினை நீங்கள் நினைவு கொண்டு மதியை (மகரிஷிகளின் அருளை) வளர்த்து
2.மதி கொண்டு விதியை வென்று அருள் ஒளிச் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் குறைகளையோ தவறுகளையோ கோபத்தையோ வேதனையையோ வாழ்க்கை என்ற நிலைக்கு நுகர்ந்தறிய உதவினாலும்
1.அடுத்த கணம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் ஏங்கிப் பெற்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளையே காணிக்கையாகச் செலுத்துங்கள்.
3.உடலான சிவனுக்கும் அந்த அருள் சக்தியான அமுதை ஊட்டுங்கள்.
4.உங்களுக்குள் சக்தியாக இயக்கும் ஒவ்வொரு ஞான சக்திகளுக்கும்
5.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை “ஞான விருந்தாக...” கொடுங்கள்.
 
இப்படி ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்துத் தீமைகள் வருவதை எல்லாம் சுத்திகரித்துக் கொண்டால்
1.உங்கள் உயிரான ஈசனுக்கு உதவி செய்கின்றீர்கள்
2.உடலான சிவனுக்கு உதவி செய்கின்றீர்கள்
3.கார்த்திகேயா என்ற அறிவின் தன்மை மங்காது ஒளியின் சுடராக மாற்றிட உதவி செய்கின்றீர்கள்.
 
முருகா என்றால் மாற்றி அமைக்கும் சக்தி... ஆக நாம் நுகர்வது அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிடல் வேண்டும்.
1.இப்படிப்பட்ட உருவாக்கும் திறன் நம்மிடம் இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாது விட்டுவிடாதீர்கள்...!”
 
ஒவ்வொரு நாளும் இங்கே உபதேசிக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் தீமைகளை நுகர்ந்தறிந்தால் அது வளராது அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும் அருள் ஒளி என்னிலே வளர வேண்டும் என்றும் இதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
நோய் உள்ளவர்களை நாம் சந்தித்தாலும்... மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்... உங்கள் நோய் அகன்றுவிடும்... மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முயற்சி எடுத்து ஏங்குங்கள்... அது உங்களைக் காக்கும்... உங்கள் உடல் நலம் பெறும்...! என்று இந்த வாக்கினை அவருக்குள் பதிவாக்குங்கள்.
 
அல்லது நமக்கே ஒரு நோய் வந்தாலும் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.எந்த நோய் நம் உடலை வாடச் செய்கின்றதோ
2.அந்த நோய் உடலுக்குள் வளர்ச்சியாகாது தடைப்படுத்த
3.அந்த நோயே நமக்கு அருள் ஞானத்தை ஊட்டும் நிலையாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.   

இந்தத் தியானத்தின் பலனை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பெற முடியும்.