ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2021

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

குடும்பத்தில் கஷ்டமோ நஷ்டமோ இதைப் போன்ற தொல்லைகள் இருந்தால்... “கஷ்டம்...” என்ற அந்த வார்த்தைகளை விடுத்து விடுங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்கள் முழுவதும் படர்ந்து அங்களை அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி நாங்கள் உடல் நலத்துடன் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.
 
சாப அலைகள் என்றால்...
1.நம் குடும்பத்தில் உள்ளோர் யாரும் நேரடியாக சாபம் இட வேண்டியதில்லை
2.ரோட்டிலோ அல்லது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் வேறு யாரோ அவர்களுக்குள் பகைமையாகி சாபமிட்டுக் கொண்டிருந்தால்
3.இப்படிச் செய்கின்றார்களே என்று அதனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.
 
அவர்கள் இட்ட அந்தச் சாப அலைகள் நமக்குள் பதிந்து இரத்தத்திலே அணுக்களாக விளையத் தொடங்கும்.
1.விளைந்த பின் நமக்குள் பகைமை உணர்வை ஊட்டி
2.நம் வாழ்க்கையே சீர்கெடச் செய்யும் நிலையாக நம் நல்ல எண்ணங்களை இடைமறித்து
3.நம் சொல்லைப் பலவீனப்படுத்தித் துன்பங்களை ஊட்டும் நிலையாக வரும்.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் விடுபட இந்த அதிகாலை துருவ தியானத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுப்படுத்திக் கொண்ட பின் என் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எண்ணி அந்த வலுவான நிலைகள் கொண்டு அந்த நினைவினை உங்கள் குடும்பத்திலும் தொழிலும் செலுத்திப் பழகுங்கள்.
 
இவ்வாறு இரு மனமும் ஒன்றாகி விட்டால் உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகளால் விளைந்த அணுக்களின் வீரியம் தணியத் தொடங்கும்.
 
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும் உணர்வும் அதிகரிக்கும். அடுத்துப் பிறவி இல்லா நிலைகள் அடையவும் இது உதவும். ஆகவே இதை மறவாதீர்கள்...!
 
1.தியானம் என்பது “ஒரே நினைவில் இருக்க வேண்டும்” என்ற நிலை இல்லாது...
அந்த அருள் சக்திகளை எடுத்து அதை மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்...
3.தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
4.இருவரும் இப்படி எண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்.
 
ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் அந்த உணர்வு தன் இனத்தை உருவாக்குகின்றது.
 
ஆக... உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையை ஒளியாக (ஒளியான இனமாக) உருவாக்க வேண்டும் என்றால் மனிதனான நிலையில் மனைவியின் உயிருக்குள்ளும் கணவனின் உயிருக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைந்திட வேண்டும் அந்த உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரு உயிரும் ஒன்றாகக் கலக்கப்படும் பொழுது தான் இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
 
1.இப்படி ஒன்றிணைந்த நிலைகள் கொண்டு
2.27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைத் தனக்குள் பெருக்கி
3.அண்டத்தில் வரும் அனைத்து நஞ்சினையும் வென்றது தான் துருவ நட்சத்திரம்... துருவ மகரிஷி...!
 
அந்தத் துருவ மகரிஷியைப் போல் நீங்கள் கணவன் மனைவி இருவரும் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றால் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும்
1.அதை வென்றிடும் சக்தி வருகின்றது.
2.ஒளியாக மாற்றிடும் திறன் வருகின்றது
3.அந்த ஒளியின் உணர்வாகக் கருவாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் இதைச் சீராகச் செய்து வருவோர் அனைவரும் நிச்சயம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.