ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2021

மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய நல்ல வாக்குகள்

இன்றைய உலக சிக்கல்களிலிருந்து மீள ஒவ்வொரு மனிதனும் அருள் ஞான சக்தியைக் கூட்டி இருளைத் தனக்குள் சேராத நிலைகள் பாதுகாத்துக் கொள்ள மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளைப் பெற்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற்று அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும்.
 
ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் உபதேசித்த கருத்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் அதை வளர்த்துக் கொள்ள முற்படுங்கள்.
 
ஒரு சிரமமான நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால்...
1.இந்த அருள் உணர்வுகளை எடுத்துச் சொல்லி...
2.இதன் வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்... உங்கள் உடல் நலம் பெறும்...
3.குடும்பத்தில் கஷ்டம் நீங்கும்... உங்கள் தொழில்கள் வளம் பெறும் என்ற வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
 
இந்த வாக்கினை ஏற்றுக் கொண்டோர் உணர்வுகளில் அந்த உணர்வுகள் பதிவாகி அவர்கள் நினைவாற்றல் அவர்களைக் காக்க உதவும். நோய்களை அகற்றவும் இது உதவும்.
 
உதாரணமாக ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரை வேண்டுங்கள்.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானித்துக் கொள்ளுங்கள்.
 
யார் நோய் என்று சொன்னார்களோ அவர்களிடம்... மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படரும்... உங்கள் உடல் வலி குறையும்...! என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நோயின் வலிமை குறைய வேண்டும் அருள் ஒளி அங்கே படர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
 
சொன்ன வாக்கின்படி அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியால் “என் நோய் குறைய வேண்டும்...” என்று எண்ணினால் அவர்கள் உடலில் அந்த வலி குறைவதையும் நோய் நீங்கும் சக்தியும் பெறுகிறார்கள்.
 
ஏனென்றால் உங்களுக்கு இந்தச் சக்தி இருக்கிறதா... இல்லையா...! என்று இப்படிப் பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்குண்டான ஆற்றலை நீங்கள் பார்க்கலாம்.
 
அதே போல் யாம் கொடுக்கும் பிராசத்தில் உள்ள காசை உங்கள் வீட்டில் பூஜை அறையில் விநாயகருக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பாலும் தீர்த்தமும் வைத்து யாம் சொன்ன முறைப்படி தியானித்து விட்டு முடிந்த பின் பாலையும் தீர்த்தத்தையும் எடுத்துப் பாருங்கள்.
 
1.நீங்கள் தியானத்தில் கவர்ந்து கொண்ட அலைகள் அதிலே படரப்படும் போது
2.அந்தப் பாலிலேயும் இந்தச் சக்தி படர்ந்திருக்கும்
3.அது நீங்கள் வைத்த பாலாக இருக்காது. அது சுவை கொண்ட பாலாக மாறும்.
4.தீர்த்தமும் நீங்கள் வைத்த தண்ணீராக இருக்காது... சுவை கொண்ட தீர்த்தமாக மாறும்.
5.ஏனென்றால் நாம் எடுத்த அந்த மகரிஷிகளின் அலைகள் அங்கே படர்கிறது.
 
இதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க எடுக்க நம் வீட்டுக்குள் இருக்கும் தரைகளிலும் சுவர்களிலும் மற்ற உடமைகளிலும் இந்த அலைகள் படரும். அப்பொழுது தீமைகள் அகற்றும் சக்திகள் கிடைக்கின்றது.
 
நாம் அனைவரும் இதைப் போல் ஒருக்கிணைந்து அந்த அருள் உணர்வுகளைப் பெற முற்பட்டால்
1.இந்த வாழ்க்கையில் அனைவரும் நலம் பெற உதவுகின்றோம்.
2.நமக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களிலும் நலம் பெறும் சக்தியாக மாற்றிடும் நிலை வருகின்றது.
 
ஆகவே ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.. ஈசன் வீற்றிருக்கும் ஆலயமாக அதை மதித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.