ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2021

நச்சுத் தன்மையிலிருந்து விடுபடும் ஔஷதங்களை அன்றே கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர் போகமாமகரிஷி - ஈஸ்வரபட்டர்

பேரண்ட பூமியின் சுழல் ஓட்டச் சக்தியில் (எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள்) தன்னுடைய ஈர்ப்பின் தொடருக்கு சுவாசத்தின் வலுவால் மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள... சிருஷ்டியின் தத்துவமாக “ஈஸ்வர அனுபூதி லீலையில்... உயிர் அணுக்கள் தோன்றுகின்றது...!”
 
உயிரணுக்கள் தோன்றிய பின் அந்தந்தச் சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் அது சந்தர்ப்பத்தால் உடல் பெற்ற நிலையில் பரிணாம வளர்ச்சியின் எண்ணம் கொண்டு பல கோடிப் பிறப்புகளாக வளர்கின்றது.
 
அந்த வளர்ச்சியின் முதிர்வில் பேரானந்த சக்தியில் கலந்துவிடும் அறிவாற்றல் பெற்றிட்ட மனித குல வாழ்வில் சத்சங்கம் என்ற (உயர்ந்த படைப்பு) சரீரம் என்ற பிண்டத்தில்
1.தன்னைத் தான் உணர்தலும்
2.உணர்ந்த அந்த வழியில் தன்னை அறிந்திடும் ஆற்றலும்
3.அண்டத்தையும் (சகலத்தையும்) அறிய முயலும் செயலில் இயற்கையுடன் ஒன்றி
4.அந்த இயற்கையின் சகல சக்திகளையும் தன்னுள் ஈர்த்தே
5.தன்னையே பிரம்ம சக்தி ஸ்வரூபமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு
6.மூல சக்தியின் கருப்பொருளாகவே அது உருவாகின்றது.
 
ஆக... மனிதப் பிறப்பிற்குத்தான் இந்தத் தகுதி உண்டு...!
 
அவ்வாறு வளர்ந்ததன் பொருளே... “ஈஸ்வர சிருஷ்டியின் ஆதி சக்தி மூல வலு...” தன்னை வலுவாக ஆக்கிக் கொள்ள நடைபெறும் செயலாகும்.
 
இந்த அத்தனை செயல் நிகழ்வுகளிலும் தன் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக... “ஒளியாகும் அறிவாற்றல் பெற்ற நிலையில்...”
1.படைப்பின் படைப்பில் செயல்படும் சகல கோடி ஜீவியர்களும் (மகரிஷிகள்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே
2.சக்தியை வலுக்கூட்டும் சூட்சமம் அறிந்துணர்ந்து தெளிந்திட்ட பக்குவமே “அனுபவ விசேஷம்...!” ஆகும்
 
இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.
 
அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து கொண்டனர்.  அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் “விஷ வைத்திய சாஸ்திரம்...” பிறந்ததன் காரணம்.
 
இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட... தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் அத்தகைய மகான்கள் அளித்த வைத்திய பொக்கிஷங்கள் எல்லாம் மறை பொருளாக்கப்பட்டு விட்டது.
 
காரணம்... நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்...!”
 
போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.
 
அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் (துறவிகள்) தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!
 
பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.
 
அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது...” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்...!”
 
மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை...! 

போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்! (ஈஸ்வரபட்டர்)