ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2021

என்றுமே மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்...!

காலை துருவ தியானத்தில் எடுக்கும் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளே...”
1.நமக்குப் பெரும் சொத்து... அழியாச் சொத்து...
2.என்றும் நிலையான சொத்து...
3.பேரின்பப் பெருவாழ்வு என்று பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் சக்தி (சொத்து) ஆகும்.
 
ஏனென்றால் மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்.
 
பிறவி இல்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று ஆறாவது அறிவை ஏழாவது நிலையாகdh தனக்குள் சிருஷ்டிக்கும் வளர்ச்சியின் பாதையில் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே நம் கடைசி எல்லை.
 
காரணம்... இந்தச் சூரியக் குடும்பம் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதனால் இதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறைந்துவிடும்.
 
சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் அது ஒவ்வொன்றும் சூரியனைப் போன்றே தனி ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் செல்லும் நிலை வந்துவிட்டது.
 
கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் போன்றவைகள் சூரியக் குடும்பங்களாக மாறுவதனால் நம் சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றது.
 
அதாவது நமக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து அவர்களுக்குத் திருமணமான பின் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து செல்வது போன்று தான்.
 
அவர்கள் பிரிந்து சென்றால் இங்கே இந்தக் குடும்பம் பலவீனம் அடைகிறது. பலவீனம் அடையப்படும் பொழுது குழந்தைகளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்க முடிவதில்லை.
 
அதைப் போன்றுதான் இந்தச் சூரியனும் அழியலாம்...!
1.ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர்
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் என்றுமே வேகா நிலை அடையலாம்.
 
நெருப்பில் விழுந்தால் நம் உயிர் வேகுவதில்லை. உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே...
1.அந்த உயிரைப் போன்றே நம் உணர்வுகளை எல்லாம் வேகா நிலை என்று உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலை பெறுதல் வேண்டும்.
 
அது தான் பிறவி இல்லா நிலை என்பது...!
 
இப்பொழுது இந்த உடலில் நாம் இதை உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது...? என்று நமக்குத் தெரியாது...!
 
புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அத்ன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.
 
இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்...
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.
 
அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை வரும்.
 
இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.
 
எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு. எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு. இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.
 
நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.
 
ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்... “இந்த மனித உடலிலிருந்தே...!”
 
அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).
 
அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.
 
நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக... உருவாக்கும் கடவுளாக... ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்...!
 
ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.
 
இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்... “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்...!”
 
ஒளியின் சரீரம் பெற்றாலும் ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில் ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.

அப்படி வாழ்ந்தவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அவர்கள் தனித்து வாழவில்லை. அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!