ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2021

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி - ஈஸ்வரபட்டர்

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை... தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.
 
கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி...! கோபத் தன்மை இருந்தால் அது தீய வினைகளுக்குத் தான் அடிகோலும்.
 
ஆணவம்.. மோகம்... உலக மயக்கம் என்னும் மாயை...! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது...! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.
 
முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்... மோக குணத்தை வென்றிட்டார்... உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்... என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்...!”
 
மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்...! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.
 
ஆகவே ஆணவத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி...!”
 
அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது...! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.
 
மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாகச் சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்...!” என்ற பொருளை உணரலாம்