ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2015

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள்வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷிகள் உணர்த்திய அருள் வழி
எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா.

ஆறாவது அறிவு கொண்டவன் ஏழாவது நிலை பெற்றவன் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனைப் பின்பற்றி நடந்தவர்கள் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை அடைந்தவர்கள் சப்தரிஷி மண்டலம்.

கணவனும் மனைவியும் சேர்த்து உருவாக்கிக் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரத்துடன் பேரானந்த நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அந்த அருள் வழி என்றால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வெளியிட்ட உணர்வுகள் இன்றும் இந்தக் காற்றிலே உண்டு.

அவர்கள் உணர்வை நாம் பெறவேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வின் தன்மை பெற்று நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

அந்தச் சிந்தித்துச் செயல்படும் தன்மை வந்தால்தான் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். அவர்கள் எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அவர்களின் அருள் உணர்வை நாமும் பெறமுடியும்.

ஆகவே நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்கும் நிலையாக குரு அருளைப் பதிவு செய்கின்றோம்.

குரு அருளைப் பதிவாக்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்துவதற்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

உண்மையின் உணர்வை நீங்கள் அறியாது எடுக்க முடியாது.

டாக்டரிடம் சென்றால் ஆபரேசன் செய்ய வேண்டும் என்றால் முதலில் தெரிந்து கொண்டால் தானே அவரால் அதைச் செய்ய முடியும். இதே மாதிரித்தான்
உங்களுக்குள் வேதனை வெறுப்பு வரும் போது
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆபரேஷன் செய்து
உணர்வுகளைத் தெளிவாக்கிக் கொள்ள இது உதவும்.

உதாரணமாக, வீட்டிலிருந்து வெளியில் ஒரு பொருளை வாங்கச் செல்லும்போது வெறுப்பான உணர்வுகளைச் சுவாசித்துவிட்டுச் சென்றால் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் சுவாசித்த உணர்வுகள் முகப்பில் நின்று நமக்குள் இயக்கி தீமைகளை உருவாக்கும் சந்தர்ப்பமாகிவிடும்.

இதையெல்லாம் நீக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் குவித்து புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதைச் சுவாசித்து அறியாது வரும் தீமைகளைத் தடுத்துக் கொள்ள முடியும்.

அதே மாதிரி வீட்டில் மனைவி கணவனை எண்ணி வேதனைப்படும் உணர்வுகளைப் பாய்ச்சினால் அது கணவனைப் பாதிக்கும்.

கணவன் மனைவிக்குள் அறியாது வரும் சிறு குறைகளாக இருந்தாலும் கணவன் மனைவிக்கு அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இணைந்து வாழ்ந்திடும் பக்குவ நிலைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்

கணவன் மனைவி இப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கலோகம். கணவன் உணர்வு மனைவியைக் காக்கும், மனைவியின் உணர்வு கணவனைக் காக்கும்.

 ஆகவே, சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்திட அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷிகள் வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாம் சுவாசிப்போம்.

அதை நம் உடலுக்குள் வளர்த்து சப்தரிஷிகள் சென்ற அதே அருள் வழியில் செல்வோம். பிறவியில்லா நிலை அடைவோம்.