ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2015

“சாமி நன்றாகச் சொன்னார்” என்று சொல்வதில் பலன் இல்லை, விண்ணின் ஆற்றலை நீங்கள் எடுக்க வேண்டும்

நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்குகின்றது. உணர்வின்  இயக்கமாக அது நம்மை இயக்குகிறது. அதன் வழியே நாம் வாழ்கின்றோம். ஆக அவனின்றி (உயிர்) ணுவும் அசையாது.

நாம் நுகர்ந்த உணர்வை உணர்த்துகின்றது. நம் உடலாக மாற்றுகின்றது. மீண்டும் நினைக்கும் போது அவ்வழியே நம்மை இயக்குகின்றது.

அடிக்கடி சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன்.

இருந்தாலும், உபதேசம் கேட்கிற வரையிலும் அல்லது உபதேசங்களைப் படிக்கிற வரையிலும் “சாமி நன்றாகச் சொன்னார்” என்று தான் சொல்வோம்.

ஆனால், இதை விட்டுப் போனவுடன் என்ன நடக்கின்றது?

கடலிலே தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டவுடன்
அலைகளாகப் போகின்றது. மீண்டும் மூடிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் நமக்குள் எத்தகையை உணர்வைப் போட்டாலும் நமக்குள் இருக்கும் தீமையான நிலைகள் மூடி மறைத்து விடுகின்றது.
மீண்டும் நினைவாற்றல் வருவதில்லை.
ஏனென்றால், நாம் இதிலே சிக்கியுள்ளோம்.

இதிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்றே தெரியாது தவித்துக் கொண்டயுள்ளோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் விண்ணுலக ஆற்றலை நீங்கள் அறிந்து
தீமைகளை அகற்றும் வல்லமை பெறும் சந்தர்ப்பத்தைத்தான்
இப்பொழுது தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

மகரிஷிகள் விளையை வைத்த அருள் உணர்வை உங்களுக்குள் சேர்த்து இதனை நீங்கள் உங்கள் எண்ணத்தால் உருவாக்குதல் வேண்டும்.

குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
      என் நினைவின் ஆற்றல் அவர்பால் சென்று
அதை நான் எப்படி உற்று நோக்கி
எனக்குள் ஆழமாகப் பதிவு செய்தேனோ
அதே வழியில் தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

யாரெல்லாம் அதே வழியில் அதே உணர்வு கொண்டு யாம் உபதேசிப்பதைப் பதிவாக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ
எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
அதன் வழி கொண்டு தீமைகளை நீக்கிடும்
அந்த விண்ணின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் பெறமுடியும்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.