ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2015

தீமைகள் வருவதைத் தெரிந்து தடுக்கக்கூடிய சக்தி ஆறாவது அறிவு – சேனாதிபதி

செடியிலிருந்து வெளிப்படும் சத்தைச் சூரியன் எடுத்து வைத்துக் கொள்கின்றது. அந்த வித்தைப் பூமியில் ஊன்றினால் பூமியின் ஈர்ப்பு கொண்டு தன் இனத்தின் சத்தை இழுத்துக் கவர்ந்து அந்தச் செடி விளைகின்றது.

இதை அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

வாழ்க்கையில் நான் எல்லோருக்கும் நல்லதைச் செய்தேன், என்னை இப்படிச் செய்துவிட்டார்கள். இத்தனை பேருக்கு நான் உதவி செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்பார்கள், கடைசியில் என்ன செய்வார்கள்?

ஆண்டவன் சோதிக்கின்றான் என்று தான் சொல்வார்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் அது ஈசனாக இருந்து இயக்கி அதைத் தெரியச் செய்கிறது. அந்த உணர்வின் சக்தியை நம் உடலாக மாற்றுகின்றது.

மாற்றிய உணர்வை வைத்துத்தான் நம்மை ஆள்கிறது ஆண்டவனாக. நாம் பார்த்ததை, கேட்டதைப் பதிவாக்கி  நம் உயிர் அதைத்தான் ஆளும். ஆகவே,
நாம் எந்த உணர்வை இரையாக்கினோமோ
அந்த உணர்வு உடலாகும்போது
அது தெய்வமாக வேலை செய்கின்றது.

ஒருவன் வேதனையுடன் சாபமிட்ட அலைகளை நாம் உற்றுப் பார்த்து அதைக் கேட்க நேர்ந்தால்
அது உமிழ்நீராக மாறி நம் இரத்தத்தில் கலந்தால்
அது உடல் முழுவதும் சுற்றி வரப்படும் போது
எந்த உறுப்பில் அது படுகின்றதோ
அதே மாதிரி அதைக் கரைக்க ஆரம்பிக்கின்றது.

இரு தட்டாம்பூச்சி ஒரு பூவில் முட்டையிட்டு விடுகின்றது. உதாரணமாக ஒரு நெல் பூச்சியில் போய் முட்டையிட்டால் நெல் பூச்சியாக உருவாகிவிடும். அந்தப் பூச்சி நெல் எப்படி இருக்கின்றதோ அதே ரூபமாக இருக்கும்.

பிறகு அந்த நெல்லையே எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கும். நெல்லில் உருவாகும் அமுதை (அந்தப் பாலை) எடுத்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்? நெல் பாழாகிவிடும்.

அதிலே முட்டையிட்டால் என்ன செய்யும்? அதில் உள்ள கருக்களை அந்த நெல்லுக்கு வரக்கூடிய பால் அனைத்தையும் சாப்பிட்டுவிடும்.

முதலில் நெல் பூச்சியாக இருந்தது. நெல்லைச் சாப்பிட்டு அதில் மீண்டும் முட்டையிட்டால் புழுக்களாக மாறி நெல்லையே முழுவதும் உட்கொண்டுவிடும்.

முதலில் செடியில் நெல் எல்லாம் உருவமாகத் தெரியும். பிறகு உள்ளே இருக்கும் பாலைச் சாப்பிட்டுவிடும். அது எப்படிப் போகின்றது?

அந்தப் பால் பூமியின் ஈர்ப்பிலிருந்து எடுக்கக்கூடிய அந்தத் தண்டைக் கடித்துவிடும். அதிலிருந்து ருசி எடுத்து இதைச் சாப்பிடும். கடைசியில் நெல் இல்லாமல் போய்விடும். இவைகளெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
அதைத் தடுப்பதற்கு மனிதன் செய்கின்றானா இல்லையா?
ஆறாவது அறிவு கார்த்திகேயா.

ஒருவன் சாபமிடுகின்றான் என்று தெரிகின்றது. நம் உடலுக்குள் சாபமிட்ட உணர்ச்சிகள் தூண்டுகிறது என்று தெரிகின்றது. அப்பொழுது என்ன செய்யவேண்டும்? இந்த ஆறாவது அறிவை அந்த சேனாதிபதியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் தீமைகள் புகாதபடி தடுக்க முடியும். அந்த ஆறாவது அறிவை முருகன் என்று காட்டி சேனாதிபதி என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

ஒரு மிலிட்டரிக்கு சேனாதிபதி எதற்கு வைத்துள்ளார்கள்? கெட்டது வராதபடி தடுப்பதற்குத்தான் சேனாதிபதி. தடுக்கத் தவறினால் என்ன ஆகும்? படைகலன்களின் பாதுகாப்பு போய்விடும் நாட்டைக் காக்க முடியாமல் போகும்.

இதே போன்று அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு அடிமையாகிவிட்டால் மீண்டும் நாம் மிருகத்தின் நிலைக்கோ அல்லது பூச்சியின் நிலைக்கோ போகவேண்டிய தன்மை வந்துவிடும்.

எத்தனையோ உடல்களிலிருந்து தப்பி இன்று மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சமயத்தில் தவறினால் இன்றைக்கு மனிதன் நாளைக்கு மனிதனல்லாத உடலைத் தான் பெறவேண்டும்.

ஒருவன் சாபமிட்டு, “நாசமாகப் போகவேண்டும்” என்று சொன்ன உணர்வுகள்
அந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்து
சாப்பாட்டுடன் கலவையாகி இரத்தமாக மாறி
உடல் முழுவதுக்கும் போய்
அந்த முட்டை எதிலே போய்த் தேங்குகின்றதோ
அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு அங்கே உருவாகிவிடும்.

தட்டாம் பூச்சி முட்டையிட்டு நெல்லை உட்கொள்ளும் நெல் பூச்சிகளாக உருவானதோ அதே போல நம் கல்லீரலிலோ நுரையீரலிலேயோ இருதயத்திலேயோ இதை மாதிரி போகும்போது வடிகட்டிச் சென்றாலும் ஒரு முட்டை தேங்கினால் போதும்.

அது உடனடியாக வீக்கமாகும். இரத்தம் சரியாகச் செல்வதில்லை. அப்பொழுது இதனுடைய மலம் பட்டவுடன் உறைந்துவிடும். இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது.

அடுத்து என்ன ஆகும்?

படக்.., படக்.., என்று நெஞ்சு வலிக்கிறது நெஞ்சு வலிக்கிறது என்று வரும். அது தவறினால் முழுவதும் போய்விடும்.

இன்றைக்கு நெஞ்சு வலிக்கு ஆபரேசன் செய்யலாம் என்று சென்றால் குறைந்தது மூன்று இலட்சம் ரூபாய் வேண்டும். செலவு செய்து சரி செய்து கொள்கின்றோம்.

சரி செய்து பிறகு எத்தனை நாள் இருக்கின்றோம்? கொஞ்ச நாள் இருக்கின்றோம். சம்பாரித்த பணத்தை வைத்துக் கொஞ்ச நாள் வாழ்வதற்குச் செய்து கொள்கிறோம். பிறகு என்ன ஆகிறது?

சம்பாரித்தேனே, எல்லாவற்றையும் டாக்டருக்குக் கொடுத்துவிட்டேன் என்று அதிலே ஒரு வேதனை. உடல் சரியான பிற்பாடு இப்படி எல்லாம் ஆகிவிட்டது என்று மறுபடியும் வேதனை.

ஆனாலும், வீட்டில் ஒரு சண்டையே சச்சரவோ குறைகிறதா என்றால் இல்லை. பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும். வேதனை அதிகமானால் என்ன ஆகும்?

நம் உடலில் பலவிதமான நோய்கள் வரும். ஒன்று சரியானது ஆனால், மறுபடி இத்தனை வருகிறதே என்ற நிலை வரும். ஆக, இந்த உடலில் வேதனை எல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் போகும்போது என்ன செய்யும்?

எடுத்துக் கொண்ட வேதனையான விஷமான உணர்வுகளுக்குத் தக்கவாறு விஷமான உயிரினங்களாக நம்மை மாற்றிவிடும்.


பல கோடி உடல்களிலிருந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய நம் உயிரை மதிக்க வேண்டுமா இல்லையா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அதற்குத்தான் கார்த்திகேயா, தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி சேனாதிபதி தீமைகள் வருவதைத் தெரிந்து போகவிடாமல் தடுக்கக்கூடிய சக்தி.

தீமைகளைத் தடுக்கத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம். 

துருவ நட்சத்திரம் எப்படி நஞ்சை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போல நீங்கள் சுவாசிக்கும் உணர்வில் அறியாது உட்புகும் தீமைகளை நீக்கி ஒளியின் சுடராக உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

தீமைகள் வரும்போதெல்லாம் அதை துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தடுக்கப் பழகிக் கொண்டால் வேதனை என்ற நிலைகளை அது அடக்கி மகிழ்ச்சி என்ற நிலைகளை அது உருவாக்கும்.

இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டல எல்லையை பேரானாந்த நிலையை நாம் அடைவது திண்ணம்.