ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2015

உங்களுக்குக் காசு எதற்காகக் கொடுக்கின்றேன்? - ஞானகுரு

உங்களுக்குத் தியானத்தில் சக்தி கொடுக்கின்றோம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் சக்தியை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

நமது பூமிக்கு நேராக இருப்பதனால் கவரப்பட்டு பூமிக்குள் பரவச் செகின்றது. அந்த நேரத்தில் நீங்கள் ஆசைப்படுவது எப்படி இருக்க வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அதிகாலை 4.30 லிருந்து 6.00 மணிக்குள் ஏங்கி எடுக்க வேண்டும்.

ஆசீர்வாதம் செய்யும்போது உங்களுக்குக் காசு கொடுக்கின்றேன் அல்லவா. எதற்காகக் கொடுக்கின்றேன்? அதிலே சக்தி ஏற்றி வைத்திருக்கின்றேன்.

உங்களுக்கு அருளும் வேண்டும்,
    பொருளும் வேண்டும்,
         நல்ல ஞானமும் வேண்டும்
                  என்று எண்ணித்தான் காசைக் கொடுக்கின்றேன்.

அந்தக் காசை எங்கே வைக்கச் சொல்கின்றேன்? விநாயகர் படத்திலே வைக்கச் சொல்கிறேன்.

விநாயகர் படத்தில் வைத்து அதிலிருக்கக்கூடிய சக்தியை அதிகாலையில் எழுந்தவுடன் அதைப் பார்த்து ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணிப் பழக வேண்டும்.

உயிரை எண்ணி உங்கள் அம்மா அப்பாவை நினைத்து அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் என்று அந்தப் படத்திற்கு முன்னாடி நின்று ஏங்குங்கள்.

நீங்கள் சரியான முறையில் கவனித்துப் பார்த்தால் அந்த விநாயகர் படத்திலிருந்து ஒரு வெளிச்சம் வருவது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அப்பொழுது நீங்கள் அதை நுகரும்போது உங்கள் மனதுக்கு நன்றாக இருக்கும்.

இதை நீங்கள் செய்யுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறோம். இதை மாதிரி நீங்கள் காலையில் எடுத்து ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடமாவது துருவ தியானம் செய்யுங்கள்.

துருவ நட்சத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், இரத்த நாளங்கள் முழுவதும் படரவேண்டும், ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று உங்கள் நினைவினை உடலுக்குள் செலுத்துங்கள்.

இப்படி அதைச் செலுத்திப் பழகுங்கள். செலுத்திக் கொஞ்ச நேரம் இருந்தீர்கள் என்றால் உங்கள் மனதில் ஒரு நிம்மதி வருவதைப் பார்க்கலாம்.

அந்தச் சமயத்தில் விநாயகர் படத்திற்கு முன்னாடி பாலையோ அல்லது ஒரு பச்சைத் தண்ணீரையோ வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று எண்ணுங்கள்.

வீட்டில் குழந்தைக்கோ அல்லது யாருக்காவது உடல் நிலை சரியில்லாது இருந்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும் அவர் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கவேண்டும், அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

அந்த விநாயகர் படத்தையே பாருங்கள். இப்பொழுது உங்கள் உடலுக்குள் ஒரு விதமான சக்தி வரும். அந்த சக்தியை வைத்து உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற நிலையில் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அதற்குத்தான் உங்களுக்குக் காசு கொடுப்பது. அதை வைத்து நன்றாக உற்றுப் பாருங்கள்.

படத்திற்கு முன்னாடி வைத்த தண்ணீரில் இரண்டு துளசியை எடுத்துப் போட்டு அந்தத் தீர்த்ததை எடுத்து உடல் நன்றாக வேண்டும் என்று எண்ணி உடம்பு சரியில்லாதவருக்குக் கொடுங்கள்.

அதே மாதிரி டாக்டரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டாலும் இதே போல மேலே சொன்ன மாதிரி கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு மருந்தை உட்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

நம்பிக்கையுடன் செய்தீர்கள் என்றால் இதை நீங்கள் உங்கள் எண்ணத்தால் தீமைகள் விலகுவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

“உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று இதைத்தான் உங்களுக்குப் பல முறை உபதேசம் செய்கின்றேன். செய்து பாருங்கள்.