ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2015

அன்று ஒரு அகஸ்தியன் நம் பூமியைச் சமப்படுத்தினான், இன்று பல அகஸ்தியர்களை நாம் உருவாக்குதல் வேண்டும்

தாய் கருவிலே வளர்ந்தவன் தான் அகஸ்தியன். தீமைகளை வெல்லும் உணர்வு பெற்றவன். எல்லா தீமைகளையும் அகற்றி ஒளியின் உணர்வாகப் பெற்றவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் உணர்வைப் பெற்று அந்த உணர்வின் இயக்கத்தை கருவுற்றிருக்கும் தாயின் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகள் பெறவேண்டும் என்று நாம் தியானித்திடல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளை தாயின் இரத்தத்தின் வழி செலுத்தினால் அந்த ஞானத்தின் தன்மை குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

ஏனென்றால், நமக்குள் இன்னல்கள் பல வளர்ந்திருப்பதனால் நம்மால் உயர்ந்த ஆற்றல்களைப் பெற முடியவில்லை என்றாலும்
வளரும் குழந்தைகளுக்குத் தாய் கருவிலேயே
இந்த ஞான வித்தை ஊன்றிடல் வேண்டும்.

அப்படி ஊன்றிவிட்டால் அதன் வளர்ச்சி கொண்டு கருவில் வளரும் சிசுக்கள் தீமைகளை அகற்றும் ஞானம் பெற்று நம் குடும்பத்திலும் தீமையை அகற்றும் ஞானியாகி உலக இருளை நீக்கும் தன்மையாகி நம்மையும் காக்கும் அருள் ஞானியாக ஆவார்கள்.

 அகஸ்தியனுடைய தாய் தந்தையர் காட்டுவாசிகளாக இருந்தாலும் அவர்களைக் காத்தான், பிறவியில்லா நிலை அடையச் செய்தான் அகஸ்தியன்.

அதே போல் நமது குழந்தைகளை இந்த முறைப்படி நாம் வளர்த்தோம் என்றால் நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வார்கள் நம் அருள் ஞானக் குழந்தைகள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

ஆகவே, குடும்பத்தில் உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ தாய்மார்கள் கர்ப்பமானால் அந்தக் குழந்தைக்கு அகஸ்தியன் பெற்ற பேராற்றல்கள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

எல்லோரும் சேர்ந்து தியானம் செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் குறைந்த பட்சம் அந்தத் தாய்மார்களிடம் சொல்லிக் காதிலே கேட்க வையுங்கள்.

உன் குழந்தை ஞானியாக வளர்வான்,
வீட்டைக் காப்பான்
இந்த உலகைக் காப்பான்,
அகஸ்தியன் அருளைப் பெறுவான் என்று சொல்லுங்கள்.

இந்த உணர்வுகள் கர்ப்பமான தாயின் காதிலே பட்டு உடலுக்குள் சென்று பதிவாகும். அணுவாக உருவாகும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். குழந்தையின் பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தியும் உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளரவேண்டும் என்று அந்தக் கர்ப்பிணியைக் கேட்கச் செய்யுங்கள்.

அவன் உடலில் விளைந்தால், வித்து வளர்ந்து அவன் வளரப்படும் போது அவன் எடுக்கும் சக்தி நமக்குக் கிடைக்கும். அவன் நம்மைக் காத்திடும் உணர்வு வரும். ஆகவே, கருவிலேயே இந்த ஞான வித்துக்களை ஊன்றிப் பழக வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கர்ப்பமானால் ஒரு விரதம் போன்று அந்தப் பத்து மாதத்திற்கும் இதே மாதிரிச் செய்யுங்கள்.

அகஸ்தியனுடைய அருளைப் பெறவேண்டும்,
அவன் துருவனான அந்த ஆற்றலைப் பெறவேண்டும்,
அகண்ட அண்டத்தினையும் அறிந்து ஒளியின் உணர்வாகப் பெற்ற
அந்தத் துருவ நட்சத்திர்த்தின் பேரருளைப் பெறவேண்டும்
என்று கருவிலிருக்கும் சிசுக்களைப் பெறச் செய்ய வேண்டும்.

அகஸ்தியனின் பார்வையில் நஞ்சை வென்றானோ அதே போன்று இந்தக் குழந்தைகள் பெறவேண்டும். பிறந்த பின் நஞ்சை வென்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்

அகஸ்தியன் இருளை நீக்கிடும் அருள் சக்தியை எப்படிப் பெற்றனோ,
துருவத்தின் ஆற்றலை எப்படிப் பெற்றானோ
துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ
அந்த ஆற்றலகளையெல்லாம் குழந்தைகள் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை எடுத்துப் பாய்ச்சப்படும் போது நமக்குள்ளும் விளைகின்றது. தாய் கருவுக்குள் இருக்கும் குழந்தைக்குள்ளும் விளையச் செய்கின்றது.

அந்தக் குழந்தைகள் வளர உங்கள் குடும்பத்தில் உள்ள சாப அலைகளை, தீய அலைகளை பாவ அலைகளை பூர்வ ஜென்ம அலைகளை எல்லாம் மாற்றியமைக்கும்.

அவன் வளர்ந்தால் உங்கள் குடும்பத்தைக் காக்கின்றான், நாட்டைக் காக்கின்றான், இந்த உலகையும் காக்கின்றான். ஆகவே, இத்தகையை ஞானிகளை நாம் உருவாக்குதல் வேண்டும்.

ஒரு அகஸ்தியன் அன்று நம் பூமியைச் சமப்படுத்தினான். இன்று நாம் பல அகஸ்தியர்களை உருவாக்க வேண்டும்.

பூமியில் இன்று துருவப் பகுதி கரைந்து நடு பூமி கொதிகலனாக மாறி பூமியே குழம்பு போல் மாறும் தன்மையில் உள்ளது.
எல்லாம் உள்ளுக்குள் சென்று இது கரைந்து வந்தால்
மீண்டும் மீண்டும் கொதிகலனாகி
கரைந்து நீர் நிலைகள் பெருகி
நாமெல்லாம் பாதாளத்திற்குள் சிக்கி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அது நடப்பதற்கு முன் நாம் மேலே சொன்ன மாதிரி அகஸ்தியனின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குழந்தைகள் காக்கும்.

அது எடுத்து நம்மை விண் செலுத்தவும் உதவும். நாம் பிறவியில்லா நிலையை அடையவும் உதவும். ஆகவே இதைத் தலையாக கடமையாகச் செய்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்..