ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 4, 2015

நம் சொல்லால் நம்மைக் காக்கவும், மற்றவர்களை நல்லவராக்கவும் நாம் கையாள வேண்டிய முறை

உங்களுக்குள் ஏற்கனவே பதிவு செய்து கொண்ட நிலைகளில், தவறு செய்பவர்களை உற்றுப்பார்த்தவுடன் இந்த உணர்வுகள் இயக்கச் செய்கின்றது.

அவர்களிடம் குற்றத்தின் உணர்வுகள் இருக்கின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் குற்றத்தை நமக்குள் நுழைய விடாதபடி,
"அவர் பொருளறிந்து செயல்படும் அந்த சக்தி பெறவேண்டும்;
தெளிந்த மனம் பெறவேண்டும்" என்று எண்ணினால்,
அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வருவது இல்லை.

இது நம்மைப் பாதுகாக்கின்றது.

இப்படி ஒவ்வொருவரும் அத்தகைய பாதுகாப்புக்கவசமாக மாற்றிக் கொண்டீர்களென்றால், "நல்லது". இதை நாம் ஒரு வழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடவேண்டும்

ஒவ்வொன்றும் நம் உயிரிலே படும் பொழுது, இந்த உணர்வுகள் "குருஷேத்திரப் போர்".

நம் உடலுக்குள் சென்று விட்டதென்றால் மற்ற உணர்வுகளுடன் கலக்கப்படும் பொழுது “மகாபாரதப் போர்” கலக்கங்களும் சஞ்சலங்களும் நமக்குள் வந்து கொண்டே இருக்கும்.

அதனால் இதைப் போன்ற நிலைகளை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?

யாராக இருந்தாலும் குற்றவாளியாக இருந்தாலும் சரி,
அதை விட மோசமான நிலையில் இருந்தாலும் சரி
வெறுப்பான தவறு செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் சரி,
அந்த ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் அது பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணிவிட்டீர்கள் என்றால், அவர்களுடைய உணர்வுகள் உங்களிடம் வராது;

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள் வரவே கூடாது; அந்த உணர்வு இயக்கவும் கூடாது.

அதற்கு மாறாக, அந்த ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயத்தில்
அந்த தெய்வீகப் பண்பும், தெய்வீக அருளும்,
தெய்வீக நிலையும் அவர்கள் பெறவேண்டும்.
மலரைப் போல மணமும்,
மகிழ்ந்து வாழும் அந்த சக்தி பெறவேண்டும்;
தெளிந்த மனம் பெறவேண்டும்;
தெளிவான நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால்
நமக்குள் வராமல் இதைச் சேர்த்துக் கொள்கின்றோம்;
இதற்கு அணைப்பாகப் போட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் எத்தனை முறை சொன்னாலும், அவர்கள் எடுக்கவில்லையென்றால், அது அவர்களுடைய நிலைகள். அவர்கள் எதை எடுக்கின்றார்களோ அதைப் பெறுவார்கள்.

ஆனால், நம்முடைய கடமை ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் சுத்தமாக வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கவேண்டும்.

அப்பொழுது சுத்தமாக வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் சுத்தமாகின்றது. ஆகவே, இந்த முறையைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.

பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ கேட்டீர்கள் என்றால் அவர்கள் நன்றாக ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அடுத்து "அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்; உடல் நலமாக வேண்டும்; அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்; அந்த நிலை பெற வேண்டும்" என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அதற்குப் பதில் அவர்களுடன் கலந்து இப்படிக் கஷ்டமென்று உரையாடிவிட்டீர்களென்றால்
அந்தக் கஷ்டம் உங்களுக்குள் கலந்து MIXER ஆகி
உங்களிடம் விளைய ஆரம்பித்து விடும்.
ஆகையினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கஷ்டத்தை நம்மிடம் சொல்வார்கள். நாம் எல்லாம் கேட்ட பிற்பாடு, நாங்கள் ஆத்மசுத்தி செய்துவிட்டோம். உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள்சக்தி படர்ந்து,
உங்கள் குடும்பத்தில் எல்லலோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்;
எல்லா நல்ல சக்தியும் கிடைக்கும்;
உங்கள் குடும்பத்தில் நன்றாக இருப்பீர்கள்;
தெய்வீக நிலை இருக்கும்; தெய்வீகப் பண்பு இருக்கும்;
தொழில் வளம் பெருகும்;
உங்கள் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்
என்று உங்கள் வாயினால் சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது அது அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஊட்டும். அதே சமயத்தில் நமக்கும் அந்த உற்சாகத்தை ஊட்டும்

ஆகவே, எது எப்படி வந்தாலும் நம்முடைய சொல் மற்றவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டுமே தவிர, அவர்கள் பட்ட வேதனை நம்முடைய நல்லதைக் கெடுத்து விடக் கூடாது.

நாம் அதற்கு இந்த முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.