ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2015

தியானம் செய்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தினசரி வாழ்க்கையில் பகலில் நாம் எல்லோரிடமும் பழகித்தான் ஆகவேண்டும் . அவர்கள் நல்லது கெட்டதை அறிந்துதான் ஆகவேண்டும். அவர்களுடைய தவறுகளை நுகரத் தான் வேண்டியதிருக்கும்.

ஆனாலும், அதிலிருந்து விலகிச் செல்லவேண்டும். ஏனென்றால் கேட்டு அறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் வித்தாக உருவாகிவிடுகிறது. இதுதான் ஊழ்வினை என்பது.

நம் வாழ்க்கையில் எத்தகைய கெட்டதைப் பார்க்கின்றோமோ அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகிறது. வினைக்கு நாயகனாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.

இதிலே எந்த எண்ணங்கள் அதிகமாகச் சேர்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகி நமக்குள் செயல்படத் தொடங்கிவிடுகிறது. அந்த கணங்களுக்கெல்லாம் ஈசனாகச் செயல்படுவது உயிர்.

எந்த அணுவின் தன்மையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதை உயிரான ஈசன் தான் உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை அதிபதியாக்கப்படும் பொழுதுதான் அதற்குத் தகுந்தமாதிரி சுவையின் தன்மை உருவாக்கப்படுகிறது.

ஆக, மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது. ஆத்ம சுத்தி செய்கிறோம்.

அடுத்து குறைகளை அடுக்கடுக்காகச் சேர்க்க ஆரம்பித்துவிடுகிறோம். இதுவும் அதனுடன் இணை சேர ஆரம்பித்துவிடுகிறது. நாம் நன்மை செய்யும் உணர்வுகள் தணியத் தொடங்கிவிடுகிறது.

நம்முடைய உணர்வுகளில் நன்மை செய்யும் உணர்வுகள் வளர்ச்சி குன்றும் போது உடலில் நன்மை பயக்கும் உணர்வுகள் குறைகின்றது. நல்ல அணுக்களுக்கு ஆகாரம் இல்லையென்றால் உடலையும் பலவீனப்படுத்தும்.

உதாரணமாக, நாம் வேலை செய்கிறோம் என்றால் கையில் பட்ட அழுக்கை உடனுக்குடன் துடைத்துவிடுகின்றோம். அப்படித் துடைத்தாலும் முழுமையாகப் போகாமல் சந்துகளில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்.
 நம் உடலுக்குள் போகும் பொழுது
அதன் கெடுதலைக் கொஞ்சமாவது காட்டத்தான் செய்யும்.

இதே மாதிரி ஒவ்வொரு சமயத்திலும் பிறர் தீமைகளைக் கேட்கும்பொழுது ஆத்ம சுத்தி செய்துகொண்டாலும் அடுத்து இரவு படுக்கபோகும்போது மீண்டும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உள்ளுக்குள் எடுத்து ஆத்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அப்படிச் சுத்தப்படுத்தினாலும் கூட அந்த உணர்வின் அணுக்கள் சாப்பாட்டிற்காக ஏங்கும். நாம் புலனடங்கித் தூங்கினாலும் அதது உணர்ச்சிகளைத் தூண்டி நம் ஆன்மாவில் கலந்து இழுக்க ஆரம்பித்துவிடும்.

இது ஏனென்றால், ஒரு நண்பரிடத்தில் பேசி இருக்கின்றோம். அவருக்காக வேண்டி அவர் கஷ்டத்தைக் கேட்டிருக்கிறோம் என்றால் அந்த உணர்வுகள் ஆன்மாவில் இருக்கும். அதன் வித்தாக இங்கு இருக்கும்.

எவ்வளவுதான் ஆத்ம சுத்தி செய்தாலும் நம் நண்பனுக்கு அவன் கஷ்ட நஷ்டங்களை நீக்க உயர்ந்த கருத்துக்களைப் போதித்தாலும் அதை நாம் வாங்கித்தான் சொல்கின்றோம்.

அவர் எப்படியும் மீளவேண்டும் என்று எண்ணத்தில் சொன்னதால் அவருக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தத் தீமையில் இருக்கின்றார் என்று அறிய முடிகிறது. இரவில் கனவில் வரும்.

அவருடைய உணர்வும் நாம் சொன்ன நிலையும் இரண்டும் இணைந்து நம் ஆன்மாவில் கலந்து நாம் புலனடங்கித் தூங்கும்போது அழுக்கு அதிமாகப் படும்.

ஏனென்றால், பாசத்தால் அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று அவர்கள் கருத்தை ஏற்றுத்தான் நாம் சொல்கிறோம். அந்த உணர்வுகள் நாம் புலன் அடங்கித் தூங்கும் பொழுது உயிரிலே பட்டவுடன் உருவாமாகவே சிலருக்கு நேரடியாகவே தெரியும்

அந்த மனிதரின் நிலைகள் அவருக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் பிசாசைப் போன்று தெரியும். ஏனென்றால் அந்த ஆக்ரோஷ உணர்வுகள் நாம் பக்தி வழியில் கண்டுணர்ந்தபின் அவர் சொன்ன உணர்வுகள் இதனுடன் கலந்து ரூபமாகத் தெரியும்.

அவருக்குள் எதிரியாக அவர் நல்ல உணர்வுகளுக்கு எதிரியாக உருவாகிற மாதிரி காட்சியாகத் தெரியும். இந்த உணர்வின் ஓட்டங்களில் அவருக்கு ஏற்படும் நிலைகள் தொழில் நஷ்டமாவதும், கொடுக்கல் வாங்கலில் முடியாத நிலைகளும் தெரியவரும்.

அதாவது அந்த உணர்வுகள் நம் புலனில் கலந்து நாம் எடுக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு அதைத் தெரிய முடிகின்றது. நாம் இந்தத் தியானத்திலிருக்கும் பொழுதோ, சும்மா இருக்கும் பொழுதோ, கனவிலோ, நினைவுகளில் வரும்.

அந்த மாதிரித் தெரிந்து கொண்டாலும், தியான வழிகளில், இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.

தூக்கத்தில் இருந்தாலும்,
சும்மா படுத்திருந்தாலும்,
நாம் அமைதியாக இருக்கும் பொழுது,
இந்த ஆன்மாவில் உள்ளபடி,
நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

தற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்,
நம் நினைவை, துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தோடு,
சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால், அந்த உணர்வுகள் நமக்குள் வர வர, இது ஒடுங்கும். இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில், நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்கு, சாப்பாடு போய்ச் சேராது.

இப்படி தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து, அதை அகற்றும்படி, நாம் செய்ய வேண்டும்.