ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2015

கூட்டுத் தியானத்தின் வலிமை மிகவும் சக்தி வாய்ந்தது

என் காலில் 27 ஆணிகள் இருந்தது. குருநாதர் ஆணைப்படி கால்நடையாக சுற்றுப்பயணம் செய்தேன்.

ஆணிக் கால் உள்ளவர்களைக் கேட்டால் தெரியும். சிறிய கல் குத்தினால் அப்படியே. உச்சி மயிர் நட்டமாக நிற்கும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவிற்கு உயிர் போகிற மாதிரி வலி வேதனை இருக்கும்.

ஒரு சிறிய பிரம்பு எடுத்து ஆணியிலே அடித்தால் போதும் அவர் உயிரே போனால் போகும். அந்த அளவிற்கு அந்த ஆணியின் வேகத் துடிப்பு உண்டு.

ஆணிக் காலுடன் நான் நடந்து செல்லச் செல்ல ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த வேதனையை என்னால் தாங்க முடியாது. அன்றைக்கு செருப்பு போடக்கூடாது என்கிறார் குருநாதர்.

ஏனென்றால், புவியின் நிலைகளை ஈர்த்து மற்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு செருப்பில்லாமல் தான் நீ நடக்க வேண்டும் என்றார்.

அந்த ஆணிக் காலில் சிறு மலர் குத்தினால் போதும், வேதனைகளைத் தாங்க முடியாது. இருப்பினும் அதைத் தாங்கிக்கொண்டு இதைப்போல ஒரு உணர்வின் தன்மை ஒரு உடலிலே விளைய வைத்த இந்த வித்து ஒவ்வொரு அலைகளால் தாக்கப்படும்போது
அந்த விஷத்தின் தன்மை தனக்குள் எடுத்து சுவாசிக்கும் பொழுது
மக்கள் எப்படி வேதனைப்படுவார்கள்
என்று உணரும்படி செய்தார்.

ஏனென்றால் இதை அனுபவத்தில் அறிந்து கொள்வதற்கே குரு இப்படிச் செய்தார். அப்படி பல சிரமங்களுக்கு மத்தியில்தான் நான் தெரிந்துகொண்டேன்.

அதே சமயத்தில் உங்களை அறியாமலே எத்தனையோ தீமைகள் மறைந்திருந்து உங்களைத் தாக்குகின்றது. அவைகளில் இருந்து நீங்கள் மீள வேண்டும் என்றுதான் இதை உபதேசிக்கின்றோம்.

குரு கொடுத்த ஆணையின் சக்தி கொண்டு உங்களில் பல ஆயிரம் பேரை ஒன்று சேர்த்து கூட்டு தியானத்தின் மூலம் தீமைகளை அகற்றிடும் அருள் ஞான வித்தாக
வலுவான நிலைகள் கொண்டு
உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

காரணம் நம் எல்லோருடைய உடல்களிலும் பகைமை உணர்வு உண்டு. தீமையான உணர்வு உண்டு சாப உணர்வுகள் உண்டு.

இருப்பினும் கூட்டு தியானத்தில் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் நினைவலைகளைக் கூட்டி தியானிக்கச் செய்து இந்த அலைகளை ஒலிபரப்புச் செய்யப்படும் போது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உணர்வினை ஒருங்கிணைந்து உங்களுக்குள் ஆழப்பதிவு செய்கிறோம்.

ஆக கேட்டுணரும்போது இந்த வித்தின் தன்மை படர்ந்துவிட்டால் உங்களுக்குள் உடலுக்குள் இருக்கும் இந்த பகைமை உணர்வை நீக்கச் செய்கிறது.

மகரிஷிகளின் உணர்வலைகள் பதிந்த எல்லோருடைய ஆயிரக்கணக்கான இந்த உணர்வின் சத்து அந்த மகரிஷிகளின் எண்ண அலைகளுடன் கலந்து வருவதை உங்களுக்குள் ஆழப்பதிவு செய்வதற்கே இந்தக் கூட்டுத் தியானங்கள் வைப்பது.

ஒரு தேரை எப்படி ஆயிரம் பேர் சேர்ந்து வடம் பிடித்து இழுத்து எல்லையை அடையச் செய்கின்றனரோ அதைப்போல சக்தி வாய்ந்த அருள்ஞானியின் உணர்வை நீங்கள் கவர்வதற்கு எல்லோருடைய உறுதுணையும் தேவை.

அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால் நம் சமுதாயத்தில் உள்ள எல்லோருடைய நல்ல உணர்வுகளையும் அந்த மகரிஷிகளுடைய உணர்வுடன் ஒன்றச் செய்து ஆழப்பதிவு செய்ய வேண்டும்.

அதற்குத்தான் இக்கூட்டு தியானங்களை வைத்து உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி மகரிஷிகளின் எண்ண அலைகளுடன் உங்களை ஒன்றச் செய்து அது நம்முன் படர்ந்திருப்பதைக் கவர்ந்து உங்கள் எல்லையான இந்த ஆன்மாவில் கலக்கச் செய்து அந்த உணர்வின் சத்தான நிலைகள் ஆழப்பதியச் செய்கின்றோம்.

அப்படிப் பதிந்த உணர்வின் சத்தின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு
ஆபத்துக்கள் நேரும்போது,
சலிப்புகள் வரும்போது,
சங்கடம் வரும்போது,
துயரம் வரும்போது,
தொல்லைகள் வரும்போது,
வேதனைகள் வரும்போது,
சாப அலைகள் வந்து மனக்கவலை வரும் பொழுது
அதனால் மன நிம்மதியற்ற நிலைகள் ஏற்பட்டு
மன நோயும் மனதில் பல அல்லல்கள் பட்டுக்கொண்டிருக்கும்போது

இவ்வேளையில் நீங்கள் ஒரு நிமிடம் மனம் துணிந்து “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கப்படும்போது கூட்டுத்தியானத்தில் பதிவு செய்த அந்த உணர்வின் வித்தை வலுகொண்ட நிலைகளில் நீங்கள் எடுத்து அதைச் சுவாசிக்கும்போது சர்வ துன்பங்களிலிருந்தும் உங்களை விடுபடச் செய்யும்.