ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2015

முந்தைய சாப அலைகளிலிருந்து விடுபடச் செய்யும் ரிமோட் கன்ட்ரோல் சக்தி

பல இலட்சம் மக்கள் அவரவர் உடலில் விளைந்த சாப அலைகளும் வெறுப்பலைகளும் வேதனை அலைகளும், அவர்கள் உடலில் விளைவித்த இந்த உணர்வுகள் எவ்வாறு அது பூமியில் படர்ந்து கொண்டுள்ளது?

சாபமும் வேதனையும் அந்தந்தக் குடும்பங்களில் இரண்டு தலைமுறைக்கு முன்னாடி ஒருவர் உடலிலே பதிவு செய்திருந்தால் அந்த வம்ச வழியில் அந்த உணர்வின் அணுக்கள் எவ்வாறு அந்தக் குடும்பத்தைச் சார்ந்து படர்ந்து கொண்டிருக்கின்றது?

இதையெல்லாம் அறிவதற்காகத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்தார் நமது குருநாதர்.

காரணம் இன்று ஒரு வித்தை எடுத்து நாம் நிலத்தில் பதியச் செய்தால் அந்த வித்தின் சத்தின் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் சத்தை எடுத்து வளர்கின்றது.

அதைப் போல ஒரு குடும்பத்தில் முந்தைய நிலைகளில் சாபமிட்டாலும்
அந்த உடலிலே பதிவு செய்த வித்து முளைத்து
அந்தக் குடும்பத்தின் நிலைகள் கொண்டு பரவி வருகிறது.
பதிவாகிவிடுகிறது.

அந்தக் குடும்ப வம்சாவழியில் அது படிப்படியாக வந்து மீண்டும் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் அந்தச் சாப உணர்வலைகள் அந்தக் குடும்ப வம்சத்தில் பரவிக்கொண்டு வருகிறது.

உதாரணமாக ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் புது சம்பந்தங்கள் (திருமணங்கள்) செய்தாலும் அது சம்பந்த வழிகளில் இந்தச் சாப அலைகள் தொடர்ந்து வருகிறது.
திருமணமாகி வந்தாலும் முந்தைய சாப அலைகள் அதன் உணர்வு இங்கே தொடர்ந்து வந்துவிடுகிறது. ஆக, எத்தனையோ தீங்குகள் வருகிறது.
நாம் தவறு செய்யவில்லை என்றாலும்
சாப வழிகளில் இங்கே தொடர்ந்து வந்துவிடுகிறது.

நாம் தர்மம் தானம் அத்தனையும் செய்தாலும் சாப அலைகளின் வித்து நமக்குள் வந்து அதனின் விரயத்தன்மையைச் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது.

சாபம் என்பது மிகக் கடுமையான விஷமான சக்தி என்று பொருள். இத்தகைய நிலைகள் எல்லாருடைய குடும்பத்திலும் உண்டு.

சாப அலைகளை நீக்குவதற்குத்தான் இப்பொழுது உங்களுக்கு தியானத்தின் மூலம் அருள் ஞான சக்திகளைப் பெற உபதேசிக்கிறோம். தியானத்தின் மூலம் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறும்போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த சாபங்களை நீக்கச் செய்யும்.

சிலர் சொல்வார்கள். நானும் தியானம் செய்கிறேன். நான் ஒரு தப்பும் செய்யவில்லையே.., எனக்கு ஏன் இந்த நிலைகள் வருகிறது? என்பார்கள்.

நாம் வெறும் தியானத்தில் இருந்தால் மட்டும் போதாது. யாம் சொல்லும் முறைப்படி காலையோ, மாலையோ, வெளியில் செல்லும் பொழுதோ ஆத்ம சுத்தியை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆத்ம சுத்தியின் பயன் தான் வாழ்க்கையே தியானம் என்பது.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ இதைத் தொடரும் பொழுதெல்லாம் பலவீனப்படுத்தும் போதும்
அந்த உணர்வலைகள் நமக்குள் உட்புகுந்துவிடும்.
சாப அலைகளின் நிலைகளைச் செயல்படுத்தத் தொடங்கிவிடும்.

ஆகவே இதை நீக்குவதற்கு கூட்டுத் தியானத்தின் மூலம் உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அதிக அளவில் பெறச் செய்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்க
உங்கள் எண்ணத்தால் எண்ணும்போதுதான்
மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
உங்களுடைய பூர்வ புண்ணியத்தில் சேர்த்த இந்தச் சாப அலைகளை நீக்க முடியும்.

ஏனென்றால் பல பாகங்களில் இந்த பூமியின் நிலைகளில் சுற்றிப்பார்த்து குரு காட்டிய நிலைகளில் சாப அலைகள் எவ்வாறு படர்ந்துள்ளது என்று எம்மை அறியும்படிச் செய்தார்.

மனிதனின் நிலைகளில் படிப்படியாக அந்த சாப அலையின் வித்து ஊன்றி அந்த வித்தின் சத்துகள் மீண்டும் இந்தக் காற்றிலிருந்துதான் எடுத்து விளைகிறது.

இந்தப் பூமியான பரமாத்மாவில் எப்படிப் படர்ந்திருக்கிறது என்ற நிலையை அறிவதற்காக எம்மைக் கால் நடையாகப் போகச் சொன்னார். பஸ்ஸிலோ, மற்ற வாகனத்திலோ போகக்கூடாது என்று கூறிவிட்டார் குருநாதர்.

எத்தனையோ சாப அலைகள் இட்டவர்கள் அவர்கள் நடமாட்டம் உண்டு. அந்த நடமாட்டம் வரும் பொழுது அவர் உடலிலே விளைந்த நிலையும் அந்த உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் எவ்வாறு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது?

அப்படி அங்கே நடந்து செல்லப்படும் பொழுது என் காலடியில் இப்பொழுது எப்படி எலெக்ட்ரிக் TOUCH பண்ணிய உடனே பல செயல்கள் நடப்பது போல அங்கே பதிவான சாப அலைகள் குவிந்துள்ளதை உணரும்படி செய்தார் குருநாதர்.

அந்த அலைகளைத் தொடர்ந்து பார்க்கும் பொழுது இந்தப் பூமியில் இருப்போர்கள் தவறு செய்யமாலேயே இந்தப் பாவ அலைகள் அந்தச் சாப அலைகள் இங்கே தொடர்ந்து கொண்டு அவர்களை எவ்வாறு வாட்டுகிறது?

திடீரென்று விபத்துகளும்,
மற்ற இனம் புரியாத எத்தனயோ நிலைகளும்
குடும்பத்தில் சங்கடங்களும், சலிப்பும்,
காரியங்கள் தடைப்படுத்திக் கொண்டிருப்பதும்,
முந்தைய சாப அலைகளால்தான் என்று உணர முடிந்த்து.

இதைப் போன்ற கடுமையான நிலைகளிலிருந்து விடுபடுவதற்கும் சாப அலைகளை வென்றிடவும் வலிமையான சக்தியாக உங்களுக்குள் மகரிஷிகளின் அருள்சக்திகளை ஆழப்பதிவு செய்கின்றேன்.

உங்களுக்கு உபதேசித்துவிட்டு வெறுமனே இருப்பதில்லை. உபதேசித்த இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையவேண்டும் என்று தவமிருக்கின்றேன்.

குருநாதர் எமக்குள் பதிவு செய்த நிலைகள் கோண்டு நான் எப்படிக் கண்டறிய முடிந்ததோ அதைப் போல உங்கள் சந்தர்ப்பத்தில் உங்களையறியாது தீமைகள் வரும்போது அதை விலக்கிடும் REMOTE CONTROL தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஒரு ரோஜாப்பூ தன் நறுமணத்தால் மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றது.

அது போல உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைப் பதிவு செய்து அந்த எண்ணத்தை அதிகமாக்க் கூட்டப்படும் பொழுது உங்களை அறியாதபடி தீமைகள் எது வந்தாலும் அதை நீக்கும் நிலை வருகின்றது.