ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2015

மோட்ச தீபம் எது...?

அம்மா அப்பா இறந்து விட்டால் தலைப்பிள்ளை மாவிளக்கு எடுத்து மோட்ச தீபம் ஏற்றி விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று தீபத்தை அணையாமல் விட்டால் அவர்கள் மோட்ச லோகத்திற்குச் செல்வார்கள் என்று  செய்கிறார்கள்.

ஆக அவர்களின் சாம்பலை எடுத்துக் கங்கையில் கொண்டு கரைத்தால் அவர்கள் செய்த பாவம் கங்கையுடன் சென்றுவிடும்.

இந்த மோட்ச தீபத்தை எடுத்து விநாயகர் கோவிலுக்குக் கொண்டு போய் பூஜை செய்து விட்டு வந்தால் அப்பா அம்மா சொர்க்கத்திற்குச் சென்றுவிடுவார்கள்.
ஆக மோட்ச தீபம் ஏற்றலாம் என்று
இப்படிப் தப்பான அபிப்ராயத்தினைத் தான் காட்டியுள்ளார்கள்.

விநாயகரை எண்ணும் பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்ற இந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி உந்திச் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்திற்குள் சென்றவுடனே அது ஒளிச்சுடராக மாறி அந்த உடல் பெறும் விஷத்தின் தன்மை அங்கு அந்த ஒளிக்கடலிலே கருகி பஸ்பமாக மாறிவிடும்.

உடலைவிட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை மோட்சத்திற்கு ஏற்ற வேண்டுமென்றால் அந்த ஞானியை எண்ணி அந்த உணர்வின் அருள் சக்தியை எடுக்க வேண்டும்.

ஆக அந்த விநாயகர் யார்?

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனான இந்த மனித உடலை எடுத்துத்தான் இதை வென்ற அந்த மகரிஷிகளின் அருள் ஒளி சக்தியை எடுத்து அதை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருளை வினையாகச் சேர்த்து அன்னை தந்தையின் உயிரான்மாக்களை அந்த ஒளிச்சுடராக மோட்ச லோகம், அதாவது சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்ய வேண்டும்.
அது தான் "மோட்ச தீபம்" என்பது.
அங்கே ஒளியின் சுடராகும் பொழுதுதான் மோட்சமாகின்றது.

மகரிஷிகளின் ஒளியை வினையாகச் சேர்த்து அந்த வினையின் வலு கொண்டு அன்னை தந்தையின் உயிரான்மாவை அந்த ஒளிக்கடலிலே கலக்கப்படும் பொழுதுதான் அங்கே உடல் பெறும் உணர்வுகள் பஷ்பமாகி அதற்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் எண்ண அலைகள் ஒளியாக மாறி தீபமாக, சுடராக, அதாவது ஒளியின் சுடராகப் பெறுவார்கள்.

இப்படித்தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். ஞானிகள் சொன்ன மாதிரி யாரும் செய்வதும் இல்லை. அதை அறிந்து கொள்வாரும் இல்லை. இப்பொழுது சொன்னால் கூட யாரும் கேட்பதும் இல்லை.

"சாமி நன்றாகத்தான் சொல்கின்றார்" என்கின்ற வகையில் ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்.

கண ஹோமம் செய்தால் அவன் பார்த்துக் கொள்வான். விநாயகர் கோவிலுக்குச் சென்று தேங்காய் பழத்தை உடைத்தால் சரியாகப் போய்விடும்.

கொழுக்கட்டை செய்து விநாயகனுக்குப் பூஜை செய்தால் அவன் பார்த்துக் கொள்கின்றான். அருகம்புல் - விநாயனுக்குப் பிரியமானதைக் கொடுத்தால் சரியாகப் போய்விடும்.

இப்பொழுது எல்லாவற்றையும் கேட்பார்கள். அடுத்து "சாமி நன்றாகச் சொல்கின்றார்" என்பார்கள். ஆனால், சாஸ்திர விதிப்படி அதைச் செய்தால் அவன் பார்த்துக் கொள்கிறான் என்று அவர்கள் வழக்கத்தில் உள்ளதுபோல் செய்வார்கள்.

ஏனென்றால், கடலிலே பெருங்காயத்தைக் கலந்தால் எவ்வளவு நேரம் வாசனை இருக்கும்? சிறிது நேரமே இருக்கும். கடலுக்குள் பெருங்காய வாசனையைக் கலந்து விட்டால் பிறகு வாசனை போய்விடும்.

கடலைப் போல உங்கள் உடலுக்குள் எடுத்துக் கொண்ட வேள்விகளும் செய்து கொண்ட பல நிலைகளும், அந்த உணர்வின் இயக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, மெய் ஞானிகள் சொன்ன இந்த உணர்வினைப்  பெற முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.

இப்பொழுது உயர்ந்த சொல்லைக் கேட்டுணர்ந்தாலும் அந்த ஞானிகள் சொன்ன உண்மையான நிலைகளை உணர்ந்தாலும் கடலிலே கலக்கிய பெருங்காயம் போன்று தான் சிறிது நேரத்தில் 
"சாமி நன்றாகச் சொல்கின்றார்" என்று சொல்லிவிட்டு
அங்கே போனவுடன் அந்த சாங்கியங்களைத் தான் செய்கிறார்கள்.

அம்மா அப்பா மோட்சத்திற்குப் போக வேண்டும் என்றால் யாக வேள்விகளைச் செய்து அங்கே பிண்டம் பிடித்துவைத்து அங்கே அவர் சொல்லக்கூடிய மந்திரத்தில், நீ "சுவாஹா" சொல்லி வெளியிலே அனுப்பி விட்டால் போய்விடும்.

"நீ கனவிலும் வந்துவிடாதே; நனவிலும் வந்து விடாதே; கனவில் வந்தால் உன்னையும் இழுத்துக்கொண்டு சென்று விடுவார்கள்" என்று சொல்லி நாம் இப்படித்தான் அதற்கொரு சாஸ்திரத்தைச் சொல்லி நாம் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.