ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2015

யாம் உங்களுக்குள் பதிய வைத்த அருள்ஞான வித்திற்கு நீங்கள் எடுக்கவேண்டிய சத்து

பிறருடைய தீமையான உணர்வுளை நாம் அடிக்கடி உற்றுப்பார்த்து  நம் ஆன்மாவில் அது அதிகமாகப் படர்ந்துவிட்டால் என்ன நடக்கின்றது?

நம்முடைய தொழில் ரீதியிலோ, நண்பர்களோ அல்லது குடும்பத்திலுள்ளவர்கள் நம்மைப் பார்க்கும்போது நாம் இனிமை கொண்டு அவர்களிடம் நல்ல வார்த்தைகளைப் பேசினாலும் நம் ஆன்மாவில் கண்ணாடியில் அழுக்குப் படிந்தது போல இதனுடைய உணர்வுகள் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

தூசி படிந்த கண்ணாடியைப் பார்த்தால் நம் முகம் தெரிவதில்லை. அழுக்குப் படிந்தது போல நம்மைப் பார்ப்போருடைய உணர்வுகளும் சிந்திக்கும் திறனற்று நமக்கு எதிரியாகவே மாற்றிவிடுகின்றது.

இவை எல்லாம் நம்மை அறியாமலேயே இயக்கக்கூடிய நிலைகள். ஆகவே, நீங்கள் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நல்ல முறையிலே பயன்படுத்தி உங்களை இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்.
ஒரு ரோஜாப்பூவின் வித்தை மண்ணிலே பதிவு செய்தபின் வளர்ந்து
அதனுடைய நறுமணத்தைக் கவர்ந்து
நல்ல நறுமணமான மலரைக் கொடுக்கின்றது.

இதைப்போல, யாம் பதிவு செய்யும் மகரிஷிகளின் அருள்ஞான உணர்வின் வித்து
உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக உள்ளுக்குள் இழுத்து
நறுமணத்தை உங்களுக்குள் கொடுக்கும்.
அதைக் கொடுக்கச் செய்வதற்குத்தான் யாம் இதை உபதேசிப்பது.

இப்பொழுது யாம் உபதேசிக்கும்போது சாமி சொல்வது எனக்கு ஒன்றும் அர்த்தம் புரியவில்லையே என்று அதை திரை மறைவு போட்டு மறுக்கும் நிலைகளில் இருந்துவிடாதீர்கள்.

ஏனென்றால் எல்லோருக்கும் அந்த ஆற்றல்மிக்க சக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். இதை எல்லாம் நீங்கள் என்றைக்கு பார்ப்பது?

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச்செய்து அந்த உணர்வின் சக்தி கொண்டு உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றுங்கள்.

அதன்வழியில், நான் எப்படி உலகம் சுற்றி தீமை எவ்வாறு இயங்குகிறது என்று அறிந்து கொண்டேனோ இதைப்போல
உங்களுக்குள் தீமை விளைவித்துக் கொண்டிருக்கும் நிலையும்,

தீமையான வித்து உங்களுக்குள் இருந்து
தன்னை அறியாமல் இயக்கும் நிலையும்,

புறத்தில் இருந்து அது இழுத்து
ஆன்மாவாக மாற்றி சுவாசித்து
உயிரிலே பட்டு அந்த உணர்வில் இயக்குவதையும்
நீங்களும் தெரிந்து கொள்ளலாம், உணரலாம்.

அப்பொழுது உங்களுக்குள் யாம் இப்பொழுது பதிவு செய்ததை அது பிரித்துக்காட்டும். அப்பொழுது ஆத்ம சுத்தியைக் கூடக் கொஞ்ச நேரம் வலுவாக எடுத்துச் செயல்படுத்தினோம் என்றால் நம் ஆன்மா சுத்தமாகின்றது.

கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க அருள் சக்தி பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள்
அப்பொழுது உங்களுக்குள் ஆழப்பதிந்து,
தனது சத்தின் நிலைகளை எடுத்து அது வளர ஆரம்பித்துவிடும்.

ஒரு வித்தை நாம் ஊன்றினால் அது பல வித்துகளாக உருவாகும். அதைபோல அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுக்குள் படரச் செய்யும்போது தீமைகள் உங்களுக்குள் நாடாத நிலைகளைச் செய்யும்.

ஆனால், “என்ன..? சாமி சொன்னார். நடக்கவில்லை..,” என்று நீங்கள் திரை மறைவு போட்டீர்கள் என்றால் அதுதான் விளையும்.

காரணம், நான் கொடுத்த அந்த வித்திற்கு சத்து இல்லை.  அதற்குண்டான சத்தின் நிலைகளை நீங்கள் எடுத்துச் செயல்படுத்தவில்லை என்றுதான் பொருள்.

நீங்கள் ஒரு வயலிலே நல்ல வித்தைப் போட்டுவிட்டால் அதற்கு வேண்டிய தண்ணீரும் அதற்குண்டான உரமும் அதற்குண்டான பாதுகாப்பும் பார்த்தால்தான் அதனுடைய பலனை அது கொடுக்க முடியும். அதைப்போல
உயர்ந்த ஞானியின் சக்திகளை நீங்கள் பெறவும்,
அது உங்கள் ஆன்மாவில் கலக்கவும்
அதன்வழி கொண்டு நீங்கள் சுவாசித்து
அந்த உணர்வின் தன்மை அறிந்து கொள்வதற்குத்தான்
இவ்வளவு பெரிய நிலைகளைச் செயல்படுத்துவது.