ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2015

சாப அலைகள், பழி தீர்க்கும் உணர்வுகள் வந்து குடும்பங்கள் எப்படி நசுங்குகிறது...? நடந்த நிகழ்ச்சி

இந்த உலகில் மூன்று இலட்சம் பேரை குருநாதர் காட்டுகின்றார்.

ஒவ்வொரு மனிதனும் தவறு செய்யாமலேயே அவரவர் சந்தர்ப்பம் வாழ்க்கையில் வந்த நிலைகள் எவ்வாறு ஊடுருவி அந்தக் குடும்பங்களில் சேர்கின்றது?

ஒற்றுமையாக வாழ்ந்த நிலைகள் எனக்குப் பங்கு குறை,
உனக்குப் பங்கு குறை என்று வரும் பொழுது
சாப அலைகள் எப்படி வருகின்றது?

தொழில் செய்யும் பொழுது பாசததால் தவறு செய்துவிட்டால் அந்தத் தவறால் பழிதீர்க்கும் உணர்வுகள் எப்படி வருகின்றது?

வந்தபின், அந்த உணர்வுகள் அவர்களுக்குள் விளைந்து அதனால் அந்தக் குடும்பங்கள் எப்படி நசுங்குகின்றது?

அதே சமயத்தில் தன் உணர்வால் அன்னை த்ந்தை சம்பாதித்து வைத்திருந்தாலும், கடைசியில் சொத்து வரவேண்டும் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை போட்டு, தாய் தந்தையை அனாதையாக விட்டுவிட்டு அவருடைய சாபங்கள் என்னென்ன வேலை செய்கிறது?

இதையெல்லாம் மூன்று இலட்சம் பேரின் உணர்வுகளைக் காட்டுகின்றார். அப்படி உலகம் முழுவதற்கும் எமக்குள் காட்டிய நிலைகளைத்தான் அனைத்தையுமே உங்களிடம் வெளிப்படுத்துகின்றேன்.

அதில் முதல் மனிதனாகக் காட்டியது என்னுடைய உறவினர் ஒருவர். அவர் ஒரு தரகர். ரேஷன் கடை காண்ட்ராக்ட் எடுத்து நல்ல முறையில் நடத்தினார். பழனியில் இருந்தவர்களுக்கெல்லாம் அவரைப் பற்றித் தெரியும்.

பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்வது, விழாக் காலங்களில் மார்கழி போன்ற மாதங்களில் 1000, 2000 பேர்களுக்குச் சாப்பாடு போட்டு ஏராளமான தர்மங்களைச் செய்தவர்.

ஒரு முறை பழனி மலை மேலே ஏறும் பொழுது, அங்கே விநாயகர் கோவிலுக்கு அருகில் போனவுடன் அப்படியே கை கால் வராமல் கீழே விழுந்துவிட்டார்.

ஆக, கை கால் வேலை செய்யவில்லை, வாயும் பேசவரவில்லை.

இவர்கள் எல்லாம் கூட்டத்தோடு போனதால் மேலே போகாமல், இவரைத் தூக்கிக்கொண்டு கீழே வந்து டாக்டரிடம் கொண்டு செல்கிறார்கள்.

பார்த்தால் பிரஷர் அதிகமாகிவிட்டது என்று சொல்கிறார்கள். பல டாக்டர்களிடம் பார்க்கிறார்கள். ஒரு மாதம் ஆகிவிட்டது. பின் இரண்டு மாதம் ஆகிவிட்டது. சரியாகவில்லை.

அவர் மலைக்குப் போன நிலையும் வந்த நிலையும் குருநாதர் நடந்த இந்த நிலைகளை எம்மிடம் காட்டுகின்றார். இதைக் காட்டிவிட்டு அவரைப் போய்ப் பார் என்றார்.

அங்கே சென்றால், எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்று உள்ளே விடவில்லை.

இந்த மாதிரி நல்லையா மருமகன் வந்திருக்கின்றேன், அவரைப் பார்க்க வேண்டும். இந்த மருந்தைக் கொடுத்தால் அவர் உடல்நிலை சரியாகும், எழுந்து நடப்பார் என்று அங்கே சொல்கிறேன்.

பார்த்தால் உள்ளே இருந்து சப்தம் கேட்கிறது. அவரால் முடியவில்லை. தண்ணீர் வேண்டும், சாப்பாடு வேண்டும், அது வேண்டும் என்று சப்தம் போடுகிறார்.

“சனியன்..”, தொலைந்து போ
சும்மா சப்தம் போடுகிறாய், பேசாமல் கிட. யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தாலும் இந்த மாதிரிப் பண்ணுகிறார் என்று இவர்கள் குய்யோ முறையோ என்று அழுகிறார்கள்.

அவருடைய பையன் என்ன செய்கிறான்? உன்னை இரண்டு சாத்து (அடி) சாத்தினால்தான் சரியாக இருக்கும் என்கிறான். 

எவ்வளவோ பணம் சம்பாரித்து வைத்துள்ளார்கள். ஆனால் அடித்தால்தான் சரியாகும் என்று அவர் பையன் சொல்கிறான்.

என்னிடம் பையன் வந்து, ஐயா, இந்த சனியனுக்கு எதைப் பண்ணினாலும் மறந்து போகும். நீங்கள் பேசாமல் போங்கள். நீங்கள் வந்ததற்கு நன்றி. என்று சொல்லி என்னைப் பார்க்கவிடாமல் செய்தார்கள்.

குருநாதர் முதலிலேயே என்னிடம் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி, நீ அதைப் போய்ப் பார் என்றார். அவர்களிடம் நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை.

கடைசியில் அவர் சாகப் போகும்போது என்னென்ன எண்ணினாரோ
அந்தக் குடும்பத்தில் அனைத்தும் சிக்கலாகி,
மில் என்ன ஆகியது? பையன்கள் என்ன ஆனார்கள்? என்று எண்ணி
எல்லாம் போய்விட்டது.

குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார். இது நடந்த நிகழ்ச்சி.

இதைப் போல, பம்பாய்க்கு நான் கால் நடையாக நடந்து போனேன். குருநாதர் போகச் சொல்லியிருந்த இடங்களில் நான் போய்ப் பார்க்கிறேன். பார்க்கப்படும்போது அவர்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள்?

அப்பொழுது இவர்களைப் படம் எடுத்த மாதிரிக் காட்டுகிறார் குருநாதர். அதற்கப்புறம் அங்கே போகிறேன்.

அங்கே போய் உட்கார்ந்து இரவெல்லாம் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? அவர்கள் குடும்பம் எப்படி? அந்தக் குடும்பத்தில் எப்படியெல்லாம் என்று பார்க்கச் சொன்னார் குருநாதர்ர்.

இதைப் பார்க்க சொன்னதோடு மட்டுமல்ல. அவர்கள் கஷ்ட நஷ்டங்களை நீ எண்ணிய உடனே உனக்குள் அந்தக் கஷ்டம் வருகின்றது.

என்னென்ன தொல்லை வருகிறதோ அவர்கள் படுகிற வேதனை எல்லாம் உனக்குள் மனக்கலக்கம் இதெல்லாம் எப்படி வருகின்றது? என்று காட்டுகிறார்.

நீ எண்ணிப்பார்க்கும் பொழுது உனக்குள் எப்படி அந்தத் தீமைகள் வருகிறது?” இந்த உடலுக்குள் இந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? என்று இதையும் காட்டுகின்றார்.

சாதாரணமாக, மனிதர் நல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் கேட்டுக்கொண்டிருந்த உடனே,
கேட்டுக்கொண்டிருந்த உணர்வுகள்
நல்லவர் உடலிலே எப்படிச் சேருகின்றது?

இதை அறிந்து கொள்வதற்கு நீ போகிறாய். அவருடைய துயரங்கள் எல்லாம் உனக்குள் வந்த உடனே எந்த வேதனையாக மாறுகிறது என்று தெளிவாகக் காட்டினார் குருநாதர்.