ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2015

குருவுடன் எப்பொழுதும் நாம் இணைந்தே வாழவேண்டும் - ஞானகுரு

இன்றைய மனிதர்கள் மனிதனின் உணர்வின் இயக்கத்துடன் தான் வாழுகின்றார்கள். இருந்தாலும், மிருகத்திலிருந்து மனிதனாக வந்தோம் என்பதை மறந்துவிட்டார்கள்.

ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒரு குணம் உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒரு விஷத்தன்மை உண்டு. இருந்தாலும், ஒன்றிடமிருந்து ஒன்று தப்பிக்க விஷத்தைப் பாய்ச்சி விழுங்குகின்றது பாம்பினங்கள்.

அதே சமயத்தில், பாம்பினங்களையே (தன் இனத்தையே) விழுங்கி வாழும் தன்மையும் உண்டு. மற்ற இனங்களை விழுங்குவது என்று அதற்கொரு குணம் உண்டு.

அதாவது, நாம் மனிதனாக இருக்கின்றோம். இனம் என்ற நிலைகளில் பிரிக்கப்பட்டு மற்றொரு இனத்தைத் தாக்கிக் கொன்று ரசிக்கின்றோம்.

விஷத்தை உட்கொண்டால் எப்படி வேதனைப்படுகின்றோமோ, இதைப் போன்று
ஒருவன் துன்பப்பட்டால், துயரப்பட்டால்,
அந்த உணர்வினை நாம் உற்றுப் பார்த்தால்,
அவன் வேதனைப்படுவதை ரசித்தால்,
அவன் உடலிலிருந்து வரும்
வேதனையை உருவாக்கும் உணர்வுகளை நாம் சுவாசித்து
நம் இரத்தங்களிலே கலந்து உடலிலுள்ள அணுக்களில்
வேதனைப்படும் உணர்ச்சிகள் அதிகமாகி
அதையே ரசித்து உணவாக உட்கொள்ளும்.
இதுதான் இன்றைய மனிதர்களுக்குள் இயங்கும் உணர்வின் நிலைகள்.

இந்த வாழ்க்கையில் பித்தரைப் போன்றுதான் இருந்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

இந்த உலகமே பித்து நிலையில் இருக்கிறதென்று உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளவர்களுக்கு குருநாதரைப் பார்த்தால் பித்தராகத் தான் தெரியும்.

ஆனால், இந்த உலக மக்கள் பித்துப் பிடித்து பித்தர்களாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கிறேன் என்ற உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் உடலில் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார்.

ஆகையினால், மற்றவர்கள் யார் தவறு செய்கிறார்கள்?
எப்படிச் செய்கிறார்கள்? என்று சிந்திப்பதில்லை.
அவர் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தியான வழியில் இதுவரை தியானம் செய்து வந்தாலும் நாம் தியானத்தில் இருந்தாலும் நம் குழு வழியில் ஆயுள் மெம்பராகச் சேரவேண்டும்.

அதாவது, குரு காட்டிய வழியை நாம் பின்பற்றி குருவுடன் எப்பொழுதும் நாம் இணைந்தே வாழவேண்டும்.

வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகள் உடலுக்குள் சென்று நமக்குள் தீமைகள் செய்யாது தடுத்து நிறுத்துவதுதான் முறை என்று ஆயுள் கால மெம்பர்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஏனென்றால், குருநாதருடன் நான் ஆயுள் கால மெம்பராகத்தான் இருக்கின்றேன்.

அவர் எதைப் பெற்றாரோ அதன் வழியில் கடைப்பிடித்து அவருடன் இணைந்து அவர் எனக்கு எவ்வாறு போதித்தாரோ, எனக்கு எவ்வாறு உணரச் செய்தாரோ, அதன் வழிதான் கடைப்பிடித்து வருகின்றேன்.

ஆகவே, நான் குருவுடன் ஆயுள் கால மெம்பராக இருக்கின்றேன். உங்களையும் என்னைப் போல அவருடன் இணைய ஆயுள் கால மெம்பராக இணையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

குரு காட்டிய அருள் வழியை உங்களிடம் உபதேசிப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இதைக் கடமையாகக் கடைப்பிடித்துப் பழகுதல் வேண்டும்.