ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2015

தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்ற அனுபவசாலிகளாக (மெய்ஞானிகளாக) நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும்

தொழில் நுட்ப ரீதியாகக் கற்றுக் கொண்டு எஞ்சினியர்கள் மிஷினுடைய உறுப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.

மிஷினை உருவாக்குவது விஞ்ஞானியாக இருந்தாலும் மிஷின் ரிப்பேரானால்,
அது எப்படி என்ற நிலைகளைப் பார்ப்பதும்
அதைப் பொருத்துவதும்
அதை இயக்குவது எஞ்சினியர்களும், ஃபிட்டர்களும்தான்.

இதைப் போல மெய்ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை உலகிலே இருக்கக்கூடிய துன்பத்தின் நிலைகளை அறிந்து  அதை நமக்குள் வளராதபடி நம் உடலான இந்த உறுப்புகளை மீண்டும் சீராக இயக்கச் செய்வது எப்படி?

விஞ்ஞான அறிவால் விஞ்ஞானி கண்டு கொண்ட உணர்வை எஞ்சினியர்கள் கற்றுக் கொண்டு அதற்குத் தகுந்த பாகங்களை அமைத்தால் சரியாக இருக்கும் என்று அமைக்கின்றார்கள்.

ஆனால், அதில் வரக்கூடிய நுண்ணிய அலைகளை
விஞ்ஞானிகள் கண்டு கொண்டது
சரியான நிலைகளில் வரவில்லை என்றால்
எஞ்சினியர்கள் சீர்படுத்துகின்றார்கள்.
இயந்திரத்தை ஒழுங்காக ஓட்டுகின்றார்கள்.

இதைப் போலத்தான், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மனித உறுப்புகள் சீராக இயங்கவில்லை என்றால் எவ்வாறு அதை இயக்க வேண்டும் என்று இப்படி எம்மை அந்த எஞ்ஜினியரின் நிலைகளுக்கு அனுபவம் கொடுத்துப் பக்குவப்படுத்தினார்.

 உடல் உறுப்புகளின் இயக்கங்களை எப்படி மாற்றுவது? அதன் உணர்வின் ஆற்றல்களை எப்படிச் சீராக்குவது என்ற நிலைகளைத்தான் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உணர்த்தினார்.

இதெல்லாம் உடலில் வரக்கூடிய உணர்வின் நிலையாகத்தான் யாம் கண்டுணர முடிந்தது. இதை நான் ஏன் சொல்கின்றேன்?

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லதையே எண்ணுகின்றீர்கள், நல்லதையே செய்கிறீர்கள். ஆனால், சந்தர்ப்ப பேதத்தால் வேதனை என்ற நிலைகளை ஒரு சமயம் நுகர்ந்தாலும் என்ன ஆகிறது?

பாலில் பாதாமைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாலில் உள்ள பாதாமின் சக்தி இழந்துவிடுகின்றது. பாலின் தரத்தையும் இழக்கச் செய்கின்றது.

இதைப் போலத் தான் உயர்ந்தவர்களாக இருக்கும் நாம் அனைவரும் சந்தர்ப்பத்தால் வந்த நமக்குள் அறியாது புகுந்த  நஞ்சின் தன்மையால் அந்த நஞ்சே வளரும் தன்மையாக அது வளர்ந்துவிடுன்றது.

அதிலிருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான் என்னை மீட்டிடச் செய்த வழி காட்டிய குரு அருளின் தன்மையை உணர்ந்த பக்குவத்தின் நிலைகள் கொண்டு
இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள்
மீண்டும் மீண்டும் பதியச் செய்கின்றோம்.

ஆக, இப்படிப் பதியச் செய்யப்படும் பொழுது அனுபவ ரீதியில் நீங்கள் பெற்றால்தான் மற்றவைகளைச் சீராக்க முடியும்.

ஏனென்றால், நுட்பங்களைக் (TECHNOLOGY) கற்றுக் கொண்ட எஞ்சினியராக இருந்தாலும் அனுபவரீதியில் தெரிந்தால்தான் சரி செய்ய முடியும்.