ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2015

இன்று உலகம் முழுவதும் ஒருவருக்கொருவர் அழிக்கும் உணர்வுகள் ஏன் வளர்கின்றது?

அரசர்கள் வகுத்துக் கொடுத்த நிலைகள் தான் மதங்கள். அதை மனிதர்கள் உடலில் விளையச் செய்து, அதன் வழிகளில் அரசர்கள் தனக்குப் பாதுகாப்பாகவும், தான் வகுத்துக்கொடுத்த நல்ல ஒழுக்கங்களை மக்கள் கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினர்.

மக்கள் அவர் கொடுத்த நிலைகளைக் கடைப்பிடிக்காது தவறு செய்தால் ஆண்டவன் பெயரால் தண்டனை என்ற நிலைகளில் தண்டனைகளைக் கொடுக்கின்றார்கள்.

ஆண்டவனின் கட்டளைப்படி இது தண்டனை என்று எல்லா மதங்களிலும் இதுதான் காட்டப்படுகின்றது.

இந்த வழிகளில் அரசர்கள் வளர்ந்தாலும், ஒவ்வொரு அரசருக்கும் அக்காலங்களில் இரண்டு மனைவி மூன்று மனைவி என்று இருக்கும். அதில் முதல் மனைவியின் மூத்த மகனுக்கே ஆட்சி புரியும் அரச உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றி உள்ளார்கள்.

அந்தச் சட்டப்படி செயல்பட்டாலும் மற்ற மனைவிகளும் தன் மகன் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்று அரசனை அணுகும் பொழுது
மற்ற மனைவிகளின் மகன்கள் மேல் குற்றங்களைச் சுமத்துவதும்,
அவர்கள் மேல் தவறுகளை ஊட்டுவதும்
ஆகிய இந்த நிலை உருவாகின்றது.

இதைப்போல அரச நியதிகளில் அவர்கள் வகுத்த சட்டம் அந்த அரசனுக்குப்பின் மாறுபடுகின்றது.

அரசனின் மக்களுக்குள் பகைமை உருவாகி, அதே கடவுளின் தன்மையை அந்த மதத்தின் ஓர் பிரிவாக மாற்றி அந்த அரசனையே எதிர்க்கும் நிலை உருவாகின்றது.

அந்த அரசன் மூத்த மகனுக்கு முடிசூட முடியாத நிலைகளில் போர்முறைகளை வகுத்து பகைமை உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஒரே மதமாக இருந்தாலும் தன்னுடைய மக்களின் நிலைகளில் இப்படித்தான் பிரிவுகள் உருவாகின்றது. ஆக, மதங்களுக்குள் இனங்கள் பிரிக்கப்பட்டு விடுகின்றது.

இதனால், இனப்போர் என்ற நிலைகளும் தனக்குக் கடவுள் ஒன்றிருந்தாலும் தன் மக்களின் நிலைகள் வரும்பொழுது இனங்களாகப் பிரிக்கப்பட்டு இனப்போர் என்ற நிலைகளில் மாறுகின்றது.

இருப்பினும், அரசனால் உருவாக்கப்பட்ட இந்த நியதிகள் அந்த அரசன் இருக்கும் வரையிலும்தான் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் கடவுளாக இருக்கின்றது,

பின்பு காலப்போக்கில் அது மறைந்து பகைமை உருவாகி மக்கள் மத்தியில பகைமை உணர்வுகளைத் தோன்றச் செய்கின்றது. அவ்வாறு வளர்ந்த அந்த உணர்வுகள் ஒருவருக்கொருவர் அழிக்கும் உணர்வுகளாக வளர்கின்றது.

ஆனால், இவர்கள் வகுத்துக் கொண்ட இந்தக் கடவுள்
அவர்களையும் காப்பதில்லை.
இந்த உலகத்தையும் காப்பதில்லை.

ஆக, அவர்கள் எந்தெந்த எண்ணத்தை எண்ணி சட்டரீதியாக உருவாக்குகின்றார்களோ, அவை அனைத்தையும் அவர்கள் உயிர் பதிவு செய்கின்றது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் பொழுது பதிந்ததை ஆண்டு கொண்டிருக்கின்றது அவர்கள் உயிர். எந்த எண்ணங்களின் உணர்வின் தன்மை அணுவாக உருப்பெறுகின்றதோ, அந்த உணர்வின் ஆற்றல் பெருகப் பெருக அவருக்குள் அந்த வலுவே பெருகுகின்றது,

அவர்கள் தன்னைப் பாதுகாக்க சட்டத்தை இயக்கி மற்றவர்களுக்குத் தண்டனை கொடுப்பதும், தண்டனையில் அவர்கள் மரணமடையும் பொழுது
யார் தண்டனை கொடுத்தார்களோ
அவர் மேல் இந்த உணர்வைச் செலுத்தி
இந்த ஆன்மா அவர் உடலுக்குள் செல்லுகின்றது.

அவ்வாறு அந்த உடலுக்குள் சென்று அந்த உடலுக்குத் தண்டனை கொடுக்கின்றது.

இந்த ஆன்மா உடலைவிட்டுச் சென்றபின் அரச வம்சத்தில் யார் இதைச் செய்தார்களோ அவர் உடலுக்குள் சென்று உள் நின்று செயல்படுத்துகின்றது.