ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2015

அவனவன் செய்யும் செயலே சரி – இதைத்தான் “கலி” என்பது

அன்று அரச காலங்களில் ஒரு மனிதனுக்கு ஒரு தத்துவம் கிடைத்துவிட்டால், அந்த நாட்டுக்குள் வந்துவிட்டால் அது அந்த அரசனுக்கே உரிமையானது.

அவரை வரவேற்று, அவருக்கு வேண்டியதைக் கொடுத்து செய்தியை வாங்கிக் கொள்கின்றார்கள். அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கின்றார்கள்.

அந்த சரக்கு அனைத்தையும் அரசனுக்குத்தான் சொந்தமாக்குகின்றார்கள். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை ன்றால் மரணதண்டனைதான் கொடுக்கின்றார்கள்.

அதற்கு அஞ்சி தன்னிடம் உள்ளதை அரசனிடம் கொடுத்துவிடுகின்றார்கள்.

இப்படிச் செயல்படும்போது இந்த நிலையில் வரும் பண்டைய கால புலவர்களைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு அரச சபையிலும் இந்த புலவர்கள் உண்டு.

அந்தப் புலவர்கள் அனைவரும் அரசனைப் புகழ் பாடித்தான் வந்திருப்பார்கள். புகழ் பாடி பொருள் தேடுவார்கள்.

அந்தப் புகழ்பாடும் நிலைகளில் அரசருடைய மக்கள்களில் இரு பிரிவு ஆகிவிட்டால் இவர்கள் எதிர் கவி பாட ஆரம்பிப்பார்கள்.

எதிர் கவி என்ற நிலைகளில் மரணமடைந்த ஒரு ஆன்மாவின் உணர்வுகள் இங்கு வந்தபின் கவியில் அந்தப் புலமை பாடும்பொழுது இந்த அரசன் இப்படித்தான் போவான் என்று சொல்வதை இவர்கள் அறம் என்று சொல்லுவார்கள்.

ஆனால், இது எல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்து அந்த செயல்களைச் செய்கின்றது.

இதுமாதிரித்தான் மகரிஷிகள் காட்டிய உண்மையின் நிலைகள்
அரசன் கையில் சிக்கப்பட்டு
அவன் மதங்களாகப் பிரிக்கப்பட்டு
பேருண்மையின் நிலைகளை அறிய முடியாமல் போனது.

மகரிஷிகள் காட்டிய உண்மையின் நிலைகளை அறிய முடியாமல் போனதற்கு மூலமே அதுதான். இன்றும் ஒவ்வொரு மதமும் கடவுளைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றது.

நாம் இந்தப் பணிகளைச் செய்தால்
கடவுள் நமக்கு வேண்டியதைச் செய்வான் என்று
எங்கோ கடவுள் இருக்கின்றான் என்ற எண்ணம்தான் உள்ளது.

அரசர்கள் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டாலும், தர்மம், நியதி என்ற நிலைகளில் பதிவு செய்து கொள்கின்றார்கள்.

பதிவு செய்த உணர்வு கொண்டு அவர்கள் எண்ணி ஏங்கும்பொழுது வேதனை கலந்த உணர்வுகளையே இவர்கள் சுவாசிக்கின்றார்கள். ஒரு நல்ல பதார்த்தத்தை செய்து, அதில் விஷத்தைக் கலந்து உணவாக உட்கொண்டால் மயக்கமடையச் செய்யும்.

இதைப்போன்று, உயர்ந்த குணங்களையும் பிறருக்குப் பண்புடன் செயல்படும் நிலைகளையும் எண்ணி உலகில் இப்படித் தீமைகள் நடக்கின்றதே
என்ற வேதனை உணர்வுகளைச் சுவாசித்து
இவைகள் அணுக்களாக மாறி
இவர்கள் எண்ணிய நல்ல எண்ணம்
இவர்களையும் காப்பதில்லை அந்த நாட்டையும் காப்பதில்லை.

இத்தகைய நிலைகள்தான் காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்து பரவி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர். உலகில் அனைத்து நிலைகளிலும் அது வளர்ந்து வந்திருக்கின்றது.

இது வளர்ந்து வளர்ந்து, இன்று பழிதீர்க்கும் உணர்வுகள் தான் சாதாரண மனிதன் உடலிலும் உருவாகின்றது. அரசன் என்ற நிலைகள் வரும்பொழுது எதிரி என்ற நிலைகளில் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகள்தான் வருகின்றது.

அதைப்போன்று சாதாரண மனிதருடைய நிலைகளிலும் அந்த அரசனின் உணர்வுகளே வந்து மற்றவர்களை அடக்க வேண்டும் என்ற உணர்வுகளே வளர்ச்சி பெற்றுவிட்டது.

இதைத்தான் கலி என்று சொல்வது.

கலி என்றால் அவனவன் ஆட்சிபுரியும் நிலைகளில் அவனவன் செய்யும் செயலே சரி என்ற உணர்வுகளுக்குச் செல்லப்படும் பொழுது கலி உருவாக்குகின்றான் என்பது.

இதற்குக் காரணமே அரசர்களின் நிலைதான்.