ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2015

நான் சந்தித்த மூன்று இலட்சம் பேரும் நல்லதாக வேண்டும் என்று இமயமலையில் வைத்து எண்ணச் சொல்கிறார் குருநாதர்

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு முதலில் பதிரிநாத் போகச் சொன்னார். பின்பு கேதார்நாத் போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி.

அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு.., கிடு.., என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின், என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா, நைனா என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதை குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு.., கிடு.., என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இந்தக் குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி தாக்கவில்லை.

ஏனென்றால், இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது, அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே..,” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது?

அந்த அம்மா இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால், என் மூத்த பையன் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி எல்லாவற்றையும் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில், இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. பிள்ளைகளைப் பெத்துவிட்டு சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான் என்று திட்டுகிறார்கள்
இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன் என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

 ஆக, கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.

அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது தன் பையன், தன் பிள்ளை என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால், அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி அவர்களெல்லாம்  நலம் பெறவேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.