ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2015

நம் உடலில் இருக்கும் அணுக்கள் ஆகாரம் எப்படி எடுத்து வளர்கிறது?

நாம் வேலைக்கு அவசரமாகப் போகவேண்டும் என்று வீட்டிலே நினைப்போம்.

அந்த நேரத்தில் சந்தர்ப்ப பேதத்தால் மனைவிக்கு முடியாமல் இருக்கலாம். அப்பொழுது, இன்னும் எழுந்து ஒன்றும் செய்யவில்லை பார்.., என்று கோபத்தை எடுத்தால், அவர் உடலில் முடியாமையை அறிய முடியாது.

அப்பொழுது உடனே நமக்குக் கோபம் வரும். அப்பொழுது நாம் எதற்கு ஊட்டம் கொடுக்கின்றோம்?

அதாவது, நம் உடலில் கோபத்தை ஊட்டும் அணுக்கள் உள்ளது. அதற்கு ஆகாரம் தேவை. இந்த சந்தர்ப்பம் பார்த்து ஊடே புகுந்து கொள்ளும்.
நாம் சிந்திக்க முடியாத நிலைகளில்
அது சாப்பாடு எடுக்கின்றது.

புலியை 10 நாள் பட்டினி போட்டவுடன் என்ன செய்யும்? ஒரு ஆளைக் கண்டவுடன் தாவி அடிக்கும்.

பூமிக்குள் பதிந்திருக்கும் (மறைந்திருக்கும்) செடி கொடிகள் மழை பெய்தவுடன் கிடு கிடுவென விதைக்காமலேயே முளைக்கத் தொடங்கும். அதிலேயும் விஷ வித்துக்கள் கிடு கிடுவென முளைக்கும்.

நல்ல வித்துக்கள் போட்டால் சீக்கிரம் முளைக்கின்றதா? அதற்கு வேண்டிய பக்குவ நிலையும் சூழ்நிலையும் உருவாக்கினால்தான் அது விளைகின்றது.

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த மகரிஷிகளின் ஞான வித்துக்களை வளர்த்துப் பழக வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் சாத்தியமாகின்றது.

நாம் ரோட்டில் போகும்போது, பார்த்து நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகின்றது. அதற்குச் சாப்பாடு தேவை.

நம்மை அறியாமலேயே நுகர்ந்து அந்த வெறுப்பின் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்யும். இத்தகைய உணர்வுகளை நீங்கள் சுவாசித்தவுடனே, தொழில் செய்யப் போகும்பொழுது ஒருவனைப் பார்க்கப்படும் பொழுதே அவன் மேல் வெறுப்பு வரும்.

நமக்காக அவன் வேலை செய்யும் பொழுது, இந்த வெறுப்பின் உணர்வுகள் அவன் மேல் பாய்ந்து தவறாக வேலை செய்வான்.

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை நாம் கணக்கு எழுதப்படும்பொழுது என்ன செய்கிறது எனில், கணக்கைத் தவறவிட்டு விடுகின்றது. நாம் சீராக கணக்குப் பார்க்க முடியாது.

ஆகவே, நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே அதனுடைய உணர்வுக்காக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது வளர்கின்றது.

நம் நல்ல குணங்களை நமக்குள் தேடித் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல குணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியுதோ?

அப்பொழுது நமக்குள் எது நம்மை இயக்குகின்றது?

ரோட்டிலே போகும் பொழுது, ஒருவன்  பிறிதோருவரைக் கேலி பண்ணிப் பழகியிருப்பான். அவன் முகத்தை நாம் பார்க்கவில்லை, பேசவில்லை.

ஆனால், அந்த உணர்வுகள் அவன் உடலைச் சுற்றி அவன் ஆன்மாவில் இருக்கும். நாம் உற்றுப்பார்த்தால் நமக்குள் பதிவாகி நுகரச் செய்கின்றது.

அப்பொழுது இதை எது செய்கிறது? இந்த உணர்வின் அணுக்கள் உந்தப்படும்பொழுது, அதைக் கவர்ந்து நம்மை அறியாமலேயே சாப்பாடு எடுக்கின்றது.

உதாரணமாக, மாம்பழத்தில் இருந்து வாசனை வருகின்றது. நல்ல பழமாக இருந்தால் “ஆஹா” என்கின்றோம். அதிலே புளிப்பு கலந்தால் புளிப்பாக வருகிறது என்கின்றோம். எதிலே வருகின்றது? காற்றின் நிலைகளிலே வருகின்றது. அதனை உணர்ந்து நுகர்ந்தவுடனே, பழம் எது என்று பார்க்கின்றோம்.

ஒரு பூச்செடியில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தவுடன் நன்றாக உள்ளது. பச்சிலையில் இருந்துவரும் மணம் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வாந்தி வரும் போல் உள்ளது. நம் உடலில் உள்ள அணுக்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் வாந்தி வருகிற மாதிரி உள்ளது.

இதையெல்லாம் நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் கலந்தபின் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள்ளும் அந்தத் தீங்கு விளைகின்றது.
அந்த அணுக்கள் வளர ஆரம்பிக்கும்.
அப்பொழுது நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கும் நிலை வருகிறது.

கெட்ட அணுக்கள் எடுக்கும்போது அது வளர்கின்றது. அப்பொழுது நம்மை அறியாமலேயே மயக்கம் வரும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த உணர்வு தூண்டுகிறதென்றால், “ஈஸ்வரா” என்று அந்த நேரத்தில் உடனே நாம் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும். எங்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று  உடல் முழுவதும் சுழற்ற வேண்டும்.

பின், யார் இந்த மாதிரி நடந்தனரோ, அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தியும், சிந்திக்கும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படிச் செய்தால், அவன் செய்த செயலும் நாம் எண்ணிப் பார்த்து நுகர்ந்தது இரண்டும் உயிருக்குத்தான் வருகின்றது.

ஏனென்றால், உயிர் ஒரு நெருப்பு. நாம் நெருப்பை வைத்து ஒரு பாத்திரத்திலே என்ன சரக்கைப் போடுகிறோமோ அதை இரண்டறக் கலக்கச் செய்து ஒரு கலவையாகின்றது.

ஆக, துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை இவ்வாறு நமக்குள் இணைக்கும்பொழுது பிறிதொரு மனிதனுடைய உணர்வுகள் நமக்குள் இங்கே உருவாகாது.

இதைத்தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்பது.