ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2014

தியானத்தின் மூலம் எமனையும் அடக்கி ஆளக்கூடிய ஒளியை நமக்குள் உருவாக்கலாம்...!

நாம் கண்களால் மற்றவர்களின் செயலைப் பார்த்து
அந்த உணர்வை நாம் சுவாசித்து
உடலுக்குள் அது சத்தாகும் பொழுது சித்திரபுத்திரனாகின்றது.
நம் உடலுக்குள் நம் குழந்தையாக
நம்முடன் இயங்குகின்றது என்று பொருள்.

அந்த குணம் விளைந்து நம் உயிராத்மாவில் சேர்கின்றது. அது உயிராத்மாவில் சேர்ந்தபின் சித்திரபுத்திரனாகின்றது. உயிராத்மாவில் சேரும் கணக்கில் மறு உடல் அமைகின்றது.

இதைத்தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று காவியத்தில் கூறப்பட்டது.

எமன் என்பதும் பாசக் கயிறு என்பதும், எந்தெந்த குணத்தை நாம் எண்ணத்தால் எடுத்தோமோ அந்த எண்ணத்தால் நாம் சுவாசித்ததுதான்.

நாம் எதன் மேல் அடிக்கடி எண்ணுகின்றோமோ
அதுதான் பாசக் கயிறு.
அந்தப் பாசக் கயிறுதான் எமன்.

பல கோடி சரீரங்களில் வேதனை என்ற விஷத்தைத் தாங்கிக் கொண்டு தன்னைப் பாதுகாக்கக்கூடிய எண்ணத்தை எடுத்து அதையே எமனாக மாற்றி
தனக்கு நல்ல இடம் வேண்டுமென்று ஏங்கிய
அந்த உணர்வின் சத்து உயிராத்மாவில் சேர்ந்து
அந்த எண்ணம் எமனாக மாறி
நல்ல உணர்வைக் கொடுக்கின்றது.

ஆகவே, இந்த மனித உடலுக்குள் நாம் எமனையும் அடக்கி ஆளக்கூடிய ஒளியை நமக்குள் சிருஷ்டியாக்க வேண்டும்.

நாம் ஒளியாகும் பொழுது தீயதை மாய்த்துவிட்டு உருபெரும் சக்தியாக மாறவேண்டும். உங்கள் எண்ணத்தால் ஒளியின் உணர்வைச் சிருஷ்டியுங்கள்.

உங்கள் உடலை உருவாக்கிக் கொடுத்த அன்னை தந்தையின் உடலுக்குள் அனைத்தும் உண்டு என்று நம்புங்கள். தாய் தந்தையை மதியுங்கள்.

மதித்தபின், உயிரைக் கடவுளாகவும், உடலைக் கோவிலாகவும் உங்கள் உடலுக்குள் சிந்தனையைத் தூண்டச் செய்யும் ஆற்றல்மிக்க நற்குணங்களை நேசியுங்கள்.
அந்த நற்குணங்களின் தன்மை கொண்டு
மெய்ஞானியின் அருள் ஒளியை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

ஆக, இதன் வழி சென்றால் அகஸ்தியன் குடும்பமாக விண் சென்று ஒளியின் சரீரம் ஆனது போன்று, நாமும் குடும்பமாக அவர்களைப் பின்பற்றி அந்த சப்தரிஷி மண்டல எல்லையை அடையலாம்.