ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 3

அரச காலங்களில் செயல்பட்ட தவறான மந்திர நிலைகள்தான் இன்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளது
அரசர்கள் கற்பித்த உணர்வின் தன்மையின் ரகசியங்களை அரசர்களிடத்தில் சேனாதிபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களும் அறிந்திருந்தார்கள்.

இந்த ரகசியங்களைப் பின்பற்றி மக்களிடையே தங்களை சித்தர்களாகக் காண்பித்துக் கொண்டு, மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளை மந்திரங்களாக ஜெபித்து
தவறான வழிகளில்
தான் ஒரு பெரிய ஆண்டவன் என்ற நிலையில்
அன்று அரச காலங்களில் செயல்பட்டு வந்ததுதான்
இன்று வரையிலும் இந்த உலகில் தொடர்ந்து கொண்டுள்ளது.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் உடலைக் கோவிலாக எண்ணச் சொன்னார்கள். மனித உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத்தான் கோவிலாகக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

அன்று வாழ்ந்த ஆதிசங்கராச்சாரியார் நம் உடலில் மெய் ஒளியைப் பரப்பச் சொன்னார்கள்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்?

பிள்ளை வரத்திற்கு இந்தக் கோவில்; திருமண தடை நீங்க இந்தக் கோவில் என்று ஸ்தல புராணங்களை எழுதி வைத்து, சனி பிடித்தால் திருநள்ளாறு போ என்று திசை திருப்பி, ஊர் ஊராக மக்களைச் சுற்ற வைத்துவிட்டார்கள்.
உருவாக்கி இயக்கும் சக்தி நம் உயிரான ஈசன் தான் – எவரும் எதுவும் செய்ய முடியாது
நல்ல நேரம் வந்தால் கல்யாணத்தைப் பண்ண வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். எவரும் எதுவும் செய்ய முடியாது.

உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனிடத்தில் சுவாசிக்கும் உணர்வின் தன்மை விளைய வைத்து அதனை உங்களுக்குள் சேர்த்து, அந்த உணர்வின் தன்மை உயிராத்மாவாகச் சேர்த்துச் சென்றபின்,
அவனே நம்மை உருவாக்குகின்றான்.
அவனுக்குள் சேர்ந்த உணர்வின் தன்மைக்கொப்ப
அடுத்த உடலை உருவாக்கிவிடுவான்.
உயிரான ஈசனிடம்தான் நாம் வேண்ட வேண்டும்
எந்த நிமிடம் ஆனாலும் எந்தக் குறையைப் பார்த்தாலும் ஈஸ்வரா என்று அவனிடம் வேண்ட வேண்டும். ஈஸ்வரா என்ற சொல்லை எப்பொழுதும் மறக்கக் கூடாது.

ஈஸ்வரா என்பது நம்மை உருவாக்கிய உயிர். உருவாக்கத் தெரிந்தவன் உயிர். நாம் எண்ணியதை உருவாக்கினாலும், நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர்.

ஆகையினால், எத்தகையை நிலை வந்தாலும் அவர்களின் குறைய நீக்கிவிட்டு ஈஸ்வரா என்று வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மா, ஜீவஅணுக்கள் பெறவேண்டுமென்று இந்த உணர்வை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இது வளர்ந்தவுடன் நம் குறைகளை நீக்கும். 
உங்களுக்கு பன்மடங்கு சக்தி கொடுத்துள்ளேன் - ஞானகுரு
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எவ்வளவு சக்தி கொடுத்தாரோ, அதைக் காட்டிலும் பன்மடங்கு சக்தி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.

அந்தச் சக்தியின் துணை கொண்டு தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் எடுக்க வேண்டும்.

சாமி சொல்கிறார், நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும் என்று இதைக் கலந்துவிட்டால் இதைப் பெறமுடியாது.

ஆனால், குரு சொன்னதைச் செய்தால் நிச்சயம் பெறமுடியும்.