ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2013

முருகன் சிலையிலிருந்து வெளிவரும் மணத்தின் ஆற்றல்

அந்த போகமாமகரிஷி எதைக் காட்டினாரோ, அந்தச் சக்தி அந்தச் சிலைக்குள் உண்டு.

ஏனென்றால், இந்த நட்சத்திரங்களின் சக்தியும் நவபாஷாணத்தின் சக்தியும் அதற்குள் உண்டு. நவக்கோள் என்பது நமது உடல், நமது உடலுக்குள் எடுத்துக்கொண்ட எண்ணத்தின் உணர்வின் செயல் நட்சத்திரம்.

ஆக அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் தன்மைதான், அந்த நட்சத்திரத்தின் கதிரியக்கப் பொறியுடன், அணுவுக்குத் தக்கவாறுதான் இயக்கிக் காட்டும்.

ஆனால், இதைப்போல நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை, நமது உடலுக்குள் சென்ற பின் அணுவாகப் பிளந்து, அணுவின் துடிப்பாக உயிரின் நிலைகள் கொண்டு, அது இந்த உயிராத்மாவாகச் சேருகின்றது.

நம் வாழ்க்கையில் நம்மையறியாது, எதிர்பார்த்து ஒன்றை (நல்லதை) எண்ணுகின்றோம். அதே சமயம், அடுத்தவன் செய்யும் தவறை நாம் பார்க்கின்றோம்.

அந்தத் தவறிலிருந்து விலகிச் செல்ல,
அந்தத் தவறை உணர்ந்த பின் தான்,
நாம் விலகிச் செல்கின்றோம்.
ஆனால், இந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் பட்டு, அசுத்தமாகச் சேர்ந்து விடுகின்றது.

இந்த விஷத்தின் தன்மையை நீக்குவதற்குத் தான், அன்று போகர் முருகன் சிலையின் மேல் நீரை ஊற்றி, நாம் எந்த ஏக்கத்துடன் வந்தோமோ, அதிலிருந்து வரக்கூடிய தன்மையைச் சுவாசிக்கும்படிச் செய்தார்.

நமக்குள் அசுத்தப்படுத்தியிருக்கும், மற்றவர்கள் செய்த நிலையை, வாழ்க்கையில் நாம் அறியாது சேர்த்த, அந்த தீய சக்தியின் நிலைகளை, அங்கிருந்து வழிபடும் சுவாசத்தால் நின்று, அது மாற்றி நமக்கு நல்லதாக்கச் செய்கின்றது.

ஆக, இவ்வாறு இவ்வுணர்வுடன் பார்க்கப்படும் பொழுது, அதிலிருந்து வரக்கூடிய ஆவியின் தன்மைதான் தனக்குள் இருக்கக்கூடிய வியாதியை மாற்றி, அது நல்லதைச் செய்ய வைத்தது.

ஆகவே எந்த மெய் ஞானி எதைக்கொண்டு,
தன் உயிரை நேசிக்கச் செய்து
தன் உடலுக்குள் உள்ள அசுத்தத்தை நீக்க,
அவன் செய்து வைத்த அந்தச் சிலையை,
அதன் வழிகொண்டு நாம் யாரும் சுவாசிப்பதில்லை.

அத்தகைய சிலை அங்கிருந்தாலும், நம்முடைய துன்பத்தையும் துயரத்தையும் நம்முடைய ஆசையையும் எண்ணித்தான், அங்கு நாம் சுவாசிக்கின்றோம்.

ஆனால், அந்த மெய்யுணர்வான அலையை,
இன்று மற்ற நிலைகள் கொண்டு போற்றி
ஆடம்பர நிலைகள் கொண்டு
நம்மைத் திசை திருப்பிவிட்டார்கள்.

ஆக, பழனிமலையின் தன்மை அந்த போகமாமகரிஷி இந்த மனித உடலின் தன்மையையும், பிரபஞ்சத்தில் தோன்றிய நவக் கோள்களின் தன்மையையும், சூரியனினுடைய தன்மையையும், நமக்குக் காட்டி அங்கு தீபாராதணை காட்டும் பொழுது,
"தெரிந்து செயல்படும் தன்மை நாங்கள் பெறவேண்டும்,
அந்த மலரைப்போல மணம் பெறவேண்டும்"
என்ற எண்ணத்தை ஏங்கி,
அங்கு வைத்திருக்கக்கூடிய கனிவகைகளைப் பார்க்கும் பொழுது
"இந்தக் கனியைப்போல சுவையான சொல்லும் செயலும்
நாங்கள் பெறவேண்டும்" என்று ஏங்கி,
அந்த உணர்வின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது, அந்தச் சிலையிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மை, நமக்குள் நாம் சுவாசித்து, நமது உடலில் இருக்கக்கூடிய பிணிகளை மாற்றி, நாம் நல்ல உணர்வுகளைத் தோற்றுவிக்க அன்று செய்தான் மெய்ஞானி.
அவர்கள் வழி சென்றால்,
நாம் விண் செல்வது சுலபம். எமது அருளாசிகள்.