ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2013

கார்த்திகேயா

மனிதனின் ஆறாவது அறிவின் சக்தியை “கார்த்திகேயா” என்றார் போகர். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஆறு பேரையும் மனிதன் ஆறாவது சக்தி என்றார்.

ஆறு குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து,
ஆறுமுகம் என்று வைத்து
அதிலே தோன்றினான் என்பது காவியம்.
சூரியனிலிருந்து வரக்கூடிய ச, ர, ஹ, ண, ப, வா – ஆறு வண்ணம்,
ஏழாவது ஒளி, மனிதனின் உணர்வு.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து, தன் நிலையைப் பெறுகின்றதோ, அதைப் போல பிரபஞ்சத்தில் அனைத்து உணர்வுகளையும் தனக்குள் அடக்கி, இந்த குகைக்குள் (உடலுக்குள்) நின்று செயல்படும் ஆற்றல்மிக்க, வன்மை மிக்க அந்த ஆற்றலைக் காட்டினார் போகர்.

ஆறு உணர்வின் தன்மை கொண்டு, புலனறிவுகள் கண், காது மூக்கு, வாய் உடம்பு ஆகியவைகளின் அறிவான ஞானத்தை, ஒவ்வொரு நிலைகள் கொண்டு, ஒவ்வொரு திசைகளிலும் அறிந்துணர்ந்தாலும்,
அனைத்தும் ஒருங்கிணைந்து
தன் உடலுக்குள் சென்ற விஷத்தின் தன்மையை மாய்க்கும்  
அந்த உணர்வின் நாதச் சுடரான நிலைதான்
ஆறாவது அறிவு.  ஆக, அந்த ஆற்றல்மிக்க சக்திதான் கார்த்திகேயா.

நஞ்சின் தன்மையை நீக்கி, அதைத் தனக்கு வேண்டும் நிலையாக ஆக்கிக் கொள்பவனாக, ஆக்கிக் கொள்ளும் ஆறாவது அறிவின் தன்மைதான் அது.

ச, ர, ஹ, ண, ப, வா,
குகா, இந்த உடலான குகைக்குள் நின்று,
கந்தா, வருவது எதுவாக இருந்தாலும்,
கடம்பா, உருவாக்கி,
கார்த்திகேயா, எனக்குள் அறியும் அறிவாக
ஒளியாகத் தெரிந்து செயல்படச் செய்கின்றாய்.
அதாவது, ஒளியின் சுடராக எனக்குள் நின்று உயிராக இயங்குகின்றாய் என்று, அதை நேசிக்கும் தன்மையைக் காட்டினார் போகர்.

இந்தப் பூமியான புவனத்தை, புவனத்தின் சக்தியைத் தனக்குள் வளர்த்தார். இதுதான் போகரின் நிலை. இன்று நாம் போகர் புவனேஸ்வரியை வணங்கிவிட்டு வந்தார். புவனேஸ்வரி, அந்தச் சக்தியை அவருக்குக் கொடுத்தது என்று நாம் எண்ணுகின்றோம்.

ஆகவே, போகர் கண்டுணர்ந்த அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாமும் கண்டுணர வேண்டும். அவர் மெய்யை உணர்த்தியுள்ளார். ஆனால், இன்று நாம் இதையெல்லாம் அறியாதபடி, சூடத்தையும் பஞ்சாமிர்தத்தையும் அங்கே கொடுத்தால் “முருகன் செய்வார்” என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

“பஞ்சாபிஷேகம்” என்றால், விண்ணிலிருந்து வரும் அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து, நமக்குள் சேர்க்க வேண்டும்.

அப்படிச் சேர்த்துக் கொண்டால், அது ஒளியின் சுடராக நமக்குள் மாறி, உயிருடன் ஒன்றிடும் நிலை பெறமுடியும். அதன் வழி கொண்டு, அந்த மெய்ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாமும் எளிதில் அடையலாம். எமது அருளாசிகள்.