ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2022

யாம் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் “விஷ்ணு தனுசாக உங்களுக்குள் பாயும்”

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகமாகச் சக்திகள் நம் பூமிக்குள் வரக்கூடிய நேரம் அதிகாலை தான். நம் பூமி கவரக்கூடிய அந்த நேரத்தில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது...? என்று அந்த உணர்வுகளை உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுகள் ஒவ்வொன்றிலும் இது கலக்கின்றது.
2.உங்களிடம் இருக்கும் எல்லாக் குணங்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை இணைக்கும் ஒரு வித்தாக உருவாக்குகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் புது விதமாகப் பல வீரிய வித்துக்களை உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதற்குப் பிற்பாடு அதை விளைய வைப்பதற்கு எந்தெந்த நேரத்தில் நீரைப் பாய்ச்ச வேண்டும்...? உரங்களை எப்போது போட வேண்டும்...? அதற்கு வேண்டிய பக்குவங்களை எப்படிச் செய்ய வேண்டும்...? சொல்லிக் கொடுக்கின்றனர்.

அதைப் போன்று நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்திற்கு அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்து வந்தால் அந்தப் பேரருளை நிச்சயம் உருவாக்க முடியும்... பேரொளியாக நீங்கள் மாற முடியும்.

1.துருவ நட்சத்திரம் எப்படி அழியா ஒளிச் சரீரம் பெற்றிருக்கின்றதோ...
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எந்த விஷத்தையும் ஒளியாக அது எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ...
3.அந்த உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒளியான வித்துக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சில தீமைகளை நீங்களே விலக்கக்கூடிய நிலையும்... அதைச் சமப்படுத்தக்கூடிய நிலையும்... உணர்வுகளை ஒளியாக மாற்றக்கூடிய சக்தியும் எளிதில் பெற முடியும்.

அதற்குத் தான் அதிகாலை “துருவ நேரத்தில்...” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அருள் ஞான வித்தாக உங்களுக்குள் ஆழமாக ஊன்றி அதைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

தனுசுகோடி...! என்ற நிலைகளில் நான் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் தனுசாகப் பாய்ந்து உங்களுக்குள் அது முழுமை பெறக்கூடியதாக வளர்ச்சி பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றது
2.அந்த ஒளி அலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒன்றென இணைந்து பேரருளாக... பேரொளியாக... உருவாகும் அருள் சக்தி உங்களுக்குள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றது... பதிவாக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளும் அந்தத் தகுதியைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.