ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2022

செயற்கைக்கோளை விண் செலுத்துவது போல் முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்

நம்முடைய முன்னோர்களையும் குலதெய்வங்களையும் வணங்கி வருகின்றோம். அவர்கள் குல வழியில் தான் நாம் வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் இறந்த பின் அந்த ஆன்மாக்கள் நம் குடும்பத்தில் வந்து “அருளாடத் தொடங்குகின்றது...”
1.அவர்கள் உடலில் வந்த நோயும் அவர்கள் அடைந்த கஷ்டமும் நம் குடும்பத்திற்குள்ளும் பாய்கின்றது.... அதனால் நாமும் துன்பப்படுகின்றோம்.
2.இப்படித் தான் நடக்கின்றதே தவிர அது நம்மைத் தெளிவாக்காது... நமக்குத் தெளிவான நிலைகளையும் அது உருவாக்காது.

இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்...?

அருள் ஒளி பெற்று ஒளியின் சரீரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் நாம் நுகர்ந்து பழக வேண்டும். அதை நமக்குள் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும். அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அவர்கள் உடலில் பெற்ற நஞ்சின் உணர்வுகள் அங்கே கரைகிறது.
2.குலதெய்வங்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைகிறது
3.அருள் ஒளி பெற்றுப் பிறவில்லா நிலை அடைகிறது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் துணை கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் கோள்களையும் படமாக்குகின்றார்கள். அதை எலக்ட்ரானிக்காக மாற்றி ஒலி நாடாக்களில் பதிவாக்குகின்றார்கள்.

ஒலி நாடாக்களில் பதிவானதை ஒரு இராக்கெட்டின் முகப்பில் வைத்து செயற்கைக் கோளை இணைத்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.
1.அந்த முகப்பில் இருக்கும் நாடாவில்... எதனின் உணர்வின் இயக்கமாக எலக்ட்ரானிக்காக மாற்றினானோ
2.பதிவான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைந்து அந்தக் கோளின் சமீபத்திற்கே கொண்டு சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அதன் உணர்வுகளை நுகர்கின்றது... ஒளி அலைகளைப் பரப்புகின்றது. அதை வைத்து அதில் இருக்கக்கூடிய நிலைகளைக் கவர்ந்து புவியில் இருந்து அந்த உண்மைகளை விஞ்ஞானி அறிகின்றான்.

இதைப் போன்று தான்
1.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து
2.அதை நம் குலதெய்வங்கள் முன்னோர்களின் உயிரான்மா முகப்புகளில் இணைத்து
3.உந்தித் தள்ளினோம் என்றால் நேரடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

அதிகாலையில் இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் (மீண்டும் இன்னொரு உடல் பெறும் உணர்வுகள்) எல்லாம் கரைகிறது. கரைந்ததை ஆறு மணிக்கெல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகின்றது.

அந்த நஞ்சுகளை எல்லாம் ஓசான் திரைக்கு அப்பால் தள்ளி மாற்றி அமைத்து விடுகின்றது. அதே சமயத்தில் ஒளி உணர்வு பெற்ற அந்த உயிரான்மாக்கள் பூமியைக் கடந்து சென்று விடுகிறது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வுகள் புவியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலுகின்றது. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு வாழும் நிலை பெறுகின்றது.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்... சூரியனே ஒரு சமயம் அழிந்தாலும் அல்லது செயலிழந்தாலும்... இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் கூட...
1.இதிலே விளைந்த உயிரணுக்கள் ஒளியின் சரீரம் பெற்ற பின்
2.ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் பயணம் செய்யத் தொடங்கிவிடும்.
3.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாகவே வாழும்.

இங்கு மட்டுமல்ல... ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரணு தோன்றி மனிதரான பின் இப்படி ஒளி நிலை பெறுவது தான் கடைசி நிலை. ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளி நிலை பெறுவது.

இதைத்தான் ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்...! என்று ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு... ஒளி எழு. மனிதனுடைய அறிவு ஆறு... அதை வைத்து உணர்வுகளை ஒளியாக்கும் போது ஏழு.

சூரியனிலிருந்து வரக்கூடிய நிலையும்... மனித உடலில் உணர்வை ஒளியாக மாற்றிவிடும் நிலையும்... இந்த ஈரேழு லோகத்தையும் வெல்லக்கூடியவன் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறுவான் என்று காவியங்கள் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்...!