ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2022

தாயை மகிழச் செய்தால் பேரானந்த நிலையை நாம் பெற முடியும்

நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் வேதனையின் செயலாகவே உயிர் என்னைச் செயலாக்குகின்றது. வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது என் உயிரான ஈசன் உடலான சிவலோகத்தை உருவாக்குகின்றது.

சிவலோகத்தை உருவாக்கும் முன் இந்திரலோகமாக மாற்றுகின்றது அந்த உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய உணர்வை நாம் நுகர வேண்டும்...?
1.அன்னையின் அருள் பெற வேண்டும்
2.நாம் பார்ப்பவை நலம் பெற வேண்டும் நாம் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
3.என் செயல் அனைத்தும் அனைவரும் மகிழும் செயல் பெற வேண்டும்
4.அந்த அருள் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஒளி பெற வேண்டும்
5.அனைவரும் அருள் வாழ்க்கை பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்

இவை அனைத்தும் எவரால் உணர்ந்தோம்...?

தாய் தந்தை உயிரே கடவுள் ஆனது...!
1.நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்
2.நம்மைத் தெய்வமாகக் காத்ததும் அன்னை தான்
3.வாழ்க்கையில் நாம் நல்லவனாக வேண்டுமென்று நமக்கு உபதேசித்ததும் அன்னை தான்.

ஆகவே அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய சேவை என்ன...?

உதாரணமாக தீமை என்ற உணர்வை நாம் எண்ணினால் தீமை செய்யும் ஆன்மாவாக நம் ஆன்மா மாறிவிடுகின்றது.

அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் தீமையின் செயலைச் செயல்படுத்தும் போது அதைத் தாய் பார்க்கப்படும் பொழுது வேதனைப்படுகின்றது.

ஆகவே தீமை உருவாகாதபடி...
1.அன்னையின் அருளால் நல்ல அறிவின் ஒளியை நமக்குள் பெற்று
2.அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் “தீங்கு விளையாது”
3.அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வளர்த்து... அன்னையை மகிழச் செய்வதே அன்னைக்குச் செய்யும் சேவை.

அன்னையின் அருள் பெற வேண்டும் என்றால் தாயை மகிழச் செய்யும் தன்மை பெற வேண்டும்.

தாயை மகிழும் செயலாகச் செய்தால்
1.அன்னையின் ஆனந்தம் நமக்குள் பேரானந்த நிலையை ஊட்டும் நிலை பெறுகின்றது
2.ஆகவே வாழ்வில் உணரும் உணர்வை நல் ஒளியின் உணர்வாக நாம் பெற வேண்டும்.

அன்னை தந்தையின் அருளால் அருள் ஒளி பெற்று இந்த வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெற்றுப் பேரொளி என ஆவோம்.

மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று என்னை அறியாது வரும் இருளை நீக்கி
1.என்றும் பேரொளி பெறும் அருள் உணர்வை எனக்குள் பெறுவேன்
2.அருள் ஞானம் பெறுவேன் அருள் வாழ்க்கை வாழ்வேன்
3.குரு அருளால் அந்த அருள் ஞானத்தைப் பெறுவேன்... அகண்ட அண்டத்தையும் அறிவேன்
4.அருள் ஞானத்தை என்னுள் வளர்ப்பேன்.
5.பேரருள் பெறுவேன்... இருளை அகற்றிடும் நஞ்சை வென்றிடும் அருள் ஒளியைச் சேர்ப்பேன்...
6.அருள் வாழ்க்கை வாழ்வேன்... என்றும் ஏகாந்தம் என்ற நிலையைப் பெறுவேன்
7.அன்னையின் அருளால் பேரின்ப ஒளி என்ற உணர்வினை எனக்குள் வளர்ப்பேன்
8.அன்னை அருளால் அருள் ஒளி என்ற உணர்வினை எனக்குள் பெறுவேன்... அருளானந்தம் பெறுவேன்.