ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2022

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடியும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டனர்

விஞ்ஞான அறிவால் வந்த பேரழிவால் இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் சக்திகளை இழக்கும் தருணங்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் தாவர இனங்கள் அதனுடைய கருவுறும் தன்மையும் இழந்து விடுகின்றது இழந்துவிடும் செயல்களை விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் பரப்புகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பகுதியான இடங்களில்...
1.ஒரு தடவை பயிர் விளைந்ததோடு சரி... ஒரு வித்து வந்ததோடு சரி
2.அதில் விளைந்து வரும் வித்தினை மீண்டும் ஊன்றினால் அது மீண்டும் முளைக்காது... அது மலடாகிவிடும்.

நாம் குழந்தைகள் (குழந்தைப் பாக்கியம்) இல்லை என்று சொல்கின்றோம் அல்லவா. அந்த இனம் அழிந்து விடுவது போன்று தாவர இனங்களில் மலட்டுத்தன்மையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

சாதாரண தாவர இனங்களில் விளையும் அந்த சத்தினைக் கவர்ந்து கொண்டு விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களையும் உருவாக்குகின்றனர்.

முந்தைய ஆரம்பக் காலங்களில் மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுத் தன்னை வளர்த்துக் கொள்ளச் செய்தனர்.

பின் மந்திர தந்திரங்களை மனித உடலில் விளைய வைத்து மந்திரத்தைப் பதிவு செய்து அந்த ஆன்மா வெளிவந்த பின் அதைக் கைவல்யப்படுத்தி ஆவிகளின் தொடர் கொண்டு ஒருவரை முடக்குவது என்ற நிலைகளில் போர்கள் நடந்தது.

ஆவிகளின் தொடர் கொண்டு செயல்படும் பொழுது பல உண்மைகளும் அறிய முடிகின்றது. மண்ணுக்குள்ளும் மற்ற நிலைகளிலும் ஊடுருவி அதில் உள்ள உண்மைகளை அறிந்து பூமிக்குள் இருக்கும் தாவர இனங்களையும் நீர் நிலைகளையும் உலோகங்களையும் கண்டுணரும் சக்தி கிடைத்தது.

பின் ஆவியின் நிலையில் கொண்டு மனிதனுக்கு மனிதன் எவ்வாறு இருக்கின்றார்கள்..? என்ற நிலையினைக் கொண்டு வருகின்றனர்.

அதே ஆவியின் தன்மை கொண்டு உலகத்தை அடக்கிடும் நிலையாக ஒவ்வொரு அரசும் செயல்பட்டது.
1.அரசை ஆட்சி செய்ய ஆண்டவனை வணங்குவதும்
2.ஆண்டவனுக்கு விரோதிகள் என்று மற்றவர்களைக் கொல்வதும் என்று ஆவியின் தொடர் கொண்டே செயல்பட்டனர்.

இஸ்ரேல் நாட்டில் இருந்து இத்தகைய நிலைகள் பரவி உலகெங்கிலும் பரவியது. இந்தியாவிலும் இது போன்ற நிலைகள் செயல்பட்டது

இதற்குப் பின் தான் உலோகங்களைக் கண்டறிந்து உலோகத்தில் ஆயுதங்களைத் தயார் செய்து அதை கொண்டு செயல்படுத்தினார்கள்.

அந்த ஆயுதங்களை வைத்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொல்வதும் என்ற நிலையில் செயல்படுத்தினர். அதற்குப்பின் வெடிபொருளைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்து நாட்டையும் ஊரையும் தகர்க்கும் நிலை வந்தது.

இப்பொழுது...
1.அதைக் காட்டிலும் வீரியத்தன்மையாக அணுக்கதிர்கள் கொண்டு (அணு ஆயுதங்கள்)
2.கதிரியக்கத்தின் தன்மை கொண்டு நாட்டையே சீரழிக்கும் நிலையாக வந்தது.

லேசர் இயக்கம் என்று... மின்னலின் ஆற்றல் எவ்வாறு ஊடுருவி மற்றதைப் பிளக்கின்றதோ அதைப் போன்று
1.அணுக்கதிரியக்கங்கள் துணை கொண்டு லேசரை வைத்து பூமிக்குள் ஊடுருவச் செய்வதும்
2.மின்னல் தாக்கிய பின் கட்டடங்கள் எப்படி தகர்க்கின்றதோ அதைப் போல் பூமியைப் பிளந்து பூமிக்குள் இருப்பதைக் கண்டறிகின்றனர்.

வானில் வெகு தொலைவிலிருந்து கொண்டே தரையில் பூமிக்குள் என்ன எல்லாம் இருக்கிறது...? என்று கண்டறிகின்றனர் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஆனால் இவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் ஒரு நாட்டில் அங்கே விளையும் தானியங்களையும் தாவர இனங்களையும் விளையாதபடி செய்து விட்டால்
1.அந்த நாடு தனக்கு அடிமை ஆகிவிடும்.
2.மிருகங்களைப் போன்று நாம் ஆட்சி புரியலாம் என்ற நிலையில்
3.விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாடுகள் முன்னேறிச் சென்று விட்டது.

நாட்டுக்கு நாடு தன்னாட்டைக் காக்க மற்ற நாட்டை அழித்திடும் குரோத உணர்வுகள் அதிகரித்துத் தன் இனம் என்றோ... மனிதன் என்றோ அறியாதபடி... கொன்று குவிக்கும் உணர்வுகளே அதிகரித்து... மனிதனுக்குள் வெறித் தன்மையான உணர்வுகள் ஊட்டப்பட்டு...
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகள் பூமியில் அதிகமாகப் பரவி விட்டது.
2.வெறித்தன்மையாகவும் சிந்தனை இழந்து செயல்படும் தன்மைகளும் தான் உருவாகிவிட்டது
3.மனிதனுக்கு உணவு இல்லாத செய்யும் சில நிலைகளையும் உருவாக்கி விட்டனர்.

ஆப்பிரிக்காவில் காடு வளங்கள் அதிகமாக இருப்பினும் சில பயிரினங்களில் அதனுடைய இனம் பெருகாதபடி செய்துவிட்டனர். அதற்குப்பின் அவர்கள் உணவுக்காக அலையும் நிலை வந்துவிட்டது.

மண்ணுக்குக் கீழ் புல் பூண்டுகளில் இருக்கும் கிழங்கை எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் அதிகரித்து விட்டது அதுவும் கிடைக்காத பொழுது மடிந்து கொண்டும் உள்ளனர்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடிந்து கொண்டுள்ளனர் மழை நீர் பெய்தாலும் விஷத்தன்மைகளை அங்கே பாய்ச்சி விடுகின்றனர்.

மேகங்களில் விஷத்தன்மைகளைத் தூவப்படும் போது அந்த நாட்டில் மழையே இல்லாது போய் விடுகின்றது. இந்த விஷத் தன்மைகள் மேகமுடன் கலந்து உலகெங்கிலும் பரவி விட்டது. மனித இனத்தையே சீர்குலைக்கும் தன்மைகள் வந்து விட்டது.

1.நாகரீகம் என்ற பெயரில் அநாகரீக நிலைகள் தான் உலகெங்கிலும் வளர்ச்சி ஆகிக் கொண்டு வருகின்றது
2.மனிதனுக்கு மனிதன் கொன்று குவித்து ரசிக்கும் தன்மைதான் வளர்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா...?