ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2022

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.