ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2022

மகா பச்சிலையின் மணங்களை நுகரும் ஆற்றல் பெறுங்கள்

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

நம் உயிரே ஈசனாக இருந்து நாம் எண்ணியதை எல்லாம் அந்த உணர்வின் கருவாக “உயிரே மாற்றுகின்றது...!” அப்படிக் கருவின் தன்மை பெறச் செய்வதற்கு நமது உயிரே குருவாக இருக்கின்றது.

நம் குருநாதரின் அருள் சக்தியைப் பெற்று அவர் வழியில் அகஸ்தியரின் அரும் பெரும் சக்திகளை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உருவான அந்த உணர்வு கொண்டு அவன் வழியில் நாமும் சென்று ஆறாவது நிலையை ஏழாவது ஒளியாக மாற்றி அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடையும் சக்தியை நாம் பெறுவோம்.

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது
1.அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போன்று இருக்கும்
2.அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் போதெல்லாம் அவன் நகர்ந்த அந்த “மகா பச்சிலையின் மணங்கள்...” உங்களுக்குள் வரும்
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வலிமை மிக்க சக்தியாக நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக நீங்கள் நுகரும் தன்மை பெற்று
5.அந்த அணுவின் தன்மை கருவாக உருப்பெறும் சக்தியும் பெறுகின்றது.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்குக் காலை துருவ தியானத்தின் மூலம் அருள் சக்திகளை நீங்கள் தினசரி செருகேற்ற வேண்டும்.

நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய எம்முடைய உபதேசத்தின் பல கலவைகளும் சேர்த்து அதுவும் அணுக்கருக்களாக உங்களில் உருவாகும். தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருங்கிணைந்து அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பெருகும்.

அகஸ்தியன் உடலிலிருந்து உருவாகி வெளிப்பட்ட அருள் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது. அதை நீங்கள் கவர்வதற்காக இந்நேரம் வரையிலும்
1.அதைப் பதிவு செய்தது
2.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது
3.உங்களுக்குள் உள் நின்று அது இயக்கத் தொடங்குகின்றது

அதை நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது அந்த எண்ணம் உங்கள் கண்ணிற்கே வருகின்றது. யாம் சொல்லும் சொல்லின் நிலைகளைக் கண் உங்களுக்குள் பதிவாக்கி அந்த உணர்வை நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

அது தான் ஹரி...! அறியக்கூடிய அறிவாக... சூரியனால் இயக்கப்படுவது ஹரி கிருஷ்ணா “கிருஷ்...“ என்றால் பதிவாக்குவது அப்படிப் பதிவான பின்...
1.இந்த உணர்வு எண்ணம் ஆகும்போது ஹரி ராமா.
2.அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணிற்குக் கொண்டு வந்தால் ஹரி கிருஷ்ணா

அதாவது...
1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தின் மூலம் உள்ளுக்குள் பதிவாக்கி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்த பதிவின் நிலையை நுகர்ந்து
3.நமக்குள் அணுவின் கருவாக உருவாக்கும் திறனைப் பெறுகின்றோம்.

கண் வழி நுகரும் சக்தி பெறுகின்றீர்கள். நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்த நாளங்களில் கருத் தன்மை அடையும் கருக்களாக உருவாக்கப்படுகின்றது

1.அகஸ்திய மாமகரிஷி பெற்ற நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சக்தியும்
2.நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மை விளைந்து அவனின்று வெளிப்பட்ட மூச்சின் உணர்வலைகளும்
3..உங்கள் உடலுக்குள் ஊடுருவும் போது உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில்...
அதை நுகரும் சக்தியும்
அறியும் சக்தியும்
வளர்க்கும் சக்தியும்
வளர்ந்திடும் சக்தியும் பெருகும்...!

1.அந்த அரும்பெரும் சக்தி உங்கள் அருகில் சுழன்று
2.நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்தின் வழி கூடி உடலுக்குள் செல்லும் நிலை இப்போது உருவாகின்றது.

ஆகவே அகஸ்தியமாமகரிஷி வெளிப்படுத்திய மணத்தின் தன்மைகளை நுகர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.