ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2022

காலமறிந்து… கருத்தறிந்து… ஞானத்துடன்… செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகிறது

சாஸ்திரங்களில் சித்திரை மாதத்தைப் பற்றிய உள் மூலக்கூறைத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் அந்தச் சித்திரை மாதத்தை எப்படி நினைக்கின்றோம்…!

இந்த வருடம் சித்திரை மாதம் பிறந்திருக்கிறது…
1.இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அவன் ஓடுகாலியாக வருவான்..
2.குழந்தைகள் அந்த மாதத்தில் பிறக்கக்கூடாது… குடும்பத்திற்கு அது ஆகாது.
3.சித்திரை மாதத்தில் ஏதாவது செய்தால் எல்லாம் சிதறிப் போகும்… ஆகையினால் நல்ல காரியம் செய்யாதே…! என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சித்திரை மாதத்தில் நாம் உயர்ந்த ஞானத்தைப் பெறும் நிலையாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் போது இந்தச் சித்திரையை நீக்குகின்றோம். நமக்குள் நல்லதை மறைத்திடும் அந்த்த் தீமைகளை அகற்றுகின்றோம்.

ஆகவே “உத்தராயணம்…” என்ற மனிதனின் ஆறாவது அறிவைக் கொண்டு மீண்டும் அது தெளிவு கொண்ட பின் இந்தப் புது வருடம் வரப்படும் போது… ஒவ்வொன்றையும் தெளிந்து தீமைகளை அப்புறப்படுத்தும் நிலை வருகின்றது.
1.அதனால் தான் மாதத்தை இணைத்து… காலத்தையும் இணைத்து…
2.மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் (தத்துவத்தில்) அகவலில் பாடுகின்றனர்.

மூலாதாரம் என்றால் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிர்…!

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அது உயிரிலே மூளும் போது மூண்டெழும் கனலை… எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ அந்த உணர்வின் தன்மை உயிரிலே மோதும் தன்மை கொண்டு அதனின் இயக்கமாக நம்மை இயக்குகிறது.

அதனால் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிய வேண்டும்” என்று பாடலைப் பாடுகின்றோம்.
1.பாடலைப் படித்தோம்… கருத்தை விட்டுவிட்டோம்.
2.மூலத்தையே விட்டுவிட்டோம்… அந்த உண்மைகளை உணரவில்லை.

காரணம்… நாம் எந்த நிலையைக் காலத்தால் அறிகின்றோமோ… அது நம் மூலமான உயிரில் இது ஆதாரமாக இணைக்கப்பட்டு அது உணர்வின் தன்மை கனலாக எழும்புகிறது.
1.அதைக் காலத்தால் அறிந்து ஆறாவது அறிவால் ஞானம் கொண்டு அறிந்துணர்ந்து
2.மகரிஷிகளின் அருள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடலுக்குள் இணைத்து நாம் செயல்பட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தவறில்லை. சாங்கிய சாஸ்திரங்களில் நாம் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாதபடி துயர்களையே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

இதைத் தான்…
1.ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எந்தெந்த நிலைகள் வளர்கிறது என்ற நிலையில்
2.பங்குனி உத்திரம்… திசை மாறும் நிலைகள் கொண்டு
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் நிலையாக நாம் திசை திரும்ப வேண்டும்…
4.ஞானிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்று காட்டுகின்றார்கள்… உத்தராயணம்…!

பங்குனி உத்திரம் முருகனுக்குகந்த நாள் என்று தேரோட்டம்… காவடி ஆட்டம்… என்று ஆடிப் பாடி மகிழ்கின்றோம்.

இருந்தாலும் அதனின் உணர்வின் வேகம் கொண்டு பக்தியில் முருகா… முருகா… முருகா… என்று “அவன் செய்வான்…” என்ற நம்பிக்கையுடன் இருந்து உணர்வின் தன்மை நமக்குள் பேயாக்கி… இந்த ஆசை கூடி… உடலை விட்டுச் சென்ற பின் அதே உணர்வின் தன்மை கொண்டு அடுத்த உடலுக்குள் சென்று… ஆசையின் நிலைகள் பேயாகத் தான் ஆக்க முடியும்… அடுத்த உடலுக்குள் சென்ற பின் ஆசை தான் வளர்கிறது… ஆறாவது அறிவு சூனியமாகிறது.

காவடி ஆடுபவர்கள் உடலை விட்டுப் இறந்த பின் எங்கே செல்கிறார்கள்…? முருகன் மீது பக்தியாக இருந்து அடுத்தவர்கள் காவடி எடுத்தால் போதும்.. அந்த ஆன்மா புகுந்து தன்னாலேயே ஆடத் தொடங்கும்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் ஆறாவது அறிவு கொண்டு அருள் உணர்வை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அதற்குத் தான் இதை உங்களுக்குள் விளக்க உரையாகக் கொடுப்பது.