ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2022

அகஸ்தியர் உணர்வையும் குருநாதர் உணர்வையும் கலந்தே நாம் தியானிக்க வேண்டும்

 

நமது உயிர் ஓ... என்று இயங்கிக் கொண்டே உள்ளது நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

நம் உயிர் ஓ என்று இயக்கி ம்... என்று உடலாக்கப்படும் போது உடலில் உருவான அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது.

1.நம் குருநாதர் அவர் உயிரிலே உருவாக்கிய உணர்வின் தன்மையை
2.இந்த மனித வாழ்க்கையை வென்று என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அவர் சக்தியை
3.நமது குருவை எண்ணி அதை ஏங்கிப் பெறும் பொழுது
4.நம் உயிர் அணுவின் கருவாக அதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.நமக்குள் உருவாக்கும் ஈசனாக நம் குரு (குருநாதர்) வருகின்றது (வருகின்றார்).
6.(அதனால் தான்) ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் அவருக்குப் பெயர் வைத்தார்கள்.

அவர் தனக்குள் வளர்த்த அந்த அருள் சக்தி... அவர் உபதேசித்த உணர்வுகள் நமக்குள் குருவாக இருந்து... அரூப உணர்வை நமக்குள் அது உணர்த்தி... அவர் பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு... அது குருவாக அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை அவர் கண்டுணர்ந்த வழியில்
1.நஞ்சினை வென்றிட்ட அகஸ்தியர் உணர்வினைப் பெற்ற அந்த குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருந்து
2.அவர் தான் நுகர்ந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நாம் கவரும் தன்மை பெற்று
3.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை நாமும் பெறுவோம்.

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...! என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
“நம் உயிரும்...”
“நம் குருவும்...”
இணைந்தே வருகின்றார்கள்.

இந்த இணைவுடன் குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற ஏக்க உணர்வுடன் அகஸ்திய மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

நம் உயிருடன் தொடர்பு கொண்டு குரு காட்டிய அந்த உணர்வின் நிலையை நமக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை இரத்த நாளங்களில் கருவுறச் செய்து அந்த உணர்வின் அலைகள் உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் பெற வேண்டும் என்று ஏக்கத்தைச் செலுத்தி உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியர்... அவர் தான் பெற்ற அந்தச் சக்தியும்
2.நமது குருநாதர்...அவர் தான் பெற்ற அந்த அருள் சக்தியும் கலந்து
3.அதை நீங்கள் நுகரும் பொழுது அரும் பெரும் சக்தியாக
4.புதுப் புது தாவர இனங்களில் மணங்களை... அந்த நஞ்சினை வென்றிடும் அருள் சக்திகளை நுகர்வீர்கள்
5.நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் உங்களிலே உருவாகும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் தகுதியை இப்போது பெறுகின்றீர்கள்.