ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2022

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

 

பற்று கொண்ட நிலையில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் மனைவியுடைய ஆன்மா பிரியப்படும்பொழுது கணவருடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது... கணவனுடைய ஆன்மா பிரியப்படும் போது மனைவியுடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.

1.உடல் பெறும் உணர்வுகள் இரண்டும் கரைக்கப்பட்டு
2.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
3.விண்வெளியில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
4.பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

அதாவது கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா மனைவியின் பால் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனுடைய உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரம் பெற்று விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது துருவ தியானத்தில் இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

உதாரணமாக நெசவு தொழிலில் இருந்த ஒரு குடும்பம் அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரோ ஆஸ்த்மா நோயினால் மிகவும் அவதிப்பட்டார். எளிய குடும்பமாக இருப்பினும் மனைவி மேல் மிகுந்த பற்றின் தன்மையும் குழந்தை மீதும் பற்றும் வருகின்றது.

இருந்தாலும் அந்த நோயினால் உடலில் வேதனை தாங்காது விஷத்தை உணவாக உட்கொண்டு உடலை விட்டு அந்த ஆன்மா பிரிகின்றது. பிரியும் பொழுது தன் மனைவி நினைவாகவே அந்த ஆன்மா சென்றது... மனைவி உடலுக்குள் சென்று விட்டது.

விஷத்தைச் சாப்பிட்ட பின் அவர் எப்படித் துடிதுடித்தாரோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடிதுடிக்கும் நிலை வந்துவிட்டது.

இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழன்று வரப்படும்போது சிறு மூளை பாகம் சென்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி
அதே உணர்வு
அதே சொல்
அதே செயல் என்று
அந்த உடலை இயக்கி அவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. சிறிது நேரம் சுயநினைவு இருக்கும் சில நேரம் இருக்காது. ஆனால் இரண்டு நாட்களாக சுத்தமாகவே நினைவு இழந்து விட்டது என்று என்னிடம் (ஞானகுரு) கொண்டு வந்தார்கள்... தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் நாங்கள் சென்றோம் பணத்தைச் செலவு செய்தோம்... ஒன்றும் ஆகவில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வந்து சொல்கின்றார்கள்.

ஆனால் அந்த அம்மாவிற்குச் சுயநினைவுன் இல்லை. அந்தக் குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் இருங்கள்... என்று சொன்னேன்
1.அந்த அம்மா உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா உயர்ந்த சக்தி பெற வேண்டும்
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மைகள் நீங்க வேண்டும் என்று தியானிக்கும் படி சொன்னேன்.

அதன் வழி அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒரு அரை மணி நேரம் தியானித்தார்கள். அந்த அம்மா சிறிது தெளிவானது.

எழுந்தபின் அந்த அம்மாவையும் இதே போல் சொல்லச் செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்படி சொன்னேன். உடலில் இருந்த அந்த ஆன்மா பரிசுத்தம் அடைந்தது.

பின் நல்ல நிலைகள் ஏற்பட்டுத் தன் குடும்பத்தைப் பேணிக் காக்கும் அளவிலே வந்தது. வாழ்க்கையின் நிறைவில் அந்த அம்மாவும் இறந்தபின்
1.அந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது ஒளிச்சரீரம் பெற்றது

ஆரம்ப நிலையில் யாம் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது 25 வருடங்களுக்கு முன்பு இத்தகைய நிலைகளைச் செயல்படுத்தி வந்தது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எளிதில் விண்ணுக்கு (சப்தரிஷி மண்டலம்) அனுப்ப முடியும்.

குடும்பமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.